Wednesday, 14 September 2016


    இனி ஒரு விதி செய்வோம்


     ரத்தத்தை ஆறாகப் பொங்க விட்டு
           நம்மக்கள் உயிர்பறித்து  மகிழு கின்றார் ;
     சித்தத்தைக் கொடும்விஷத்தில் தோய்த்தெ டுத்துத்
           தேசத்தை உருக்குலைக்க முயலு கின்றார் ;
     யுத்தத்தை நடத்துகின்றார் மறைந்து நின்றே ;
           உயிர்குடிக்கும் ஆயுதங்கள் குவித்து வைத்தே ;
     மொத்தத்தைப் பார்க்கையில் பயங்க ரத்தை
           முளையிலேயே கிள்ளிவிட விதியைச் செய்வோம்!
    
     பாரதத்தின் படைத்தளத்தில் நுழைந்து விட்டார் ;
           பயங்கரத்தின் வளர்ச்சியிது! பின்னே நிற்போர்
     யாரென்றே அடையாளம் கண்டு விட்டோம்
           இனிபொறுத்துக் கொண்டிருத்தல் மடமை ஆகும்.
     கோரப்பல் காட்டுகின்ற தீவி ரத்தை-
          கொடுமையே புரிகின்ற பயங்க ரத்தை
     வேரோடு பிடுங்கிவிட விதியைச் செய்வோம் !
          வெற்றிமணி ஓசையினை எங்கும் கேட்போம் !

     அன்புமனம் அனைவருக்கும் இருந்து விட்டால்
          அகிலத்தில் அமைதிப்பூ வாசம் வீசும் ;
     பண்புகுணம் நல்லொழுக்கம் யாவற் றையும்
          பாதுகாத்து நாம்வாழ்ந்தால் விலகும் தீமை ;
     நண்பர்களாய் அயலுறவு அமைந்து விட்டால்
          நல்லுதவிப் பரிமாற்றம் நிகழும் நித்தம் ;
     மண்புவியில் அப்படியோர் உலகைக் காண
           மனமொத்து விதிசெய்வோம் ; மகிழ்ந்து வாழ்வோம்!

     
                                               கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment