உயிரூட்டும்
ஒவ்வொரு நதியின் பெயர்கேள்...
அலையேறி வந்து
கரையின் காதுகளுக்குச் சொல்லிப்
போகும்
பெண்பெயர்களையே.
கனவையும் கற்பனையையும் கவிதையையும்
கலந்து பிசைந்து ஊட்டும்
நிலவின் பெயர்கேள்...
முகில்துணி விரித்து
மூடிக்கொள்வாள் முகத்தை...
அழகி என்றுரைத்து.
அன்பு
அருள்
மன்னித்தல்
வயிற்றுக்குச் சோறிடல்
இந்தச் சொற்களுக்குரிய பால்
எதுவெனக் கேள்...
பெண்பால் எனக்கூறும் வாழ்விலக்கணம்.
வீட்டு
விளக்கு ஒவ்வொன்றும்
ஒளியால் எழுதுகிறது
பெண்ணுக்கு வாழ்த்துப்பா
கோயில் கருவறை
தாயின் கருவறை
எது உயர்ந்தது என்று என்னிடம்
கேள்...
பெண்ணென்று
சொல்வேன்.
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment