Monday, 30 December 2019

பரமசிவனைப் பார்க்கப் போனேன்... பாதியிலே திரும்பி வந்தேன்...


பரமசிவனைப் பார்க்கப் போனேன்
பாதியிலே திரும்பி வந்தேன்

-கோ. மன்றவாணன்

புகழ்பெற்ற கவிஞர் ஒருவரைப் பற்றி இணைய இதழொன்றில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். சில நாட்களிலேயே அந்தக் கட்டுரை இலக்கிய மாத இதழ் ஒன்றில் வேறொரு எழுத்தாளர் பெயரில் வெளியாகி இருந்தது. முதல் பத்தியும் இறுதிப் பத்தியும் அந்த எழுத்தாளர் எழுதிச் சேர்த்துள்ளார். இடையில் என் கட்டுரையை அப்படியே வரி பிசகாமல் வார்த்தை தவறாமல் நகல் எடுத்து இணைத்திருந்தார். புதிதாகத் தட்டச்சிட வேண்டிய அவசியம்கூட அவருக்கு ஏற்படவில்லை. படித்த எனக்குப் பெரிதும் அதிர்ச்சிதான். அந்த இதழாசிரியருக்கு இதுகுறித்து ஆதாரத்துடன் மின்னஞ்சல் அனுப்பினேன். இதழாசிரியரும் அந்த எழுத்தாளருக்குத் தெரிவித்துள்ளார். அதன்பின் அவர், என்னுடன் நட்புறவுள்ள எழுத்தாளர் மூலமாகச் சமாதானம் சொன்னார். இருப்பினும் அந்த இலக்கிய மாத இதழாசிரியர் என் நிலையை அவருடைய இதழில் பதிவு செய்தார். அந்த நேர்மைமிகு இதழாசிரியருக்கு நன்றி.

வாசகர்கள் நிரம்ப உள்ள இதழுக்கு நான் ஒரு கட்டுரையை அனுப்பி இருந்தேன். பத்திகளை முன்பின்னாக அச்சிட்டும்- வரிகளில் வார்த்தைகள் சிலவற்றை மாற்றியும் சேர்த்தும் அக்கட்டுரையை வெளியிட்டு இருந்தனர். என் சொற்றொடர்கள் பலவும் அப்படியே அச்சாகி இருந்தன. அந்தக் கட்டுரையை வேறொருவர் எழுதியதாக வெளியாகி இருந்தது கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அந்தக் கட்டுரைக்குள் நான் எழுதாத சிலவற்றையும் சேர்த்திருந்தனர். சட்டப் பிடிக்குள் சிக்காதவாறு சாமர்த்தியமாகத் திருடுவதாக அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள் போலும்.

த்தகையோர் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பெருமிதம் அடைகிறார்கள். இவர்களை எழுத்தாளர்கள் என்று சொல்வதைவிட “எடுத்தாளர்கள்” என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் யாவும் பொதுவானவை. யாரும் பயன்படுத்தலாம் என்று வாதிடக் கூடும். நான் மறுக்கவில்லை. ஆனால் தகவல்களைக் கொண்டு தங்கள் சொந்தச் சிந்தனையில் இருந்து கட்டுரையை எழுத வேண்டும். தங்களின் சொந்தச் சொற்றொடர்களைக் கொண்டு கருத்துகளை விவரிக்க வேண்டும். ஆனால் இத்தகைய எடுத்தாளர்கள் வெட்டு ஒட்டு முறையில் அடுத்தவர்களின் கட்டுரையையே தமதாக்கிக் கொள்கிறார்கள். பிறரின் அறிவுழைப்பைக் களவாடிக்கொண்டு “அசல் அறிஞர்களாகக்” காட்சி தருகிறார்கள்.
     
ஒரே சிந்தனை இருவருக்கு எழலாம் என்று வாதிடுவோர் உண்டு. அதையும் நான் மறுக்கவில்லை. ஒரே சிந்தனை என்றாலும் வெளிப்படுத்தலில் இருவருக்குள் வேறுபாடு இருக்கவே செய்யும். அப்படியும் வேறுபாடு இல்லை என்றால், அது அரிதினும் அரிதானதாகவே இருக்கும். ஆனால் ஒரே சிந்தனை இருவருக்கும் எழலாம் என்பதைத் தப்பிக்கும் பாதையாகக் கொண்டு அடுத்தவர்களின் சிந்தனைகளைக் கொள்ளையடிப்பதை ஏற்க இயலாது. பிறரின் எழுத்துகளை அப்படியே பயன்படுத்துவோர், ஏன் அந்த எழுத்தாளர்களின் பெயர்களை மறைக்க வேண்டும்?
     
நான் 15 வயது சிறுவனாக இருந்த காலத்தில் எங்களூரில் தமிழ்மன்றத்தில் செயலாளராக இருந்தேன். அங்குள்ள குமரக்கோவில் மண்டபத்தில்தான் இலக்கிய விழாக்களை நடத்துவோம். அதில் கிருபானந்த வாரியார்கூட வந்து பேசி இருக்கிறார். எங்கள் அமைப்பின் சார்பில்  ஒருநாள் மாலை வேளையில் கவியரங்கமும் பட்டிமன்றமும் நடத்தினோம். கவியரங்கத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்க ஒரு பெருங்கவிஞரை அழைத்திருந்தோம். அவரோ மாவட்டத்தில் உள்ள எல்லாக் கவிஞர்களுக்கும் தலைவர். அரசு ஆசிரியரும்கூட. பழகுவதற்கு இனியவர். அவரை நானும் பிற நண்பர்களும் பேருந்து நிறுத்தத்திலிருந்து விழா நடக்கும் கோவிலுக்கு அழைத்து வந்தோம். வரும்போது அவர், ”இன்று பள்ளியில் நிறைய வேலை. பேருந்தில் பயணித்தபடியே கவியரங்கக் கவிதையை எழுதி வந்துள்ளேன்” என்று எங்களிடத்தில் அவராகவே சொன்னார்.

கவியரங்கம் தொடங்கியது. நான் முன்வரிசையில் உட்கார்ந்து இருந்தேன். அப்போதெல்லாம் நாற்காலிகள் போடுவதில்லை. எல்லாரும் தரை டிக்கெட்டுகள்தாம். அவர், தலைமைக் கவிதையை வாசித்தார். அந்தக் கவிதை எனக்கு முன்னரே அறிமுகம் ஆகி இருந்தது. எண்சீர் விருத்தங்களில் அமைந்த கவிதையை அவர் படிக்கும் போது, அடுத்தடுத்த வரிகளை அவர் சொல்வதற்குமுன் நான் அருகில் இருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டே வந்தேன். கோவிலுக்கு எதிரே உள்ள சிவலிங்க முதலித் தெருவில்தான் எங்கள்  வீடு. உடனே ஓடிச்சென்று அந்தக் கவிதை வெளியான இதழை எடுத்துவந்து அங்கிருந்தவர்களிடம் காட்டினேன். தெசிணியை ஆசிரியராகக் கொண்ட “கவிதை” இதழில் சப்தங்கள் என்ற தலைப்பில் துறவி என்பவர் எழுதிய கவிதைதான் அது. அந்தக் காலகட்டத்தில் கவிதை இதழ், நாளிதழ் போன்ற தோற்றத்தில் வெளியாகி வந்தது. பிற்காலத்தில் புத்தக வடிவில் வந்தது. தலையங்கம் முதல் அனைத்தும் கவிதையிலேயே இருக்கும். அந்தக் கவிதை ஏட்டில் கவிஞர் வைரமுத்து அவர்களும் பல கவிதைகளை எழுதி இருக்கிறார். கவியரங்கத்துக்குப் பிறகு நடந்த பட்டிமன்றத்தின் நடுவரிடமும் அந்தக் கவிதையைக் காட்டினேன். கவிஞர்களுக்குக் கர்வம் இருக்கலாம். கள்ளத்தனம் இருக்கலாமா என்றேன்.
     
அந்தக் கவிஞரை யாரும் எதிர்த்துக் கேட்கவில்லை. அடுத்த நாள் எங்கள் அமைப்பின் துணைத்தலைவர் என்னை அருகில் உள்ள ஊருக்கு அழைத்துச் சென்றார். எதற்காக என்று என்னிடம் சொல்லவில்லை. அங்குள்ள பள்ளியில் அந்தக் கவிஞர் இருந்தார். திடுதிப்பென்று என்னை அலாக்காகத் தூக்கி அவர் காலில் போட்டு மன்னிப்புக் கேட்கச் சொன்னார்.
     
அய்யோ பாவம்... யார், யாரிடத்தில் மன்னிப்புக் கேட்பது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ழுபதுகளில் குமுதம் இதழில் வாரம் ஒரு கவிதையென்று கண்ணதாசன் எழுதி வந்தார். அத்தனைக் கவிதைகளும் அற்புதமான கவிதைகள். படித்துப் படித்து... ரசித்து ரசித்து எனக்குள் தாமாகவே அந்தக் கவிதைகள் மனப்பாடம் ஆகிவிட்டன. குமுதத்தில் வெளியான அந்தக் கவிதைகள் யாவும் கண்ணதாசனின் ஐந்தாம் கவிதைத் தொகுப்பில் உள்ளன. அதே கால கட்டத்தில் ஆனந்த விகடன் வார இதழில் வாரம் ஒரு கவிஞர் என்ற முறையில் கவிதையை வெளியிட முடிவு செய்தார்கள். அதன்படி நான்கைந்து வாரங்கள் கவிதைகள் வெளியாகின. அனைத்தும் நல்ல கவிதைகள்தாம். அந்த வரிசையில் ஓர் அருமையான கவிதை வெளியானது. அதை எழுதிய கவிஞரின் படமும் அச்சாகி இருந்தது. நானும் அந்தக் கவிதையைப் படித்தேன். “அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்” எனத்தொடங்கும் அந்தக் கவிதை, கண்ணதாசன் எழுதிக் குமுதத்தில் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அதைத் திருடி ஆனந்தவிகடனுக்கு அனுப்பி விட்டார் அந்தக் கவிஞர். புகழ்பெற்ற கவிஞரின் பாடலைத் திருடினால் அகப்பட்டுக்கொள்வோம் என்று அந்தக் கவிஞருக்குத் தெரியவில்லை. ஆனானப்பட்ட ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவிற்கும் அந்தத் திருட்டுத் தெரிந்திருக்கவில்லை. அடுத்த வாரத்தில் கவிதை வெளியாகும் பக்கத்தில் ஓர் அறிவிப்பு இருந்தது. “சென்ற வாரம் வந்த கவிதையைக் கண்ணதாசன் எழுதியதாக வாசகர்கள் பலரும் தெரிவித்திருந்தனர். கவிஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவிதையை வெளியிட்டு வந்தோம். கவிஞர்கள் நாணயமுள்ளவர்களாக நடந்துகொள்ளவில்லை என்பதால் இப்பகுதி நிறுத்தப்படுகிறது” என்று அறிவித்துவிட்டார்கள். (இப்பொருள்கள் கொண்ட ஆனந்தவிகடன் வரிகளில் எழுதி இருந்தார்கள்)
     
ள்ளிகளில் கல்லூரிகளில் கவிதைப் போட்டிகள் நடத்துகிறார்கள் என்றால் என்னிடத்தில் தலைப்புச் சொல்லிக் கவிதை எழுதித் தருமாறு கேட்கும் பெற்றோர்கள் இன்னமும் இருக்கிறார்கள். யாரோ எழுதிக் கொடுத்த கவிதைகளையே போட்டிகளில் சமர்ப்பித்துப் பரிசு வாங்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். இது காலங் காலமாய் நடந்து வருகிறது.
     
இப்படி எழுத்துகளைத் திருடுபவர்களைப் பற்றி முறையிட எங்களூர் சிவன் கோவிலுக்குச் சென்றேன். அவர்தான் முதன்முதலில் கவிதையைத் தருமிக்குக் கொடுத்துக் கவிதைத் திருட்டை ஊக்குவித்தவர் என்று தெரிந்து பாதி வழியில் திரும்பிவிட்டேன்.

நன்றி : திண்ணை

No comments:

Post a Comment