எல்லாரும் வாருங்கள்
இளைப்பாறுதல் தருவேன் என்கிறார்
வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரில் இருக்கும்
தேநீர்க் கடையின் உரிமையாளர்
சர்க்கரையில் மொய்க்கும் ஈக்கள் போலவே
தேநீர்க் கடையில்
சுவைஞர்கள்
சர்க்கரை இல்லாத... சர்க்கரை போட்ட...
அரை சர்க்கரை, கால் சர்க்கரை
ஸ்டார்ங்காக
லைட்டாக
மீடியமாக என்றெல்லாம்
நேயர் விருப்பங்கள் இடைவிடாமல்
நாயர் தேநீர்க் கடையில்...
நிறைவேறுகின்றன விருப்பங்கள்
நினைவு தவறாமல்
சாய்ந்துவிழும் அருவியென
மேல்குவளையிலிருந்து
கீழ்க்குவளையில் பாயும் தேநீர் சங்கீதத்தைக்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
ஆனாலும்
அரசு அலுவலரைப் பார்க்க
எந்த நேரம் சென்றாலும்
தேநீர் அருந்தச் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.
கோ. மன்றவாணன்