Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Thursday, 5 March 2020

கோப்பைக்குள் விழுந்த புனிதனும்...
























ஒரு கோப்பைக்குள் விழுந்து
எழாமல் கிடக்கிறது
இந்த உலகு                  

திரவத்திலிருந்து முளைத்துத்
தீண்டுகின்றன
விஷநாவுகள்

ஆசிர்வதிக்கப்பட்ட தாலியொன்று
அறுக்கப்படுகிறது  
புட்டியின் மூடியைக் கழற்றும்போது

கொடூர விலங்கென உளம் திரிகிறான்
கோப்பைக்குள் விழுந்த புனிதனும்

தனக்கு மதுபடைக்கும் மனிதனைக் கண்டு
கோவிலைவிட்டு வெளியேறி இருக்கலாம்
கடவுளும்.

மதுத்துளி பட்டு எரிந்து சரிகின்றன
குடும்ப கோபுரங்கள்

மானம் என்றொரு சொல்லுக்குப் பாடைகட்டித்
தெருத்தெருவாய் இழுத்துச் செல்கின்றன
போதையின் மாயக் கைகள்

ஓரப் பார்வையால் தொட்டவனையும்
உள்ளிழுத்துக் கொள்கிறது
சவக்குழியாய் வாய்பிளந்து காத்திருக்கும்
கோப்பை...

-கோ. மன்றவாணன்







Wednesday, 11 December 2019

அப்பாவின் நாற்காலி




















அப்பா இருந்தவரை
அந்த நாற்காலிக்குக் கூட
அஞ்சி நடந்தோம் நாங்கள்.

காலொடிந்தும்
கையொன்று உடைந்தும்
பரணில் கிடக்கிறது அது.

இன்று
எங்கள் வீட்டுக் கூடத்தை
சோபா  அடைத்துக்கொண்டது

நாங்கள் வளர்க்கும் நாயொன்று
எப்பொழுதும்
உட்கார்ந்தும்
உறங்கியும் கொண்டிருக்கிறது
அந்த சோபாவில்தான். 

-கோ. மன்றவாணன்

மெளனச் சிறை




















ஊமையாகி
உள்ளுக்குள் குமறுகின்றன
சொல்ல வந்த நியாயங்கள்.

அகம் உலாவும் மர்மத்தை
முகம் காட்டிக்கொடுக்கும்
என்பதால்
சிரித்து நடிக்கவே
செலவிடுகிறேன் நேரத்தை.

ஒவ்வொரு நொடியும்
சீண்டிவிட்டுப் போகின்றன
குறுக்கும் நெடுக்குமாய்க்
கோர வவ்வால்கள்

மெளனம் உடைக்கவே
மொழிகள் முயல்கின்றன
தோற்றுத்தாம் போவோம் எனத்தெரிந்தே... 

-கோ. மன்றவாணன்

Friday, 29 November 2019

தூரத்து உறவுகள்















வெகுதூரத்தில் இருந்தாலும்
ஒவ்வோர் இரவிலும் கதைசொல்லி
என்னை உறங்க வைக்கிறது நிலா

ஆற்றோர நந்தவனத்தில் இருந்தபடி
மலர்கள் எனக்குப் பரிசனுப்புகின்றன
மணத்தை

நிலத்தின் மறுமுனையில் இருந்தாலும்
நித்தமும் வருகிறது
தோழியின் அழைப்பொலி

சிம்லாவில் விளைந்த ஆப்பிள்
என்வீட்டு
ஊண்மேடையில்

உலகின் எல்லா பாகங்களில் இருந்தும்
வந்து குவிகின்றன நட்பஞ்சல்கள்
என்வீட்டுக் கணினியில்

தூரங்கள்
பிரித்துவிடாது
உறவுகளை...

-கோ. மன்றவாணன்


Wednesday, 13 November 2019

பெண்ணென்று சொல்வேன்
















உயிரூட்டும்
ஒவ்வொரு நதியின் பெயர்கேள்...
அலையேறி வந்து
கரையின் காதுகளுக்குச் சொல்லிப் போகும்
பெண்பெயர்களையே.

கனவையும் கற்பனையையும் கவிதையையும்
கலந்து பிசைந்து ஊட்டும்
நிலவின் பெயர்கேள்...
முகில்துணி விரித்து
மூடிக்கொள்வாள் முகத்தை...
அழகி என்றுரைத்து.

அன்பு
அருள்
மன்னித்தல்
வயிற்றுக்குச் சோறிடல்
இந்தச் சொற்களுக்குரிய பால்
எதுவெனக் கேள்...
பெண்பால் எனக்கூறும் வாழ்விலக்கணம்.

வீட்டு
விளக்கு ஒவ்வொன்றும்
ஒளியால் எழுதுகிறது
பெண்ணுக்கு வாழ்த்துப்பா

கோயில் கருவறை
தாயின் கருவறை
எது உயர்ந்தது என்று என்னிடம் கேள்...
பெண்ணென்று சொல்வேன்.       

-கோ. மன்றவாணன்

Wednesday, 6 November 2019

இந்த நாள் இனிய நாள்

















விபத்தில் கால்நசுங்கி
நகர முடியாத
நாய்க்குச் சோறளித்தேன்

தட்டித் தட்டிக்
கம்புக்கண் கொண்டு நடந்தவரைச்
சாலையின் மறுபக்கம் கொண்டுசேர்த்தேன்

ஆலயத்தின்
அன்னதான திட்டத்துக்கு
ஆயிரம் ரூபாய் நிதியளித்தேன்

தெருவோர
ஏழைச் சிறுமிக்குப்
புத்தாடை வாங்கித் தந்தேன்

எனினும்
இந்த நாள்களெல்லாம்
இனிய நாள்களாகுமா.....

விடுதியில் விட்டிருந்த அம்மாவை
வீட்டுக்கு அழைத்துவந்த
இந்த நாளைக் கொண்டாடுகையில்!

கோ. மன்றவாணன்

Wednesday, 30 October 2019

தீபம்
















எந்த
இருட்டுக்குள்ளும்
தீபம் ஏற்றி வைப்பவர்களையே
திசைகள் வரவேற்கும்

ஏற்றி வைப்பதோடு
எதுவும் முடிந்துவிடுவதில்லை

திரியை
உயர்த்திக்கொண்டே இரு

நெய்யிட்டவாறு
நீ இரு

காற்று
ஊதி அணைக்கலாம்
கவசம் அமைத்துக்
காவல் காத்திரு

இருளை
ஓடி ஓடி விரட்டுகிறது
ஒற்றை மின்மினிப் பூச்சி

கோடி கோடி மின்மினிகளின்
கூட்டம் நீ

கோ. மன்றவாணன்

Friday, 25 October 2019

யார் மனிதன்?

யார் மனிதன்?

மனிதன் யாரெனக்
கண்டறியும் கருவியொன்று இல்லையெனக்
கவலையுறுகிறான் கடவுளும்.

சிறப்பு தரிசனத்தில்
சிலை அருகில் வருபர்களை
உற்றுப் பார்த்த அவன்
உதட்டைப் பிதுக்கவும் அஞ்சுகிறான்.

கடவுளே தானெனச் சொல்லி
உண்டியலை நிரப்பிக்கொள்கிறவர்களை
ஓரமாக நின்று பார்த்து
ஒருமுறை தன்னைச் சோதித்துக்கொள்கிறான்.

அனைத்துக்கும் ஆசைப்படு என்ற
அருளுரைக்குப்
பொருளுரை எழுதுவோரின்
பூசை அறைக்குள்ளிருந்து தப்பியோடத் துடிக்கிறான்.

கீழிறங்கி வந்து தேடி அலைந்தபின்
ஒப்புக்கொள்கிறான்
“மனிதனை
இன்னும் நான் படைக்கவில்லை” என்று!


-கோ. மன்றவாணன்
























Friday, 18 October 2019

மதுரை


















புத்தக ஏடுகளை விழுங்கியது
பொற்றாமரைக் குளம்...
புனல்வாதம் நிகழ்ந்த போது!

கொற்றவனின் கொடிமீனைக்
கூசச் செய்தன
மீனாட்சியின் விழிச்சுடர்கள்

கள்ளழகர்
கடந்த கால நதியைத் தேடிவந்து
ஏமாறுகிறார் ஆண்டுதோறும்

ஒவ்வொரு கவிதைப் போட்டியிலும்
தாங்க முடியவில்லை
தருமிகளின் ஆதிக்கம்

நக்கீரன் இல்லாததால்
தனக்குத் தானே பட்டம் சூடித் திரிகிறார்கள்
தமிழ்க்கவிஞர்கள்

சங்கம் வைத்துத்
தமிழ்வளர்த்த மதுரையில்
பெரிய எழுத்து இந்தி

கோவில் மண்டபத்தில்
இன்னமும் சில பாட்டிகள் இருக்கிறார்கள்
பிட்டுக்கு மண்சுமந்த சிவனைக் காண

கோ. மன்றவாணன்


Wednesday, 9 October 2019

சாம்பலாய் முடியும் உடல்




















நேற்று எரியூட்டிய சடலத்தின்
சாம்பலைக்
கொண்டு வந்தார்கள்.

கைப்பிடிச் சாம்பலில்
பூதக் கண்ணாடி வைத்துப்
பார்த்தேன்

கடமையைச் செய்யக்
கையூட்டு வாங்கிய
கைகளைத் தேடினேன்

பார்வையாலும் பெண்களைப்
பாலியல் துன்புறுத்தல் செய்த
கண்களைத் தேடினேன்

வெறி ஏறஏற மதுசுவைத்து
நல்லோரை ஏசிய
நாவினைத் தேடினேன்

காசை விட்டெறிந்து
கடவுளெனத் தன்னைப் புகழ்வதில்
சிலிர்த்த
செவிகளைத் தேடினேன்

அதிகாரத் திமிரில் நடந்த
அந்தக் கால்களைத் தேடினேன்

அடுத்தவர் சொத்துகளை
அபகரித்த
அந்த
ஆசை ஒளிந்திருந்த இடம் தேடினேன்

நொடிப்பொழுது வீசிய காற்று
விழுங்கிச் சென்றது
அந்தச் சாம்பலையும்.

-கோ. மன்றவாணன்.

Thursday, 3 October 2019

பெட்டி பெட்டியாய்க் காந்தி

















சுதைமண் காந்தியின்
தடியைப் பிடுங்கித்
தலையை உடைக்கிறார்கள்

காந்தி பதாகையில்
குறிதவறாது சுட்டுக்
குருதியோடச் செய்கிறார்கள்

காந்தி சாலையில்
பிராந்திக் கடைகளைத் திறந்து
ஆடுவோமே – கள்ளு
போடுவோமே என்கிறார்கள்

காந்தி விழா கொண்டாடியதாகப்
பொய்க்கணக்கெழுதிப்
பொருளாதாரத்தை உயர்த்துகிறார்கள்

காந்தியாக நடிக்கக்கூட
இந்தியர் எவருமில்லை

காந்தி பிறந்த நாளைக்
கோலாகலமாய்க்
கொண்டாடுகிறார்கள்
தொலைக்காட்சியில் குத்தாட்டம் பார்த்து

அது எப்படி?
பணத்தாளில் புன்னகைக்கும் காந்தியைப்
பாதுகாக்கிறார்களே
பெட்டி பெட்டியாய்...

-கோ. மன்றவாணன்    

Tuesday, 1 October 2019

புத்தரின் புன்னகை


















பணம்கொட்டினால்
திருப்பதி உண்டியல் நிரம்பிவிடுகிறது
ஆனால்
ஆசையின் உண்டியல் நிரம்புவதே இல்லை

ஜீவ நதிகளும்
ஜீவ சமாதியாகிறது
வயது கடந்தாலும்
வற்றுவதே இல்லை
காமநதி

பதவி பறிக்கப்
பாவ ஏணியில்
ஏறுவதை யாரும் நிறுத்துவதே இல்லை

ஆயிரம் துயர்கள் வரும் எனினும்
யாரும் விடத் தயாரில்லை
ஆசையை

கல்லாப் பெட்டியின் மீது
புத்தர் பொம்மை
புன்னகையைக் காணவில்லை

-கோ. மன்றவாணன்


Thursday, 19 September 2019

தேநீர் நேரம்















எல்லாரும் வாருங்கள்
இளைப்பாறுதல் தருவேன் என்கிறார்
வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரில் இருக்கும்
தேநீர்க் கடையின் உரிமையாளர்

சர்க்கரையில் மொய்க்கும் ஈக்கள் போலவே
தேநீர்க் கடையில்
சுவைஞர்கள்

சர்க்கரை இல்லாத... சர்க்கரை போட்ட...
அரை சர்க்கரை, கால் சர்க்கரை
ஸ்டார்ங்காக
லைட்டாக
மீடியமாக என்றெல்லாம்
நேயர் விருப்பங்கள் இடைவிடாமல்
நாயர் தேநீர்க் கடையில்...

நிறைவேறுகின்றன விருப்பங்கள்
நினைவு தவறாமல்

சாய்ந்துவிழும் அருவியென
மேல்குவளையிலிருந்து
கீழ்க்குவளையில் பாயும் தேநீர் சங்கீதத்தைக்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்

ஆனாலும்
அரசு அலுவலரைப் பார்க்க
எந்த நேரம் சென்றாலும்
தேநீர் அருந்தச் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.

கோ. மன்றவாணன்



Tuesday, 17 September 2019

மழைமேகம்
















காற்றை வருடிக்கொடுக்கிறது
விசிறியாய் விரிந்த
மயில்தோகை 

வாடும் பயிர்களின் வேண்டுதல்கள்
கேட்டிருக்குமோ
கூடி முடிவெடுக்கிறது முகில்கூட்டம் 

தெருக்கள் தாண்டிய பின்னே
திடீரென ஞாபகப்பூவுக்குள் விரிகிறது
வீட்டுக்குள் இருக்கும் குடை 

முகில் உருகிவந்து அணைத்துக்கொள்ளும்
தகவலை
நெல்வயலுக்கு
முன்கூட்டியே சொல்லிச் செல்கிறது குளிர்காற்று 

கூடு நோக்கிப் பறக்கிறது
குருவிக் கூட்டம் 

எவ்வளவு மழை பெய்தாலும்
நனைவதில்லை
மேகம்.

-கோ. மன்றவாணன்

Monday, 9 September 2019

அதிரூபன் தோன்றினானே...


















அச்சுறுத்துகிறது
கரும்பாம்புகளோ என மிதந்து நெளியும்
இரவுக் கடல்

திகைக்க வைக்கிறது
திசைகளைப் பறிகொடுத்துக் கிடக்கும்
புவி

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
கருஞ்சாந்து
நிரம்பி வழிகிறது

வாழ்க்கையின்
எந்தப் பக்கம் திரும்பினாலும்
முட்டுகிறது
இருட்டால் பிசைந்து எழுப்பிய சுவர்

காத்திருந்தேன்... நம்பிக்கையுடன்
காத்திருந்தேன்... பொறுமையுடன்

அதோ
கையில் விளக்கோடு
அதிரூபன் தோன்றினானே....

கோ. மன்றவாணன்

அரசியல்




















பொய்கள் அமோகமாக விற்கும்
பெருஞ்சந்தை இது

நேற்று நடந்து சென்றவர்
இன்று
இன்னோவா காரில் பயணிக்கிறார்
இதுபோல் இல்லை
இலாபம் கொழிக்கும் தொழிலொன்று

வெள்ளுடை வேந்தர்களாக
வீதிவலம் வருகிறார்கள்
தேசம் அழுக்காகிறது

மாறுவேடம் தரித்தது
மன்னராட்சி
வாரிசுகளுக்கே அரசாட்சி

இனி,
காமராசர் கக்கன் வரலாறுகளின்
சாம்பலும் கிடைக்காது
ஊரெங்கும் ஊழல்தீ

கோ. மன்றவாணன்

சிரிப்பு


















சிரிக்கும் தருணங்களில்
ஓடி ஒளிந்துகொள்கிறது
எந்த நோயின் வலியும்

அழகின் உச்சத்தைக் காணலாம்
காந்தியின் சிரிப்பிலும்
மோனலிசா புன்னகையிலும்

இளம்பெண்ணின் கண்ணும் சிரிக்கும்
இதயத்தில் காதல் மலர்ந்தால்

யார் சொன்னார்
மனிதருக்கு மட்டுமே சிரிப்புச் சொந்தமென்று
கொடியின் சிரிப்புதானே பூக்கள்

நம்
வெள்ளைச் சிரிப்பையும்
கொள்ளையடித்துவிட்டார்களே
அதிகாரப் படையெடுத்துவந்து

கோ. மன்றவாணன்

Monday, 2 September 2019

பறவை



















சிறகு விரித்துப் பறக்கிறது
மனம்
வானத்தின் உயரம் போதவில்லை.

எவ்வளவு உயர உயரப் பறந்தாலும்
மண்ணுக்கு வரவேண்டி இருக்கிறது
உயிர் வளர்க்க

வானமே வீடாக வாழ்ந்த பறவையைப்
பொற்கூண்டில் அடைத்துப்
பழம்நறுக்கித் தந்தாலும்
அது
விரும்புவது என்னவோ
விடுதலையைத்தான்

விடுதலை என்பது வேறொன்றுமில்லை
சிறகு வரித்தலே
சிந்தனையின் எல்லையையும் தாண்டி.

கடல்தாண்டிப் பறக்கும்
புறாவைப் பார்த்துப்
பொறாமைப்படுகிறேன் நானும்.

கோ. மன்றவாணன்