Thursday, 29 September 2016


எழுத்து

ஒலிக்கு
உருவம் உண்டெனச் சொல்கிறது
எழுத்து

“அ” எழுதிக்
குறளைத் தொடங்கிய
வள்ளுவனை
வாழ வைப்பதும்
எழுத்துதான்

மொழியைப்
பேசும் ஓவியம் ஆக்கியதும்
அதுதான்

உயிரை
நிராகரித்துவிட்டு
உடல் நடக்க முடியாது

எழுத்தை
நிராகரித்துவிட்டுபு்
புத்தகம் எழுத முடியாது

நெல் தட்டில்
“அ” எழுதித்  தொடங்குகிறது
தமிழர் கல்வி

மொழி சொல்லித் தந்த
தாயை
இறைவி ஆக்கவில்லை நாம்

எழுத்தறிவித்தவரையே
இறைவனாக்கி
அறிவாலயம் கட்டுகிறோம்

காற்றில்
கரைந்து போகும்
பேச்சு

வரலாற்றில்
சாகா வரம்பெறும்
எழுத்து

கடந்த காலத்தைக்
கண்முன் எழுப்புவது
எழுத்து

நிகழ்காலத்தை
எதிர்காலத்துக்கு அஞ்சலிடுவது
எழுத்து

வருங்காலத்தை
வடிவமைக்கப் போவதும்
எழுத்து

நேற்றுவரை
இருவிரல்
எழுத்து

இன்று
பத்துவிரல் எழுத்து
கணினி முன் 

நாளை
எழுத்தாகவே மாறும்
பேச்சொலி

எல்லா தேசங்களையும்
இணைக்க
ஒரு நதி உண்டு
அது
அறிஞர்களின் எழுத்துநதி


- கோ. மன்றவாணன்









நோக்கு

பிய்ந்து போன
பேனர் விரிப்பில்
படுத்துக் கிடக்கிறது ஒருகுடும்பம்
பாதை ஓரத்தில்

தலைவியின்
கிழிந்த உடையில் இருந்து
எட்டிப் பார்க்கின்றன
இளமைத் திமிறல்கள்.

கைநீட்டித் தொடத்
தாவுகிறது
ஒரு காம நோக்கு

பாதையை
ஆக்ரமித்ததாய்க்
தடிகொண்டு விரட்டப் பாயுகிறது
ஒரு காவல் நோக்கு

பாதையே வீடான
பாரதத்து வறுமையை
நவீன கவிதையில் சொல்ல
வார்த்தை தேடுகிறது
ஒரு கவிநோக்கு

ரோட்டோர வாசிகளுக்கு
ஓட்டில்லை
என்பதை அறிந்து
நாய்களைப் பார்ப்பதுபோல் பார்த்து
நகர்ந்து போகிறது
ஒரு அரசியல்வாதி நோக்கு


இரவில்
நகரத்து அழகு
கெட்டுப் போவதாக
நாளிதழ் ஆசிரியர்களுக்கு
நறுக்கென
கடிதம் எழுத மெனக்கிடுகிறது
ஓர் ஓய்வூதியர் நோக்கு

வாழ்வில்லம் தராத
இந்நாட்டை
உயிராய் நேசி என
ஊருக்குச் சொல்லிவிட்டு
வெளிநாடு பறக்கிறது
தேசத் தலைவர்களின் நோக்கு

ஒருநாள்
இந்த நிலைமைக்கெல்லாம்
மாறுதல் உண்டு என
கொடிதூக்கி
கோஷம் எழுப்ப
கூடவே உண்டியல் ஏந்த
கூப்பிடுகிறது ஒரு புரட்சி நோக்கு

அதோ
சாலையில் தூங்கும் பெண்மார்பில்
தன் துப்பட்டாவைப் போர்த்திக்
கடந்து செல்கிறது
அம்மாவின்
கைப்பிடித்து நடந்து வந்த
ஒரு சிறுமியின் நோக்கு

- கோ. மன்றவாணன்

                                           

                



                நூலறுந்த பட்டத்தைக்
                காற்று
                விரட்டி அடித்தது
                அங்கும் இங்கும்.

                அந்தப்
                பட்டத்தின் நிழலாய்
                தரையில் தொடர்ந்தான்
                சிறுவன்.

                பட்டம்
                அலைந்து
                திரிந்து
                மிதந்து
                தளர்ந்து
                மின்கம்ப ஒயர்களில் விழுந்து
                சிக்கிக் கொண்டது.

                கீழே இருந்து
                அலறினான் சிறுவன்
                ஷாக் அடித்து

                                - கோ. மன்றவாணன்



இரக்கம்

பசியோடு சிறுமி
பழத்தை உதிர்த்தது
மரம்

எச்சில் இலைகள்
ஏழைக் குழந்தைகள்
கடந்து சென்றன நாய்கள்

ஆலயத்துள் உண்டியல்
வெளியே பிச்சைத் தட்டுகள்
இரக்க தேசம்

ஈழத்தில்
இரத்த வெள்ளம்
புத்தரின் கண்ணீர்

வடலூரில்
மாட்டிரைச்சிக் கடை
வள்ளலாரின் கண்ணீர்

ஆடை இன்றிக் கிடந்தாள்
அவள்
மலர்ப்போர்வை போர்த்தியது மரம்

தற்கால அகராதியில்
தேடியும் கிடைக்கவில்லை
இரக்கம் என்ற சொல்லை 

அநாதைக் குழந்தைகள் வெளியே
ஆலயத்துள்
பிள்ளைவரம் கேட்கும் பெண்கள்

சாவு வீட்டில்
ஒப்பாரி வைக்கச் சம்பளம்

இரக்கம் மரணம்

எப்படி மறப்பேன்?

அவளின்
நினைவுகளையே
சுவாசித்து
சுவாசித்து
என் உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கும் நான்
எப்படி மறப்பேன்?

அவளின்
முதுகுபின் தொங்கும் தாவணிபோல்
அவளைப்
பின்தொடர்ந்து சென்ற
என் காலத்தை
எப்படி மறப்பேன்?

பாலுக்குள்
கலந்திருக்கும் சர்க்கரைபோல்
பெருங்கூட்டத்தில்
அவள் கரைந்து இருந்தாலும்
என் விழி
அவளை
அதே நொடியில் கண்டறிந்து
ஆனந்தக் கூத்து ஆடியதை
எப்படி மறப்பேன்?

வீட்டைத் தாண்டி
வெண்ணிலா வரும் எனத்
தெருமுனையில்
ஒரு தவச்சாலையையே அமைத்து

நொடிகளை
நூற்றாண்டுகளாக்கி
ஏங்கி நின்ற நேரத்தை
எப்படி மறப்பேன்?

என்
விடைத்தாளில்
அனைத்துப் பக்கங்களிலும்
அவள் பெயரையே எழுதி
வெற்றி இறுமாப்போடு
வெளிவந்த பொழுதை
எப்படி மறப்பேன்?

கணவன் அருகிருக்க
கையில் மகவிருக்க
ஆட்டோவை விட்டு
அவள் இறங்கி வந்து
என்
உலகத்தைப் பல துண்டுகளாக
உடைத்துப் போட்டுப் போனதை
எப்படி மறப்பேன்?

 - கோ. மன்றவாணன்



எல்லைக்கோடு

எல்லைக்கோடுகளில் அதிர்வை
எப்பொழுதும்
ஏற்படுத்திக்கொண்டே செல்கிறது

எந்நொடியிலும் தாக்கத் தயாராக
நீட்டப்பட்டிருக்கும்
நீள்துப்பாக்கிகளின்
நீண்ட ஊர்வலம்

எல்லை தாண்டிப் பறக்கும்
சுதந்திரப்புறா ஒன்று
சொல்லிவிட்டுப் போகிறது
எல்லைக்கோடுகளும்
பிரிவினைக் கோடுகளே….!

பக்கத்து வீட்டுக்குழந்தை
பசியாக இருக்கும் போது
ஜன்னல் வழியாக
இன்னமுது ஊட்டுகிற தாய்மனது
பிரித்தெறியத் துடிக்கிறது
எல்லை வேலிகளை !

அடுத்த வீட்டு மல்லிகை வாசம்
என் வீட்டுப்
பூசை அறைக்குள் !
கற்றுக்கொள்ள வேண்டும்
மல்லிகையிடமிருந்து
எல்லையற்ற வாசத்தை
எல்லையற்ற நேசத்தை! 

எல்லைக்கோடுகளில்
முள்வேலியை நடும்போதே
வலிக்கவில்லையா
ரத்தம் வழியும்
உன் கைகளும்?

ரத்த சகதியில்
நாசங்கள் ஆயின போதும்
தேசங்கள்!

அட
சொந்த தேசத்துக்குள்ளும்
பிரிவினைச் சுவர்கள்

சிறிய மனசுக்குள்
பெரிய திருக்கோவிலைக் கட்டினாராமே
பூசலார் நாயனார்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
எந்நாடும் என்நாடே எம்மக்களும் என்மக்களே”
என்றோர் உலகத்தை
உன் மனதுக்குள் கட்டிப்பார்….

எல்லையற்று விரிந்துபோக வேண்டும் மனது
எல்லைகள் இல்லா உலகம் காண !

- கோ. மன்றவாணன்



வாழ்க்கையின் தூரங்கள்

தொலைதூரத்தில் இருக்கும்
வாழ்க்கையை
நோக்கி
நான்
நடக்க நடக்க

அது
ஓடி ஓடிப் போய்
ஏமாற்றுகிறது என்னை

தொட்டுவிடத்
துடிப்பது என்னமோ
மனம்தான்

தொடவிடாமல்
போக்குக் காட்டுவது என்னமோ
வாழ்க்கைதான்

எத்தனை ஆயுள்களை
இயற்கை கொடுத்தாலும்
வாழ்க்கையின் தூரத்தைக்
கடக்க முடியாது
எவரும்.

இடையில் வந்தோம்
இடையில் செல்வோம்
வாழ்க்கையின் தூரமோ
நீண்டுகொண்டே…
நீண்டுகொண்டே… 

கிட்டே வந்து
மனக்குருவி அலறுகிறது :
“உனக்குப்
பின்னாலும் பிணங்கள்
முன்னாலும் பிணங்கள்
நீ
இப்போதோ
எப்போதோ?”

வாழ்க்கைப் பயணத்தில்
தட்டுத் தடுமாறி நடக்கிறோம்
அணுத்துளி தூரம் மட்டுமே

நரைவந்து
திரைவந்து
மொத்த அனுபவமே
நான்தான் என்று
கர்வப்படுகிறது
ஒவ்வொரு வீட்டிலும்
ஒரு கிழம்!

- கோ. மன்றவாணன்



வயல்வெளியில்

கால் கடுக்காதோ
காவல் பொம்மைக்கு
வயல்வெளியில்

சேற்று நண்டுகள்
சிலுமிஷங்கள்
வயலுக்குக் கிச்சுக்கிச்சு

தானியப் பதுக்கல்
தண்டனையில் இருந்து தப்பும்
எலிகள்

வயல்மண் தயாரித்த
நூடுல்ஸ்
மண்புழுக்கள்

காற்று
தலைகோதி விடுகிறது
நாற்றுகள்

வரப்புகள்
வழக்குகள்
எல்லை தாண்டும் ஆசைகள்

சுற்றிலும்
தென்னை வாழை மரங்கள்
வயல் விசிறிகள் 

இன்றும் போரடிக்கின்றது
இயந்திர யானை
டிராக்டர்

தங்கப்பல் வரிசை காட்டிச்
சிரிக்கின்றன
நெற்கதிர்கள்

மரகதப்புல் சேலையில்
வெட்கப்படும்
நிலமங்கை

நாளை மலரும்
கான்கிரீட் நகர்கள்
இன்றைய வயல்வெளிகள்

வானத்துப் பறவைகள்
முகம்பார்த்துச் செல்கின்றன
வயலில் தேங்கிய நீர்

- கோ. மன்றவாணன்



வானமே எல்லை


நிலவு
கால்பந்து ஆகலாம்
நீ
உதைத்து விளையாட!


விண்மீன்கள் வளர்க்கலாம்
உன்
வீட்டுத் தொட்டியில்!

உன் காதலிக்கு
மேலாடை தைக்கலாம்
மேகத்தைக் கத்தரித்து!

சுற்றுலா செல்லலாம்
கிரகம் விட்டுக்
கிரகம் தாவி!

விண்வீடுகளில்
விளக்கு ஏற்றலாம்
சூரியனில்
நெருப்புத் தொட்டு!

காய்நிரப்பி
பல்லாங்குழி விளையாடலாம்
வான்பள்ளத் தாக்குகளில்! 

தலைமை தாங்கத்
தமிழை அழைக்கலாம்.
வானின் உச்சியில்
மலர்மேடை போட்டு!

குளோனிங் ஆடுபோல
உருவாக்கலாம்
இன்னொரு வானத்தை!

நீ
எதையும் சாதிக்கலாம்
நம்பிக்கையின் கைப்பிடித்துச் சென்று!

நீ
வாழ்வில் உயர
வானமே எல்லை!

     - கோ. மன்றவாணன்






வாக்கு உன் செல்வாக்கு
    
    
o    உன்னைப் பார்த்துத்
            தலைவணங்கும் ராஜ மகுடங்கள்
            தேர்தலின்போது மட்டுமே

o    உன்
            கையில் உள்ள
            வாக்கு வடையைப் பறிக்க-
            ஆசை வார்த்தைகள் பேசி
            ஆடிப் பாடி மயக்கும்
            அரசியல் நரிகள்

o    “நீதான்
            நேரில் வந்த தெய்வம்” என
            உன்னை
            ஊட்டி வார்த்தைகளால் குளிர்வித்து-

            தலைமீது கைகுவித்துக்
            கும்பிடு போடும்
            கோவில் சொத்தை
            கொள்ளை அடித்த
            கும்பல்    

o    இரகசியமாய்
            பணம், பொருட்கள் கொடுத்து
            உன் வாக்கை
            வாங்கிக் கொள்ள
            வலைவிரிக்கும் புனித வேடர்கள்!

o    உன்
            காலில் விழுந்து வணங்கும்
            வெண்சட்டை மிளிரும்
            வெள்ளை பூதங்கள்

            குனிந்து பார்
            உனக்கே தெரியாமல்
            உன் விரல்கள் துண்டிக்கப்பட்டிருக்கும்.

o    “உதவி என்று வருவோர்க்கு
            என் வீட்டுக்கதவு
            எப்போதும் திறந்திருக்கும்”
            என்பார்
            உன் வாக்கை வாங்கும்வரை!

            வெற்றி பெற்றவரின்
            வீட்டு வாசலைப்
            போய்ப் பார்…
            பூட்டிய இரும்புக் கதவும்
            பாய்ந்து துரத்தும் நாய்களும்….

            - கோ. மன்றவாணன்