இரவு
கருப்பாய் இருப்பதால்தான்
பேய் நடமாடுகிறது
நிலாத்துணை அற்ற
தென்னந்தோப்பு ஓசையும்
அச்சுறுத்துகிறது
ஜன்னல் கதவு திறந்து மூடுகிறது
இருட்டுக்கு
நீளக் கைகள் எப்படி முளைத்தன?
தொப்பென்று குதிக்கிறது
கருப்புப் பூனையொன்று
கண்களில் தீச்சட்டி ஏந்தி
என் மனசுக்குள்
அவிந்து போயின
அனைத்து விளக்குகளும்
கருப்புக் கயிறு கட்டினால்
காத்துக் கருப்பு அண்டாது என்ற
பூசாரி
போதையில் உருண்டு கிடக்கிறார்
அப்போதுதான் தடவிப் பார்த்தேன்
என் மணிக்கட்டில் வளையமிட்டிருந்த
கருப்புக் கயிறு
எங்கோ அறுந்து விழுந்துவிட்டிருக்கிறது
இருட்டில் தேடுகிறேன்
அவசர அவசரமாக
அந்தக் கயிற்றை
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment