Wednesday, 14 September 2016



காதல் எனும்
ஒருவழிப் பாதை




           என்
           காதல்
           இரகசியமானது
           அது
           அவளுக்கே தெரியாது என்பதால் !

           அவள்
           என் விழிச்சாரலில் நனையாமல்
           என் தெருவைக்
           கடக்க முடியாது.

           அவளின்
           அகல விழிகளில்
           பூமியில் உள்ள
           புழு பூச்சிகள்
           எல்லாம் தெரிகின்றன
           என்னைத் தவிர !

           என்
           சிந்தனைப் பரப்பில்
           சிறுநொடியும் விலகாது வலம்வருகிறாள்
           அலங்காரத் தேரில்
           அமர்ந்து!

           அவள்
           சிந்தனைக்குள் நுழைய முடியாது
           திரும்புகிறது
           என்
           காதல் தீராநதி

           என் இதயம்
           லப்டப் லப்டப் என்பதை மறந்து
           அவள்பெயரையே உச்சரிக்கின்றது

           அவள்
           இதயத்துக்கு
           என் பெயரைத் தெரிவிக்க
           கிளி விடு தூது அனுப்பினேன்
           அப்புறம்தான் தெரிந்தது
           அது ஊமைக்கிளி என்று!

           காதல் எனும்
           ஒருவழிப் பாதையில்
           நான்மட்டும்
           நடைபிணமாய் நடக்கையில்

           கண்ணீர் விட்டுக்
           கடந்து போகின்றன
           ஈர மேகங்கள்….


           --கோ. மன்றவாணன்



No comments:

Post a Comment