Thursday, 29 September 2016


வாக்கு உன் செல்வாக்கு
    
    
o    உன்னைப் பார்த்துத்
            தலைவணங்கும் ராஜ மகுடங்கள்
            தேர்தலின்போது மட்டுமே

o    உன்
            கையில் உள்ள
            வாக்கு வடையைப் பறிக்க-
            ஆசை வார்த்தைகள் பேசி
            ஆடிப் பாடி மயக்கும்
            அரசியல் நரிகள்

o    “நீதான்
            நேரில் வந்த தெய்வம்” என
            உன்னை
            ஊட்டி வார்த்தைகளால் குளிர்வித்து-

            தலைமீது கைகுவித்துக்
            கும்பிடு போடும்
            கோவில் சொத்தை
            கொள்ளை அடித்த
            கும்பல்    

o    இரகசியமாய்
            பணம், பொருட்கள் கொடுத்து
            உன் வாக்கை
            வாங்கிக் கொள்ள
            வலைவிரிக்கும் புனித வேடர்கள்!

o    உன்
            காலில் விழுந்து வணங்கும்
            வெண்சட்டை மிளிரும்
            வெள்ளை பூதங்கள்

            குனிந்து பார்
            உனக்கே தெரியாமல்
            உன் விரல்கள் துண்டிக்கப்பட்டிருக்கும்.

o    “உதவி என்று வருவோர்க்கு
            என் வீட்டுக்கதவு
            எப்போதும் திறந்திருக்கும்”
            என்பார்
            உன் வாக்கை வாங்கும்வரை!

            வெற்றி பெற்றவரின்
            வீட்டு வாசலைப்
            போய்ப் பார்…
            பூட்டிய இரும்புக் கதவும்
            பாய்ந்து துரத்தும் நாய்களும்….

            - கோ. மன்றவாணன்



No comments:

Post a Comment