Thursday, 19 September 2019

தேநீர் நேரம்















எல்லாரும் வாருங்கள்
இளைப்பாறுதல் தருவேன் என்கிறார்
வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரில் இருக்கும்
தேநீர்க் கடையின் உரிமையாளர்

சர்க்கரையில் மொய்க்கும் ஈக்கள் போலவே
தேநீர்க் கடையில்
சுவைஞர்கள்

சர்க்கரை இல்லாத... சர்க்கரை போட்ட...
அரை சர்க்கரை, கால் சர்க்கரை
ஸ்டார்ங்காக
லைட்டாக
மீடியமாக என்றெல்லாம்
நேயர் விருப்பங்கள் இடைவிடாமல்
நாயர் தேநீர்க் கடையில்...

நிறைவேறுகின்றன விருப்பங்கள்
நினைவு தவறாமல்

சாய்ந்துவிழும் அருவியென
மேல்குவளையிலிருந்து
கீழ்க்குவளையில் பாயும் தேநீர் சங்கீதத்தைக்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்

ஆனாலும்
அரசு அலுவலரைப் பார்க்க
எந்த நேரம் சென்றாலும்
தேநீர் அருந்தச் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.

கோ. மன்றவாணன்



Tuesday, 17 September 2019

மழைமேகம்
















காற்றை வருடிக்கொடுக்கிறது
விசிறியாய் விரிந்த
மயில்தோகை 

வாடும் பயிர்களின் வேண்டுதல்கள்
கேட்டிருக்குமோ
கூடி முடிவெடுக்கிறது முகில்கூட்டம் 

தெருக்கள் தாண்டிய பின்னே
திடீரென ஞாபகப்பூவுக்குள் விரிகிறது
வீட்டுக்குள் இருக்கும் குடை 

முகில் உருகிவந்து அணைத்துக்கொள்ளும்
தகவலை
நெல்வயலுக்கு
முன்கூட்டியே சொல்லிச் செல்கிறது குளிர்காற்று 

கூடு நோக்கிப் பறக்கிறது
குருவிக் கூட்டம் 

எவ்வளவு மழை பெய்தாலும்
நனைவதில்லை
மேகம்.

-கோ. மன்றவாணன்

Monday, 9 September 2019

அதிரூபன் தோன்றினானே...


















அச்சுறுத்துகிறது
கரும்பாம்புகளோ என மிதந்து நெளியும்
இரவுக் கடல்

திகைக்க வைக்கிறது
திசைகளைப் பறிகொடுத்துக் கிடக்கும்
புவி

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
கருஞ்சாந்து
நிரம்பி வழிகிறது

வாழ்க்கையின்
எந்தப் பக்கம் திரும்பினாலும்
முட்டுகிறது
இருட்டால் பிசைந்து எழுப்பிய சுவர்

காத்திருந்தேன்... நம்பிக்கையுடன்
காத்திருந்தேன்... பொறுமையுடன்

அதோ
கையில் விளக்கோடு
அதிரூபன் தோன்றினானே....

கோ. மன்றவாணன்

அரசியல்




















பொய்கள் அமோகமாக விற்கும்
பெருஞ்சந்தை இது

நேற்று நடந்து சென்றவர்
இன்று
இன்னோவா காரில் பயணிக்கிறார்
இதுபோல் இல்லை
இலாபம் கொழிக்கும் தொழிலொன்று

வெள்ளுடை வேந்தர்களாக
வீதிவலம் வருகிறார்கள்
தேசம் அழுக்காகிறது

மாறுவேடம் தரித்தது
மன்னராட்சி
வாரிசுகளுக்கே அரசாட்சி

இனி,
காமராசர் கக்கன் வரலாறுகளின்
சாம்பலும் கிடைக்காது
ஊரெங்கும் ஊழல்தீ

கோ. மன்றவாணன்

சிரிப்பு


















சிரிக்கும் தருணங்களில்
ஓடி ஒளிந்துகொள்கிறது
எந்த நோயின் வலியும்

அழகின் உச்சத்தைக் காணலாம்
காந்தியின் சிரிப்பிலும்
மோனலிசா புன்னகையிலும்

இளம்பெண்ணின் கண்ணும் சிரிக்கும்
இதயத்தில் காதல் மலர்ந்தால்

யார் சொன்னார்
மனிதருக்கு மட்டுமே சிரிப்புச் சொந்தமென்று
கொடியின் சிரிப்புதானே பூக்கள்

நம்
வெள்ளைச் சிரிப்பையும்
கொள்ளையடித்துவிட்டார்களே
அதிகாரப் படையெடுத்துவந்து

கோ. மன்றவாணன்

Monday, 2 September 2019

பறவை



















சிறகு விரித்துப் பறக்கிறது
மனம்
வானத்தின் உயரம் போதவில்லை.

எவ்வளவு உயர உயரப் பறந்தாலும்
மண்ணுக்கு வரவேண்டி இருக்கிறது
உயிர் வளர்க்க

வானமே வீடாக வாழ்ந்த பறவையைப்
பொற்கூண்டில் அடைத்துப்
பழம்நறுக்கித் தந்தாலும்
அது
விரும்புவது என்னவோ
விடுதலையைத்தான்

விடுதலை என்பது வேறொன்றுமில்லை
சிறகு வரித்தலே
சிந்தனையின் எல்லையையும் தாண்டி.

கடல்தாண்டிப் பறக்கும்
புறாவைப் பார்த்துப்
பொறாமைப்படுகிறேன் நானும்.

கோ. மன்றவாணன்


கருப்பு


















இரவு
கருப்பாய் இருப்பதால்தான்
பேய் நடமாடுகிறது

நிலாத்துணை அற்ற
தென்னந்தோப்பு ஓசையும்
அச்சுறுத்துகிறது

ஜன்னல் கதவு திறந்து மூடுகிறது
இருட்டுக்கு
நீளக் கைகள் எப்படி முளைத்தன?

தொப்பென்று குதிக்கிறது
கருப்புப் பூனையொன்று
கண்களில் தீச்சட்டி ஏந்தி

என் மனசுக்குள்
அவிந்து போயின
அனைத்து விளக்குகளும்

கருப்புக் கயிறு கட்டினால்
காத்துக் கருப்பு அண்டாது என்ற
பூசாரி
போதையில் உருண்டு கிடக்கிறார்

அப்போதுதான் தடவிப் பார்த்தேன்
என் மணிக்கட்டில் வளையமிட்டிருந்த
கருப்புக் கயிறு
எங்கோ அறுந்து விழுந்துவிட்டிருக்கிறது

இருட்டில்  தேடுகிறேன்
அவசர அவசரமாக
அந்தக் கயிற்றை

-கோ. மன்றவாணன்

இனிமேல் மழைக்காலம்











குளம்
காத்திருக்கிறது
பறவைகள் வருமென்று

வயல் பொறுத்திருக்கிறது
மறுபடியும்
பசுமை குலுங்குமென்று

பூமியின் நா
நீண்டு கிடக்கிறது வான்நோக்கி

அருவியின் கால்பதிந்த மலைப்பாறையும்
அண்ணார்ந்து பார்க்கிறது

மழைநீரில் சூடு தணிக்கச்
சூரியனும்
முந்தி வந்து நிற்கிறான்

இனிமேல் மழைக்காலம்
என்ற அறிவிப்பை
நம்பி...

கோ. மன்றவாணன்