Monday, 30 December 2019

சிரிக்க வைத்தார்... சிந்திக்க வைத்தார்...




சிரிக்க வைத்தார்;
சிந்திக்க வைத்தார்.

கோ. மன்றவாணன்

திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் யாரென்றால் எல்லாருடைய பதிலும் சார்லி சாப்ளின்தான். மொழியின்றிப் பேசி அனைத்துமொழி மக்களையும் ரசிகர்களாக மாற்றியவர் அவர்தான். நூறாண்டுகள் கடந்தாலும் பேசும் படங்கள் பெருகினாலும் அதிநவீனத் தொழிநுட்பங்கள் வந்தபடி இருந்தாலும் இன்றும் உலகின் எந்த மூலையிலாவது யாருடைய வீட்டிலாவது அவரின் படங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
     
வயிற்றுப் பாட்டுக்கு வழியில்லாமல் வாழ்வில் துயரங்களையே சுமந்து வருந்தும் மக்களையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த சீர்திருத்தவாதி அவர்தான். இந்த உலகத்தில் ஏழைகளே அதிகம். அவர்களைச் சிரிக்க வைப்பதுதான் எனது நோக்கம் என்று அவரே பலபேட்டிகளில் சொல்லியுள்ளார்.
     
இன்றைக்கும் அவருடைய படங்கள் திரைக்கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்களாக விளங்குகின்றன. கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, படத்தொகுப்பு, இயக்கம், தயாரிப்பு எனத் திரையிலக்கியத்தின் அத்தனை கோணங்களிலும் புத்திக் கூர்மையுடன் செயலாற்றிப் புதுமைகள் படைத்தார்.
     
பணக்காரர்களைப் பரிகாசம் செய்யும் வகையில் அவருடைய பல படங்களில் காட்சிகள் இருந்தன. இதனால் அமெரிக்க அரசாங்கம் அவரைக் கம்யூனிஸ்ட் எனக் குற்றம் சாட்டிக் கண்காணித்து வந்தது. ஆனால், தான் கம்யூனிஸ்ட் இல்லை என்றும் மனிதநேயன் என்றும் எதிர்க்குரல் கொடுத்தார். பல ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தும் பலகோடி டாலர்கள் சம்பாதித்தும் அவர் தன்னை அமெரிக்கக் குடிமகனாக மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்க அரசுக்குத் தன்செல்வாக்கில் போர்நிதியை அதிகமாகத் திரட்டித் தந்தார். அமெரிக்காவின் உளவு நிறுவனம் சார்லி குறித்துப் பலபக்கங்கள் கொண்ட பல கோப்புகளைப் பராமரித்தது. இதன்விளைவாக 1950களில் அமெரிக்காவில் நுழைய முடியாத நிலைமையும் அவருக்கு ஏற்பட்டது. காலம் மாறியது. சார்லிக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டோம் என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்தார்கள். அதற்குப் பிழையீடாக 1971ல் சிறப்பு ஆஸ்கார் விருதை வழங்கிச் சிறப்பித்தார்கள் என்பது வரலாற்றுத் திருப்பம்.
     
ஹிட்லரை மையமாக வைத்து  ‘தி கிரேட் டிக்டேட்டர்” என்ற படத்தை எடுத்துச் சர்வாதிகாரத்தை எதிர்த்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஹிட்லரும் சார்லியின் அதிதீவிர ரசிகர். அவருடைய படங்களைத் தன் அரண்மனையில் திரையிட்டுப் பார்த்து மனசை ரிலாக்ஸ் செய்து கொள்வது ஹிட்லருக்கு வழக்கம். பல நாடுகளில் இந்தப்படம் தடைசெய்யப்பட்டது என்பதாலே, அதன் அரசியல் வீரியத்தை நாம் அறியலாம். அந்தத் திரைப்படத்தில் ஒரு பூகோளம் வரைந்த பலூனை வைத்துச் சர்வாதிகாரி விளையாடுகிறான். அந்தப் பலூனை மனம்போன போக்கில் தூக்கிப்போட்டுப் பல கோணங்களில் எட்டி உதைக்கிறான். “உலகம் என் காலடியில். நினைக்கும் போதெல்லாம் எட்டி உதைப்பேன்” என்ற சர்வாதிகாரத்தின் கோரத்தன்மையை அந்தக் காட்சியில் வெளிப்படுத்தி இருந்தார். ஹிட்லரும் அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறார்.
     
அன்று உலகத் தலைவர்களாக விளங்கிய ஸ்டாலின், சர்ச்சில் ஆகியோரும் ஹிட்லரைப் போலவே சார்லியின் தீவிர விசிறிகளாக இருந்துள்ளார்கள். காந்தி அடிகளைப் பற்றி நிறைய கேள்விபட்டும் படித்தும் இருக்கிறார் சார்லி. காந்தியின் மீது அவருக்கு மரியாதை ஏற்பட்டது. எனவே இலண்டனில் காந்தியைச் சந்தித்தார். காந்தியோ சார்லியின் ஒரு படத்தைக்கூடப் பார்க்காதவர். அவரிடத்தில் என்ன பேசுவது என்று தவித்தார். இயந்திரங்களின் வருகையால் மனிதர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படுவது குறித்து இருவரும் பேசிக்கொண்டார்கள். நம் ஜவஹர்லால் நேருவும் சார்லியின் தீவிர ரசிகர்தான். நீண்டநெடு நேரம் பேசி மகிழ வேண்டும் என்பதற்காகவே சார்லியுடன் ஒரே காரில் பயணித்திருக்கிறார். இந்திராவும் சார்லியைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறார்.
     
பிற்காலத்தில் இந்தியாவின் கடைசி வைசிராயாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபுவுக்குத் திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற வேண்டும் என்று ஆசை. அவர் சார்லியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அவருடைய ஆசையை நிறைவேற்ற சார்லி படம்எடுத்தார். சில ஆயிரம் அடிகள் எடுத்தபின் அதைத் திரையிட்டுப் பார்த்தார். சார்லிக்குப் பிடிக்கவில்லை. “நீ பிரிட்டீஷ் பேரரசையே ஆளக்கூடும். ஆனால் உன்னால் ஒருபோதும் நடிகனாக முடியாது” என்று மவுண்ட் பேட்டனிடமே சொல்லிப் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்.
     
நடுத்தர வயதான போதும் சார்லி இளமைத்துள்ளலோடே இருந்தார். இது எல்லாருக்கும் வியப்பைத் தந்தது. தான் மறைத்துவந்த இளமையின்  ரகசியத்தைப் பின்னர் தெரிவித்தார். தினமும் யோகாசனம் செய்து வருவதுதான் இளமைக்குக் காரணம் என்றார். அவர்வாழ்ந்த காலத்தில் அமெரிக்கர்களுக்கு யோகாசனம் என்றாலே என்னவென்று தெரியாது. ஆனால் சார்லி அறிந்து வைத்திருந்தார்.
     
ஊமைப்படங்கள் காலம் முடிந்து பேசும் படங்கள் வந்தபோதும், பேச்சற்ற படங்களையே தயாரித்தார்... நடித்தார். உலகில் பல மொழிகள் உள்ளன. அத்தனை மொழியினருக்கும் சார்லியின் படம் அவர்கள் மொழியில் பேசுவது போலவே இருக்கும். ஆங்கிலம் பேசி நடித்தால் பிற மொழியினருக்கு அந்நியமாகிவிடும் என்று நம்பினார். 
     
தன்தாயின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். தாயின் மனநிலை குலைந்ததால் அவரை மனநலக் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளித்தார். சார்லியைப் புகழ்ந்து பேசிய மருத்துவரிடம் அந்தத்தாய், “சார்லி தன்மகன் இல்லை” எனச்சொன்னது பெருஞ்சோகம். சார்லியின் முதல் குழந்தை பிறந்த மூன்றே நாட்களில் இறந்து போனது. அந்தக் குழந்தையை அடக்கம் செய்த இடத்திலேயே தாயையும் அடக்கம் செய்தார். குழந்தை இறந்தபோதும் தாய் மறைந்த போதும் சிரிக்க வைத்த மேதை அழுதது அதிகம்.
     
1977 ஆம் ஆண்டு கிருஸ்துமஸ் நாளில் சார்லி மறைந்தார். கண்ணீர் ததும்பத் ததும்ப மண்ணில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெரிய இடத்துச் சடலங்களைத் திருடிச் சென்று பணம்பறிக்கும் கொள்ளையர்கள் இருந்தனர். அதுபோலவே சார்லியின் உடலையும் திருடிச் சென்றனர். சடலத்தைத் திருப்பித்தரக் கொள்ளையர்கள் அதிகவிலை நிர்ணயம் செய்தனர். காவல் துறையினர் பலநாட்களுக்குப் பிறகு குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சடலத்தைக் கைப்பற்றினர். மீண்டும் கொள்ளை அடிக்காதவாறு ஆழத்தில் அவரது உடல் மறுஅடக்கம் செய்யப்பட்டு உறுதியான கல்லறை கட்டப்பட்டது. 
     
ஆனாலும் கல்லறையில் உள்ளது அவரது உடலல்ல என்றும் “ஒருபேச்சு” உலாவுகிறது.

நன்றி :
தினத்தந்தி, 25-12-2019


பரமசிவனைப் பார்க்கப் போனேன்... பாதியிலே திரும்பி வந்தேன்...


பரமசிவனைப் பார்க்கப் போனேன்
பாதியிலே திரும்பி வந்தேன்

-கோ. மன்றவாணன்

புகழ்பெற்ற கவிஞர் ஒருவரைப் பற்றி இணைய இதழொன்றில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். சில நாட்களிலேயே அந்தக் கட்டுரை இலக்கிய மாத இதழ் ஒன்றில் வேறொரு எழுத்தாளர் பெயரில் வெளியாகி இருந்தது. முதல் பத்தியும் இறுதிப் பத்தியும் அந்த எழுத்தாளர் எழுதிச் சேர்த்துள்ளார். இடையில் என் கட்டுரையை அப்படியே வரி பிசகாமல் வார்த்தை தவறாமல் நகல் எடுத்து இணைத்திருந்தார். புதிதாகத் தட்டச்சிட வேண்டிய அவசியம்கூட அவருக்கு ஏற்படவில்லை. படித்த எனக்குப் பெரிதும் அதிர்ச்சிதான். அந்த இதழாசிரியருக்கு இதுகுறித்து ஆதாரத்துடன் மின்னஞ்சல் அனுப்பினேன். இதழாசிரியரும் அந்த எழுத்தாளருக்குத் தெரிவித்துள்ளார். அதன்பின் அவர், என்னுடன் நட்புறவுள்ள எழுத்தாளர் மூலமாகச் சமாதானம் சொன்னார். இருப்பினும் அந்த இலக்கிய மாத இதழாசிரியர் என் நிலையை அவருடைய இதழில் பதிவு செய்தார். அந்த நேர்மைமிகு இதழாசிரியருக்கு நன்றி.

வாசகர்கள் நிரம்ப உள்ள இதழுக்கு நான் ஒரு கட்டுரையை அனுப்பி இருந்தேன். பத்திகளை முன்பின்னாக அச்சிட்டும்- வரிகளில் வார்த்தைகள் சிலவற்றை மாற்றியும் சேர்த்தும் அக்கட்டுரையை வெளியிட்டு இருந்தனர். என் சொற்றொடர்கள் பலவும் அப்படியே அச்சாகி இருந்தன. அந்தக் கட்டுரையை வேறொருவர் எழுதியதாக வெளியாகி இருந்தது கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அந்தக் கட்டுரைக்குள் நான் எழுதாத சிலவற்றையும் சேர்த்திருந்தனர். சட்டப் பிடிக்குள் சிக்காதவாறு சாமர்த்தியமாகத் திருடுவதாக அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள் போலும்.

த்தகையோர் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பெருமிதம் அடைகிறார்கள். இவர்களை எழுத்தாளர்கள் என்று சொல்வதைவிட “எடுத்தாளர்கள்” என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் யாவும் பொதுவானவை. யாரும் பயன்படுத்தலாம் என்று வாதிடக் கூடும். நான் மறுக்கவில்லை. ஆனால் தகவல்களைக் கொண்டு தங்கள் சொந்தச் சிந்தனையில் இருந்து கட்டுரையை எழுத வேண்டும். தங்களின் சொந்தச் சொற்றொடர்களைக் கொண்டு கருத்துகளை விவரிக்க வேண்டும். ஆனால் இத்தகைய எடுத்தாளர்கள் வெட்டு ஒட்டு முறையில் அடுத்தவர்களின் கட்டுரையையே தமதாக்கிக் கொள்கிறார்கள். பிறரின் அறிவுழைப்பைக் களவாடிக்கொண்டு “அசல் அறிஞர்களாகக்” காட்சி தருகிறார்கள்.
     
ஒரே சிந்தனை இருவருக்கு எழலாம் என்று வாதிடுவோர் உண்டு. அதையும் நான் மறுக்கவில்லை. ஒரே சிந்தனை என்றாலும் வெளிப்படுத்தலில் இருவருக்குள் வேறுபாடு இருக்கவே செய்யும். அப்படியும் வேறுபாடு இல்லை என்றால், அது அரிதினும் அரிதானதாகவே இருக்கும். ஆனால் ஒரே சிந்தனை இருவருக்கும் எழலாம் என்பதைத் தப்பிக்கும் பாதையாகக் கொண்டு அடுத்தவர்களின் சிந்தனைகளைக் கொள்ளையடிப்பதை ஏற்க இயலாது. பிறரின் எழுத்துகளை அப்படியே பயன்படுத்துவோர், ஏன் அந்த எழுத்தாளர்களின் பெயர்களை மறைக்க வேண்டும்?
     
நான் 15 வயது சிறுவனாக இருந்த காலத்தில் எங்களூரில் தமிழ்மன்றத்தில் செயலாளராக இருந்தேன். அங்குள்ள குமரக்கோவில் மண்டபத்தில்தான் இலக்கிய விழாக்களை நடத்துவோம். அதில் கிருபானந்த வாரியார்கூட வந்து பேசி இருக்கிறார். எங்கள் அமைப்பின் சார்பில்  ஒருநாள் மாலை வேளையில் கவியரங்கமும் பட்டிமன்றமும் நடத்தினோம். கவியரங்கத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்க ஒரு பெருங்கவிஞரை அழைத்திருந்தோம். அவரோ மாவட்டத்தில் உள்ள எல்லாக் கவிஞர்களுக்கும் தலைவர். அரசு ஆசிரியரும்கூட. பழகுவதற்கு இனியவர். அவரை நானும் பிற நண்பர்களும் பேருந்து நிறுத்தத்திலிருந்து விழா நடக்கும் கோவிலுக்கு அழைத்து வந்தோம். வரும்போது அவர், ”இன்று பள்ளியில் நிறைய வேலை. பேருந்தில் பயணித்தபடியே கவியரங்கக் கவிதையை எழுதி வந்துள்ளேன்” என்று எங்களிடத்தில் அவராகவே சொன்னார்.

கவியரங்கம் தொடங்கியது. நான் முன்வரிசையில் உட்கார்ந்து இருந்தேன். அப்போதெல்லாம் நாற்காலிகள் போடுவதில்லை. எல்லாரும் தரை டிக்கெட்டுகள்தாம். அவர், தலைமைக் கவிதையை வாசித்தார். அந்தக் கவிதை எனக்கு முன்னரே அறிமுகம் ஆகி இருந்தது. எண்சீர் விருத்தங்களில் அமைந்த கவிதையை அவர் படிக்கும் போது, அடுத்தடுத்த வரிகளை அவர் சொல்வதற்குமுன் நான் அருகில் இருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டே வந்தேன். கோவிலுக்கு எதிரே உள்ள சிவலிங்க முதலித் தெருவில்தான் எங்கள்  வீடு. உடனே ஓடிச்சென்று அந்தக் கவிதை வெளியான இதழை எடுத்துவந்து அங்கிருந்தவர்களிடம் காட்டினேன். தெசிணியை ஆசிரியராகக் கொண்ட “கவிதை” இதழில் சப்தங்கள் என்ற தலைப்பில் துறவி என்பவர் எழுதிய கவிதைதான் அது. அந்தக் காலகட்டத்தில் கவிதை இதழ், நாளிதழ் போன்ற தோற்றத்தில் வெளியாகி வந்தது. பிற்காலத்தில் புத்தக வடிவில் வந்தது. தலையங்கம் முதல் அனைத்தும் கவிதையிலேயே இருக்கும். அந்தக் கவிதை ஏட்டில் கவிஞர் வைரமுத்து அவர்களும் பல கவிதைகளை எழுதி இருக்கிறார். கவியரங்கத்துக்குப் பிறகு நடந்த பட்டிமன்றத்தின் நடுவரிடமும் அந்தக் கவிதையைக் காட்டினேன். கவிஞர்களுக்குக் கர்வம் இருக்கலாம். கள்ளத்தனம் இருக்கலாமா என்றேன்.
     
அந்தக் கவிஞரை யாரும் எதிர்த்துக் கேட்கவில்லை. அடுத்த நாள் எங்கள் அமைப்பின் துணைத்தலைவர் என்னை அருகில் உள்ள ஊருக்கு அழைத்துச் சென்றார். எதற்காக என்று என்னிடம் சொல்லவில்லை. அங்குள்ள பள்ளியில் அந்தக் கவிஞர் இருந்தார். திடுதிப்பென்று என்னை அலாக்காகத் தூக்கி அவர் காலில் போட்டு மன்னிப்புக் கேட்கச் சொன்னார்.
     
அய்யோ பாவம்... யார், யாரிடத்தில் மன்னிப்புக் கேட்பது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ழுபதுகளில் குமுதம் இதழில் வாரம் ஒரு கவிதையென்று கண்ணதாசன் எழுதி வந்தார். அத்தனைக் கவிதைகளும் அற்புதமான கவிதைகள். படித்துப் படித்து... ரசித்து ரசித்து எனக்குள் தாமாகவே அந்தக் கவிதைகள் மனப்பாடம் ஆகிவிட்டன. குமுதத்தில் வெளியான அந்தக் கவிதைகள் யாவும் கண்ணதாசனின் ஐந்தாம் கவிதைத் தொகுப்பில் உள்ளன. அதே கால கட்டத்தில் ஆனந்த விகடன் வார இதழில் வாரம் ஒரு கவிஞர் என்ற முறையில் கவிதையை வெளியிட முடிவு செய்தார்கள். அதன்படி நான்கைந்து வாரங்கள் கவிதைகள் வெளியாகின. அனைத்தும் நல்ல கவிதைகள்தாம். அந்த வரிசையில் ஓர் அருமையான கவிதை வெளியானது. அதை எழுதிய கவிஞரின் படமும் அச்சாகி இருந்தது. நானும் அந்தக் கவிதையைப் படித்தேன். “அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்” எனத்தொடங்கும் அந்தக் கவிதை, கண்ணதாசன் எழுதிக் குமுதத்தில் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அதைத் திருடி ஆனந்தவிகடனுக்கு அனுப்பி விட்டார் அந்தக் கவிஞர். புகழ்பெற்ற கவிஞரின் பாடலைத் திருடினால் அகப்பட்டுக்கொள்வோம் என்று அந்தக் கவிஞருக்குத் தெரியவில்லை. ஆனானப்பட்ட ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவிற்கும் அந்தத் திருட்டுத் தெரிந்திருக்கவில்லை. அடுத்த வாரத்தில் கவிதை வெளியாகும் பக்கத்தில் ஓர் அறிவிப்பு இருந்தது. “சென்ற வாரம் வந்த கவிதையைக் கண்ணதாசன் எழுதியதாக வாசகர்கள் பலரும் தெரிவித்திருந்தனர். கவிஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவிதையை வெளியிட்டு வந்தோம். கவிஞர்கள் நாணயமுள்ளவர்களாக நடந்துகொள்ளவில்லை என்பதால் இப்பகுதி நிறுத்தப்படுகிறது” என்று அறிவித்துவிட்டார்கள். (இப்பொருள்கள் கொண்ட ஆனந்தவிகடன் வரிகளில் எழுதி இருந்தார்கள்)
     
ள்ளிகளில் கல்லூரிகளில் கவிதைப் போட்டிகள் நடத்துகிறார்கள் என்றால் என்னிடத்தில் தலைப்புச் சொல்லிக் கவிதை எழுதித் தருமாறு கேட்கும் பெற்றோர்கள் இன்னமும் இருக்கிறார்கள். யாரோ எழுதிக் கொடுத்த கவிதைகளையே போட்டிகளில் சமர்ப்பித்துப் பரிசு வாங்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். இது காலங் காலமாய் நடந்து வருகிறது.
     
இப்படி எழுத்துகளைத் திருடுபவர்களைப் பற்றி முறையிட எங்களூர் சிவன் கோவிலுக்குச் சென்றேன். அவர்தான் முதன்முதலில் கவிதையைத் தருமிக்குக் கொடுத்துக் கவிதைத் திருட்டை ஊக்குவித்தவர் என்று தெரிந்து பாதி வழியில் திரும்பிவிட்டேன்.

நன்றி : திண்ணை

Wednesday, 11 December 2019

அப்பாவின் நாற்காலி




















அப்பா இருந்தவரை
அந்த நாற்காலிக்குக் கூட
அஞ்சி நடந்தோம் நாங்கள்.

காலொடிந்தும்
கையொன்று உடைந்தும்
பரணில் கிடக்கிறது அது.

இன்று
எங்கள் வீட்டுக் கூடத்தை
சோபா  அடைத்துக்கொண்டது

நாங்கள் வளர்க்கும் நாயொன்று
எப்பொழுதும்
உட்கார்ந்தும்
உறங்கியும் கொண்டிருக்கிறது
அந்த சோபாவில்தான். 

-கோ. மன்றவாணன்

மெளனச் சிறை




















ஊமையாகி
உள்ளுக்குள் குமறுகின்றன
சொல்ல வந்த நியாயங்கள்.

அகம் உலாவும் மர்மத்தை
முகம் காட்டிக்கொடுக்கும்
என்பதால்
சிரித்து நடிக்கவே
செலவிடுகிறேன் நேரத்தை.

ஒவ்வொரு நொடியும்
சீண்டிவிட்டுப் போகின்றன
குறுக்கும் நெடுக்குமாய்க்
கோர வவ்வால்கள்

மெளனம் உடைக்கவே
மொழிகள் முயல்கின்றன
தோற்றுத்தாம் போவோம் எனத்தெரிந்தே... 

-கோ. மன்றவாணன்

Friday, 29 November 2019

தூரத்து உறவுகள்















வெகுதூரத்தில் இருந்தாலும்
ஒவ்வோர் இரவிலும் கதைசொல்லி
என்னை உறங்க வைக்கிறது நிலா

ஆற்றோர நந்தவனத்தில் இருந்தபடி
மலர்கள் எனக்குப் பரிசனுப்புகின்றன
மணத்தை

நிலத்தின் மறுமுனையில் இருந்தாலும்
நித்தமும் வருகிறது
தோழியின் அழைப்பொலி

சிம்லாவில் விளைந்த ஆப்பிள்
என்வீட்டு
ஊண்மேடையில்

உலகின் எல்லா பாகங்களில் இருந்தும்
வந்து குவிகின்றன நட்பஞ்சல்கள்
என்வீட்டுக் கணினியில்

தூரங்கள்
பிரித்துவிடாது
உறவுகளை...

-கோ. மன்றவாணன்


Wednesday, 13 November 2019

பெண்ணென்று சொல்வேன்
















உயிரூட்டும்
ஒவ்வொரு நதியின் பெயர்கேள்...
அலையேறி வந்து
கரையின் காதுகளுக்குச் சொல்லிப் போகும்
பெண்பெயர்களையே.

கனவையும் கற்பனையையும் கவிதையையும்
கலந்து பிசைந்து ஊட்டும்
நிலவின் பெயர்கேள்...
முகில்துணி விரித்து
மூடிக்கொள்வாள் முகத்தை...
அழகி என்றுரைத்து.

அன்பு
அருள்
மன்னித்தல்
வயிற்றுக்குச் சோறிடல்
இந்தச் சொற்களுக்குரிய பால்
எதுவெனக் கேள்...
பெண்பால் எனக்கூறும் வாழ்விலக்கணம்.

வீட்டு
விளக்கு ஒவ்வொன்றும்
ஒளியால் எழுதுகிறது
பெண்ணுக்கு வாழ்த்துப்பா

கோயில் கருவறை
தாயின் கருவறை
எது உயர்ந்தது என்று என்னிடம் கேள்...
பெண்ணென்று சொல்வேன்.       

-கோ. மன்றவாணன்

Wednesday, 6 November 2019

இந்த நாள் இனிய நாள்

















விபத்தில் கால்நசுங்கி
நகர முடியாத
நாய்க்குச் சோறளித்தேன்

தட்டித் தட்டிக்
கம்புக்கண் கொண்டு நடந்தவரைச்
சாலையின் மறுபக்கம் கொண்டுசேர்த்தேன்

ஆலயத்தின்
அன்னதான திட்டத்துக்கு
ஆயிரம் ரூபாய் நிதியளித்தேன்

தெருவோர
ஏழைச் சிறுமிக்குப்
புத்தாடை வாங்கித் தந்தேன்

எனினும்
இந்த நாள்களெல்லாம்
இனிய நாள்களாகுமா.....

விடுதியில் விட்டிருந்த அம்மாவை
வீட்டுக்கு அழைத்துவந்த
இந்த நாளைக் கொண்டாடுகையில்!

கோ. மன்றவாணன்

Friday, 1 November 2019

பின்வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்...


    






பின் வரிசையில்
எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்.

கோ. மன்றவாணன்


பாழடைந்த நூலகக் கட்டடங்களில் பள்ளிக்கூடக் கொட்டகைகளில், யாருடைய மாடியிலோ இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும் என்பது   காலங்காலமாய் இருந்துவந்த நிலைமை. அன்று இலக்கியம் பேசியவர்கள் ஏழைகளாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவில் செலவு குறைவாகவும் சீர்மை நிறைவாகவும் நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார்கள். தம் கைப்பணத்தைச் செலவழித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் நன்றிக்குரியவர்கள்தாம். அவர்கள்தாமே இலக்கியத்தையும் தமிழையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு வழங்கியவர்கள்.

இப்போது இலக்கிய விழாக்கள் மிகுபொருள் செலவில் நடத்தப்படுகின்றன. இவற்றிலும் நூல் வெளியீட்டு விழாக்களுக்குக் கூடுதல் கவுரவம். இருப்பினும் எளிமையாக விழா நடத்தும் அமைப்புகளே தொடர்ந்து இயங்குகின்றன.

சரியோ... தவறோ... தற்காலத்தில் நூல் வெளியீட்டு விழாக்கள் செல்வச் செழிப்போடு நிகழ்கின்றன. நவ நாகரிகமாக வடிவமைக்கப்பட்ட உணவகங்களில்- குளிரும் கூடங்களில் நூற்புகழ் பேசப்படுகிறது. மிகச்சில நவீன இலக்கியச் சந்திப்புகளில் கோப்பைகள் மலர்ந்து வழிகின்றனவாம். இதுவும் இலக்கிய வளர்ச்சிதானோ?

புகழ்பெற்ற சில எழுத்தாளர்களைத் தவிர, புத்தகங்களை விற்றுப் பணம்சேர்க்க வேண்டும் என்று எந்த எழுத்தாளரும் நினைப்பதில்லை. அட்டை வடிவமைப்புக்கும் அழகான அச்சிடலுக்கும் அதிகம் பணம்செலவிட அவர்கள் தயங்குவதில்லை. புத்தக அச்சீட்டுக்கு ஆகும் செலவைவிடப் பன்மடங்கு செலவில் வெளியீட்டு விழாவை நடத்துகிறார்கள். இவ்விழாக்கள் புகழுக்காகவா புத்தகத்துக்காகவா என்று புரியாமல் போய்விடுகின்றன.

புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஆகும் செலவில் பத்துவகை புத்தகங்கள் அச்சிடலாம் என்கிறார் பதிப்பக நண்பர். விழாச்செலவைத் தவிர்த்துப் புத்தகங்களையே அன்பளிப்பாக அள்ளித் தந்துவிடலாம் என்கிறார் இன்னொரு நண்பர். ஆடம்பரத் திருமணமும் ஆடம்பர நூல்வெளியீட்டு விழாவும் தற்கவுரவம் காட்டத்தான் என்கிறார் மற்றொரு தோழர். “பணம் படைத்தவர்கள் விழா கொண்டாடுகிறார்கள். உனக்கு ஏன் பற்றி எரிகிறது” என்று என்னை நான் கேட்டுக்கொண்டேன்.

கவிஞர் ஒருவரின் கவிதைநூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பரவலாகப் புகழ்வாய்ந்த எழுத்தாளர் ஒருவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். விழாவுக்குப் பத்து நாள்கள் முன்பே புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார்களாம். ஆனால் அவரோ புத்தகத்தைப் படிக்கவே இல்லை போலும். புத்தகத்தைப் பற்றிப் பேசவும் இல்லை. நூலாசிரியரைப் போற்றவும் இல்லை. அந்த எழுத்தாளர் தம் புத்தகங்களைப் பற்றியும் தம் பெருமைகளைப் பற்றியும் பேசிவிட்டுச் சென்றார். அவ்வாறு பேசியதற்காக அந்தப் பெருந்தகை பெற்றதோ பெருந்தொகை.

புத்தக வெளியீட்டு விழாக்களில் பொன்னாடை போர்த்துகிறார்கள். பொன்னாடைக்குப் பதிலாகப் புத்தகங்கள் வழங்கினால் என்ன என்று பலரைக் கேட்டிருக்கிறேன். பொன்னாடையைப் போர்த்தியபடி போட்டோவுக்குப் புன்னகைத்தால்தான் கவுரவம் என்று கருதிக்கொள்கிறார்கள். அந்தப் பொன்னாடைகள் பயன்படுத்தத் தோதானவை அல்ல. அவற்றை மடித்து வைத்து, மற்றொருவருக்குப் போர்த்துகின்றனர் என்பது இலக்கிய உலகில் சர்வ சாதாரணமப்பா.  தனக்குப் போர்த்திய பொன்னாடை எத்தனைத் தோள்மாறி வந்தது என்று எந்தப் பெருமகனாலும் கணிக்க முடியாது. சூடிய பூ சூடற்க என்பதுபோல், போர்த்திய சால்வை போர்த்தற்க என்றொரு புதுமொழி இனி உலவலாம்.
     
மதிப்புணர்வின் அடையாளமாக மனங்கவர்ந்த புத்தகங்களை வழங்குவதுதான் நூல்வெளியீட்டு விழாவுக்குப் பெருமை சேர்ப்பதாகும். புத்தக வெளியீட்டு விழாவிலேயே நூல் வழங்கும் வழக்கம் வரவில்லை என்றால் பொதுவிழாக்களில் யார் நூல்வழங்கிச் சிறப்பிப்பார்கள்?
  
திருமண விழாக்களில் மொய்வைப்பது போலவே புத்தக வெளியீட்டு விழாக்களில் எழுத்தாளர்களின் தீவிர நண்பர்கள் சிலர் பணம்கொடுத்து நூல் வாங்குவார்கள். ஆனால் அவர்கள் அதைப் படிக்க மாட்டார்கள் என்பது பரவலாகிவிட்ட புதுப்பழக்கம். நூல் வெளியீட்டு விழாவுக்கு வரும் பிரமுகர்கள், நானூறு ரூபாய்க்கு பொன்னாடை வாங்கிவந்து போர்த்திவிட்டு, நூறு ரூபாய் கொடுத்து நூல்வாங்காமல் போய்விடுகிறார்கள்.
     
பொதுநூலகத் துறை பொதுவாகப் புத்தகங்களை வாங்குவதில்லை என்ற முறையீடு இருந்தாலும், கண்டிப்பாகக் கவிதைப் புத்தகங்களை வாங்குவதில்லை. தேநீர் குடிக்கும் நேரப் பொழுதில் கவிதை நூல்களைப் படித்து முடித்துவிட முடிகிறது. பத்துப் பதினைந்து நிமிடப் பேருந்து பயணத்தில் கவிதைகளைப் புரட்டிப்போட்டுவிட முடிகிறது. நானும் கவிதை நூல்களை வாங்குவதில்லை. புத்தகச் சந்தையில் புத்தகம் வாங்குவதுபோல் நடித்துவிட்டு, அங்குள்ள கவிதைப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்துவிட்டு வந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. சில பதிப்பாளர்கள், கண்ணாடித் தாளில் புத்தகத்தைப் பொதிந்து வைத்துவிடுகிறார்கள். பணம் கொடுத்தால்தான் இந்த மாதிரியான புத்தகங்கள் திறக்கும். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்பது புத்தகக் கடைக்காரர்களுக்கு மிகவும் பொருந்தும். இதனாலோ எதனாலோ கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்தும் தீராததால் வற்புறுத்தித் திணிக்கிறார்கள் நம் கவிஞர்கள்.
     
அச்சகத்தில் இருந்து வந்த புத்தகக் கட்டுகளை வீட்டில் வைக்க இடமில்லாமலும்- விற்காத புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருக்க மனம் பொறுக்காமலும்- அப்படியே தூக்கிச் சென்று எடைக்குப் போட்ட அவல நிகழ்வுகளைக் கேள்விபட்டிருக்கிறேன்.
     
கவிதைநூல் அறிமுகங்களைத் தம் நண்பர்கள் மூலம் பிற ஊர்களில் நடத்தச் செய்கிறார்கள்.  அதற்கு மறுபயனாக அந்த நண்பர்களின் நூல்களுக்குத் தங்கள் ஊர்களில் அறிமுக நிகழ்வுகள் நடத்துகிறார்கள். பண்டமாற்று முறைபோல் இவ்விழாக்கள் நடக்கின்றன. என் பெருமையை நீ பேசினால் உன் பெருமையை நான் பேசுகிறேன் என்று ஒப்பந்தம் போட்டதுபோல் இத்தகைய விழாக்கள் உள்ளன. எனினும் இதன்மூலமும் இலக்கியம் பேசப்படுகிறது; தமிழ் உயர்த்தப்படுகிறது என்பதில் எல்லையிலாத மகிழ்ச்சி.
     
சிறப்பான நூல்களை எழுதிவைத்தும், வெளியிட வசதி வாய்ப்பற்ற தரமான ஒன்றிரண்டு எழுத்தாளர்கள், இதுபோன்ற விழாக்களில் பின்வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்.

திண்ணை 27-10-2019






Wednesday, 30 October 2019

தீபம்
















எந்த
இருட்டுக்குள்ளும்
தீபம் ஏற்றி வைப்பவர்களையே
திசைகள் வரவேற்கும்

ஏற்றி வைப்பதோடு
எதுவும் முடிந்துவிடுவதில்லை

திரியை
உயர்த்திக்கொண்டே இரு

நெய்யிட்டவாறு
நீ இரு

காற்று
ஊதி அணைக்கலாம்
கவசம் அமைத்துக்
காவல் காத்திரு

இருளை
ஓடி ஓடி விரட்டுகிறது
ஒற்றை மின்மினிப் பூச்சி

கோடி கோடி மின்மினிகளின்
கூட்டம் நீ

கோ. மன்றவாணன்

Friday, 25 October 2019

யார் மனிதன்?

யார் மனிதன்?

மனிதன் யாரெனக்
கண்டறியும் கருவியொன்று இல்லையெனக்
கவலையுறுகிறான் கடவுளும்.

சிறப்பு தரிசனத்தில்
சிலை அருகில் வருபர்களை
உற்றுப் பார்த்த அவன்
உதட்டைப் பிதுக்கவும் அஞ்சுகிறான்.

கடவுளே தானெனச் சொல்லி
உண்டியலை நிரப்பிக்கொள்கிறவர்களை
ஓரமாக நின்று பார்த்து
ஒருமுறை தன்னைச் சோதித்துக்கொள்கிறான்.

அனைத்துக்கும் ஆசைப்படு என்ற
அருளுரைக்குப்
பொருளுரை எழுதுவோரின்
பூசை அறைக்குள்ளிருந்து தப்பியோடத் துடிக்கிறான்.

கீழிறங்கி வந்து தேடி அலைந்தபின்
ஒப்புக்கொள்கிறான்
“மனிதனை
இன்னும் நான் படைக்கவில்லை” என்று!


-கோ. மன்றவாணன்
























Friday, 18 October 2019

மனம் வருந்துவதா? மன்னிப்புக் கேட்பதா?
















மனம் வருந்துவதா...?
மன்னிப்புக் கேட்பதா...?

-கோ. மன்றவாணன்-

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் கடவுள்கூட இல்லை என்பதுதான் உலகம் முழுவதும் தொன்றுதொட்டுவரும் கருத்துரிமை நிலை. ஆனாலும் கருத்துரைப்பதில் நனிநாகரிகம் மிளிர வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற மனப்பான்மை இருந்தால்தான் மற்றவரை மதித்து உறவாட முடியும்.

தவறான கருத்துரைத்த ஒருவர், எதிர்ப்புகள் வரும்போது “அதற்காக வருந்துகிறேன்” “என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றெல்லாம் சொல்கின்றனர். வருத்தம் தெரிவிப்பது எங்களுக்குத் தேவையில்லை. மன்னிப்புத்தான் கேட்க வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் வற்புறுத்துகிறார்கள். மன்னிப்புக் கேட்பதா வருந்துவதா என்றால்... இந்த இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல் உரை எழுதுகின்றனர் சிலர். இரண்டும் ஒன்றல்ல என்றும் வேறுவேறு என்றும் விரிவுரை எழுதுகின்றனர் சிலர்.

பொதுவாக மன்னிப்புக் கேட்பது என்பது அவமானக்குறியாகக் கருதப்படுகிறது. அதனால்தான் பலரும் மன்னிப்புக் கேட்க விரும்புவதில்லை. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வரும்போது, “வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று சொல்லி, மீசையில் மண்ணொட்டவில்லை என்று மிகுமகிழ்ச்சி அடைகிறார்கள்.

மன்னிப்பு என்பது கேட்டுப் பெறுவதாக இருக்கக் கூடாது. மன்னிப்புக் கேட்க  வேண்டும் என்று வற்புறுத்துவதும் போராட்டம் நடத்துவதும், தவறு செய்தவர்களைத் திருத்தாது. தங்கள் கால்களில் விழவைத்து அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்மைதான் அதில் ஓங்கி நிற்கும்.   மன்னிப்புக் கேட்டால்தான் மன்னிப்பேன் என்பது, அதிகாரத் திமிராகவே ஆணவப் போக்காகவே பார்க்கப்படும். தவறு செய்தவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எந்த அருளாளரும் அறிவுறுத்தவில்லை. அப்படியே மன்னிப்புக் கேட்பதாக இருந்தாலும்... அது, தவறுகளை உணர்ந்து, வருந்தி, யாருடைய வற்புறுத்தலுமின்றி நிகழ வேண்டும்.

மன்னிக்கும் பண்பு நம் உயிரோடு ஒட்டி இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் மன்னிக்கிறவர்கள்தாம் கடவுளின் பிரதிபலிப்புகள். கூலி கேட்டுக் கொடுப்பதாக மன்னிப்பு இருக்க முடியாது.

ஒருவரை மன்னிக்க வேண்டுமானால் அதற்குமுன் அவரிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். அன்பின் நீட்சிதான் அருள்பொழிவு. அன்பு அற்ற மனம் யாரையும் மன்னிக்காது.

தவறு செய்தவர்களைத் தாக்க நினைப்பதைவிட... உண்மை எதுவென உணரும் வாய்ப்புகளை, திருந்தும் வாய்ப்புகளை அவர்களுக்குத் தரவேண்டும்.

தவறு செய்தவர்களுக்குத் தண்டனைதான் தரவேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறீர்களா? அவர்களை எப்படித் தண்டிக்க வேண்டும் என்பதை வள்ளுவர் சொல்கிறார். தவறு செய்தவர்களே நாணும் அளவுக்கு அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் செய்த தீமையையும், தாம் செய்த நன்மையையும் மறந்துவிட வேண்டும். இதுவே தண்டிக்கும் முறையாகும். இதை உணர்த்தும் இனிய குறள் இதுதான்.   

      இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
      நன்னயம் செய்து விடல். 

ஒருவரை ஒருதடவை மன்னிக்கலாம். இருதடவைகூட மன்னிக்கலாம். திரும்பத் திரும்ப மன்னித்துக்கொண்டே இருப்பதா என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்காக இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஒருகதை.

முனிவர் ஒருவர் குளக்கரையில் அமர்ந்திருக்கிறார். ஒருதேள் அவரைக் கொட்டுகிறது. அதைப்பிடித்து அருகில் விடுகிறார். திரும்பவும் அந்தத் தேள் அவரைக் கொட்டுகிறது. அப்போதும் அவர் அதைப்பிடித்து அருகில் விடுகிறார். திரும்பத் திரும்ப அந்தத் தேள் அவரைக் கொட்டுகிறது. அவரும் திரும்பத் திரும்ப அந்தத் தேளைப் பிடித்து அருகில் விடுகிறார். அப்போது அருகில் இருந்த சீடர் கேட்கிறார். அந்தத் தேள் முதலில் கொட்டிய போதே அதை அடித்திருந்தால் தங்களை இவ்வாறு பலதடவை கொட்டி இருக்காதே என்கிறார். அதற்கு அந்த முனிவர் சொல்கிறார். கொட்டுவது தேளின் குணம். அதை மன்னித்துக் காப்பாற்றுவது எனது குணம். இப்படித்தான் அருளாளர்களின் குணம் இருக்கும். ஆக எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். அந்தத் தேள் வேண்டுமானால் திருந்தாமல் இருக்கலாம். ஒருநாள், தவறு செய்தவர்கள் வெட்கப்பட்டுத் திருந்தும் வாய்ப்புகள் உண்டு.

பேசிய கருத்திலிருந்து பின்வாங்காமலே வாய்ச்சொற்களால் மன்னிப்புக் கேட்டுவிடலாம். அதனால் என்ன மெய்ப்பயன்? வருந்துவது என்பது அதிலிருந்து வேறுபட்டது. மனம் சம்பந்தப்பட்டது.
     
      கவிஞர் வாலி எழுதினார்.
      தவறு செய்தவன் திருந்தி ஆகணும்
      தப்புச் செய்தவன் வருந்தி ஆகணும்.


ஒரு தப்புக்காக மன்னிப்புக் கோருவதைவிட, மனம்வருந்துவதுதான் உள்ளார்ந்தது.

மன்னிப்புக் கேட்டால் யாராவது “மன்னித்தேன்” என்று சொல்கிறார்களா? இல்லையே! அப்போது அவர்கள் அகம்பாவமாக வெற்றி மிதப்பில்தான் திளைக்கிறார்கள். தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்கிறார்கள். நம் மக்களுக்கு மன்னிக்கத் தெரியவில்லை. மன்னிக்கத் தெரிந்தவர்கள் மனிதர்களுள் புனிதர்கள்.  அதனால்தான் “மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோவிலடா” என்று கண்ணதாசன் சொன்னார்.

வருந்துகிறேன் என்று வாயளவில் சொல்லி, எதிரிகளின் வாயடைக்கும் உத்தியைக் கையாளவும் வாய்ப்புண்டு.  அப்படி இருந்தால் அதுவும் தப்புதான். வருந்துகிறேன் என்பதில் உள்ளபடியே மனம்வருந்த வேண்டும். உதட்டு வார்த்தைகள் ஊரை ஏமாற்ற உதவலாம். உள்ளத்தின் வார்த்தைகள்தாம் உலகையும் உங்களையும் உயர்த்தும்.

மன்னிப்புக் கேட்பதால் ஒருவரின் கோபத்தில் இருந்து சற்று மீளலாம். தண்டனையிலிருந்து தப்பலாம். அவரால் காரியம் ஆக வேண்டி இருப்பதாலும் மன்னிப்புக் கேட்கக் கூடும். அத்தகைய மன்னிப்புக் கோருவதில் ஆதாய நோக்கே இருக்கும். என்னைப் பொறுத்தவரை மன்னிப்புக் கேட்பதைவிட மனம்வருந்துவது சரியானது. உள்ளம் வருந்தினால் தவறோ தப்போ கரையோ களங்கமோ கழுவப்பட்டுவிடும்.

எந்தக் கருத்துக்கும் எதிர்கருத்து இருப்பது இயற்கையே. நதியின் பாதையை ஒழுங்கமைத்துச் செல்வன அதன் இருகரைகள். அதுபோல்தான் எந்தக் கருத்துக்கும் இருதரப்புகள் இருக்கும். கருத்தோட்டத்துக்கு மேலும் வலு சேர்ப்பனவாக அவை அமைய வேண்டும். பகை வளர்த்தால் துயரத்தைத்தான் அறுவடை செய்ய முடியும்.

சட்டங்களால் வரையறுக்கப்பட்ட பெருங்குற்றங்கள் குறித்தோ... அவைகுறித்த தண்டனைகள் குறித்தோ எதிர்நிலை இல்லை. அத்தகைய சட்டங்களும் தண்டனைகளும் தேவையே. ஆனாலும் சட்டத்திலும் மன்னிக்கும் பிரிவுகள் உண்டு.

மன்னிப்பது என்பது பிழைசெய்பவர்களின் கையில் இல்லை. வருந்துவதும் திருந்துவதும் மட்டுமே தப்புச் செய்தவர்களை நல்லவர்களாக மாற்றும்.

வெளியீடு :
தினத்தந்தி 17-10-2019


மதுரை


















புத்தக ஏடுகளை விழுங்கியது
பொற்றாமரைக் குளம்...
புனல்வாதம் நிகழ்ந்த போது!

கொற்றவனின் கொடிமீனைக்
கூசச் செய்தன
மீனாட்சியின் விழிச்சுடர்கள்

கள்ளழகர்
கடந்த கால நதியைத் தேடிவந்து
ஏமாறுகிறார் ஆண்டுதோறும்

ஒவ்வொரு கவிதைப் போட்டியிலும்
தாங்க முடியவில்லை
தருமிகளின் ஆதிக்கம்

நக்கீரன் இல்லாததால்
தனக்குத் தானே பட்டம் சூடித் திரிகிறார்கள்
தமிழ்க்கவிஞர்கள்

சங்கம் வைத்துத்
தமிழ்வளர்த்த மதுரையில்
பெரிய எழுத்து இந்தி

கோவில் மண்டபத்தில்
இன்னமும் சில பாட்டிகள் இருக்கிறார்கள்
பிட்டுக்கு மண்சுமந்த சிவனைக் காண

கோ. மன்றவாணன்


Wednesday, 9 October 2019

சாம்பலாய் முடியும் உடல்




















நேற்று எரியூட்டிய சடலத்தின்
சாம்பலைக்
கொண்டு வந்தார்கள்.

கைப்பிடிச் சாம்பலில்
பூதக் கண்ணாடி வைத்துப்
பார்த்தேன்

கடமையைச் செய்யக்
கையூட்டு வாங்கிய
கைகளைத் தேடினேன்

பார்வையாலும் பெண்களைப்
பாலியல் துன்புறுத்தல் செய்த
கண்களைத் தேடினேன்

வெறி ஏறஏற மதுசுவைத்து
நல்லோரை ஏசிய
நாவினைத் தேடினேன்

காசை விட்டெறிந்து
கடவுளெனத் தன்னைப் புகழ்வதில்
சிலிர்த்த
செவிகளைத் தேடினேன்

அதிகாரத் திமிரில் நடந்த
அந்தக் கால்களைத் தேடினேன்

அடுத்தவர் சொத்துகளை
அபகரித்த
அந்த
ஆசை ஒளிந்திருந்த இடம் தேடினேன்

நொடிப்பொழுது வீசிய காற்று
விழுங்கிச் சென்றது
அந்தச் சாம்பலையும்.

-கோ. மன்றவாணன்.