Friday, 30 June 2017

அறம் செய்ய விரும்பு








அறம் செய்ய விரும்பு

தொடக்கப்பள்ளியிலேயே சொல்லித்தரும் பாடம் ஆத்திசூடி. தளிர்க்குழந்தைகளால் எளிதில் உச்சரிக்கக் கூடியதாகவும் மனத்தில் பசுமையாகப் பதியக் கூடியதாகவும் அமைந்த பழங்கால நூலது. இனிய முறையில் வாழ்வியல் நெறிகளை அமுதென ஊட்டும் அறநூலும் அது. அதில்வரும் ‘அறம் செய்ய விரும்பு” என்ற முதல்நெறி தெளிவாக இருந்தாலும் சில எதிர்வினைகளும் எழுகின்றன.

மேரி ஷெல்லியின் “பிரேத மனிதன்” என்ற நூலைப் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்து 1943 டிசம்பர் மாதத்தில் வெளியிட்டார். அந்த நூலை யாழ்ப்பாண ஈழகேசரி என்ற வார இதழின் ஆசிரியர் அரியரத்தினம் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அப்படி வழங்கும்போது அந்த நூலின் வெண்பகுதியில் “அறம் செய்ய விரும்பு. ஆனால் செய்யாதே!” என்றெழுதித் தந்தார். இந்த விவரம் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் காணப்பட்டது. உண்மைப் பொருள் அறியாதவரல்லர் புதுமைப்பித்தன். நகைச்சுவைக்காக அவ்வாறு எழுதியிருக்கிறார். ஆனால் அதுபோல் சிலர் மேடைகளில் பேசிக் கிச்சுக்கிச்சு மூட்டுகின்றனர்.

அவ்வையார் அறம் செய்க என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாமல் அறம் செய்ய விரும்பு என்று ஏன் சொன்னார்? ஆத்திசூடியின் அந்த முதல்வரியே தவறாக இருக்க முடியுமா?

ஒரு செயலுக்கு முந்திய நிலை, செய்வதற்கான விருப்பம் ஆகும். விரும்பாத போது அங்கு இயல்பான செயல் நிகழாது. ஒன்றை விரும்பிச் செய்யும் போதுதான் அந்தச் செயல் நிறைவானதாக இருக்கும். தொடர்ந்து நிகழ்வதாக இருக்கும். அறம் செய்ய விரும்பினால் அந்த அறத்தை நாம் விரும்பிச் செய்வோம். அறத்தை விருப்பத்தோடு செய்ய வேண்டும் என்பதும் உள்ளார்ந்த பொருளாகும். மேலும் செய்ய என்ற சொல்லைக் கவனியுங்கள். செய்வதற்காகத்தான் விரும்ப வேண்டும் என்ற பொருளையும் அந்தச் சொல் உணர்த்தும். செயலை ஊக்குவிக்கும் வகையில்தான் அறம் செய்ய விரும்பு என்று சொல்லி இருக்கிறார் அவ்வையார்.

ஒன்றை விரும்பினால், அதை அடைவதற்கான செயலூக்கத்தை அந்த விருப்பமே தரும். ஆகவே... அறம் செய்ய விரும்பினால் அறம் செய்து அகம் மகிழ்வீர்கள்.

இப்போதெல்லாம் அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் நன்கொடை கேட்டு வற்புறுத்துகின்றனர். அவ்வாறு கொடைகொடுக்க விருப்பம் இல்லாமலே கொடுப்பதுதான் தற்போதைய நடைமுறையாக உள்ளது. முகப்பழக்கத்துக்காகவும் வெளிமதிப்பீட்டுக்காகவும் சில அறச்செயல்களைச் செய்வோரும் உள்ளனர். விருப்பம் இல்லாமல் செய்வது எல்லாம் அறம் ஆகாது. 

மனமார விரும்பிச் செய்கிற அறம்மட்டுமே, அர்த்தம் பொதிந்ததாகவும் அன்பு மிகுந்ததாகவும் அருள் ஊட்டுவதாகவும் அமையும். தொடர்ந்து அறம் செய்யத் தூண்டுவதாக இருக்கும். அத்தகைய அறச்செயல்கள்தாம் கடைசிவரை கூடவரும். அதனால்தான் அறம் செய்ய விரும்பு என்று சொல்லி இருக்கிறார் என்றும் பொருள் அறியலாம்.
அந்தக் காலத்திலும் வறுமை தாண்டவம் ஆடியிருக்கிறது. அதனால்தானே புலவர்கள் வறுமையில் வாடி இருக்கிறார்கள்; மன்னர்களிடம் கொடைபெற ஓடியிருக்கிறார்கள். பாடிப் பரிசில் பெறுவது அப்போது இயல்பானது. அந்தக் காலத்தில் அன்றைய எழுத்தாளர்களான புலவர்களை அரசர்கள் மதித்து இருக்கிறார்கள்; பாராட்டி ஊக்குவித்து  இருக்கிறார்கள்; பரிசளித்து வாழ்வளித்து இருக்கிறார்கள் எனவும் அறிய முடிகிறது. அவ்வையாரும் பாடிப் பரிசில் பெறும் புலவராக இருந்திருப்பார். அதனால்தான் என்னவோ அறம் செய்ய விரும்பு என்று தன்தேவையை உணர்ந்து அறிவுறுத்தி இருப்பாரோ என்றுகூடச் சிலர் நகையாடலாம். பொதுநல உணர்வோடு வாழ்முறைக்கு இலக்கணமாக ஆத்திசூடியைப் படைக்கும்போது அவ்வையாருக்கு அவ்வாறு தன்னலம் இருக்க முடியாது.

இன்னொரு பார்வையும் இருக்கிறது.

செல்வந்தர்கள் அறம் செய்ய முடியும். ஏழைகள்; ஏதும் அற்றவர்கள் எப்படி அறம் செய்ய முடியும்? என்ற கேள்வியை எழுப்பிச் சிந்தியுங்கள். பிறருக்குக் கொடுத்து உதவ என்னிடம் பொருளில்லையே என்று ஏழைகள் குறுக வேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு அறம் செய்ய விரும்பினாலே போதும் என்றாகிறது.

ஏழைகள் – செல்வந்தர்கள் எல்லாருக்கும் பொதுவாக அறம் செய்ய விரும்பு என்று சொல்லி இருக்கலாம். ஏழைகூடச் சில நேரங்களில் சில உதவிகளை தம்மால் இயன்ற வரை செய்ய இயலும். பொருளாகக் கொடுப்பதுதான் அறம் என்றில்லை. சொல்லாலும் செயலாலும் மனதாலும் உதவுவதும் அறம்தான்.

ஈகைகையைத்தான் அறமாகப் பலரும் நினைக்கிறார்கள். அறம் அதையும் தாண்டி பரந்த சிறந்த பொருள்கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் எதுவெல்லாம் நல்லதோ அதுவெல்லாம் அறம் என்று கூறலாம். அதனால்தான் ஈவது விலக்கேல் என்று தனியாகக் குறிப்பிட்டுள்ளார்.

அறம் செய்க என்பது செயல் சார்ந்தது. அறம் செய்ய விரும்புவது, மனம் சார்ந்தது. அறம் செய்யும் எண்ணத்தை மக்கள் மனங்களில் விதைக்கத்தான் அறம் செய்ய விரும்பு என்று அவ்வையார் சொல்லி இருக்கிறார். அவ்வாறு அறம்செய்யும் மனப்பான்மை மக்களிடத்தில் இருந்தால் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க முடியும். யாருக்கும் தீங்கு இழைக்காத நிலை உருவாகும். அறம் செய்ய விரும்புகிறபோதே மனமாசு அகன்றோடும். சமுதாயத்தில் அறம் ஓங்கி உயர்ந்து தழைக்கும். அறம் தழைக்கும்போது நீதியான சமூகம் மலரும்.

நல்ல மனப்பான்மையை விதைத்துவிட்டால் நல்ல செயல்கள் தாமாகவே விளையும். அந்த வகையில் பார்த்தால் அறம் செய்ய விரும்பினாலே அறம்செய்தல் நிகழும்.

அனைத்தும் அறிந்தே அவ்வையார் சொல்லி உள்ளார்.
அறம் செய்ய விரும்பு. 


-                                                                                                                                   கோ. மன்றவாணன் 

   வெளியீடு : தினமணி 18-06-2017







Saturday, 24 June 2017

கல்லறைப் பூவின் கண்ணீர்த்துளி



                                             
                                           

                     மலருக்கு
                     மணமுண்டு என்றார்கள் ;
                     மனமுண்டு என்பதை மறந்தார்களா?

                     கவி மாட்சியாலோ
                     கண் ஆட்சியாலோ
                     சொல்லி முடியாத அன்புணர்வை
                     ஒரு ரோஜாப்பூ
                     உணர்த்திவிடும் பெருமிதத்தோடு
                     காதலர் தினத்தில்

                     இறைவன் திருமேனியில் தவழும்
                     மலரெடுத்துச் சூடுவதில்
                     மங்கலம் காணுகிறார் மங்கையர்

                     மணப்பெண்ணை அலங்கரிப்பதில்
                     தோட்டத்துப் பூக்களுக்குள்
                     போட்டி உண்டு

                     தலைவனின்
                     தோள்களைத் தொட்டு உறவாட
                     எந்த மலருக்குத்தான் ஆசையில்லை?

                     ஏழைச் சிறுமியின் குழலில்
                     கொலுவிருக்க
                     எனக்கொரு கனவு இருந்தது

                     கல்லறையை அடைவது சவம் என்றால்
                     நான்...?


                     இன்று
                     கல்லறைப் பூவானேன்
                     கண்ணீர்த் தீவானேன்

-                                                                                                                                                                     
                                                                                             ---கோ. மன்றவாணன்




Monday, 19 June 2017

எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?





                      விழுதாயிரம் விட்ட
                      கவிப்பூமரம்
                      நீதான்

                      உன் கவியில்
                      அமுதள்ளி உண்டதால்
                      புதுஉயிர் மலர்ந்தது எமக்கு

                      ஆகாய எல்லையை
                      அறிவியல் அறியலாம்
                      உன்
                      கவிதை எல்லையைக்
                      காண முடியவில்லை
                      படிக்கப் படிக்க
                      விரிந்துகொண்டே செல்கிறதே.....

                      சுட்டுவிரல் நீட்டி
                      நீ சொன்ன அரசியல் கவிதைகள்
                      கருசுமந்து காத்துள்ளன
                      புதுதேசம் படைக்க!

                      எல்லா மதங்களும்
                      எப்படி ஒற்றுமையாக உள்ளன
                      உன்னை மட்டும் ஏற்றுக்கொள்வதில்!

                      உன்
                      வெண்ணிறத் தாடியொழுங்கில்
                      மரபுக்கவிதையின் இலக்கணம் கற்பித்தாய்

                      உன்
                      விழிப்பார்வையில்
                      புதுக்கவியின் நுட்பங்களைப் படரவிட்டாய்

                      பனிநீரில் நனைந்த
                      ரோஜாவுக்கு இப்போதும் ஏக்கம் இருக்கிறது
                      ரகுமான் கவிதையின்
                      கவர்ச்சியை வெல்ல வேண்டுமென்று

                      கண்ணீரில் நனைந்த
                      தமிழ்த்தாய்க்கும் ஏக்கம் இருக்கிறது :

                      அப்துல் ரகுமானைப் போல்
                      இன்னொரு கவிஞனைக் காண
                      எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று!

                   கோ. மன்றவாணன்

           

நானே... நானே...














எப்படி முயன்றாலும்
புரியவே கூடாதென்று
அகராதிச் சொற்களைக் கலைத்துப்போட்டு
அடுக்கினேன்
நவீன கவியுலகை மிதித்து மேலேறிய
அதிநவீன கவிதை இதுவென்றனர்

மனச்சிதைவு கவிதையைப் படித்துப்
புரிந்ததுபோல் நடித்தேன்
தரநிர்ணய முத்திரை பதித்த
ரசிகன் என்றனர்

போதையில் மனம் சாக்கடையில் விழுந்து
பாரதி
கவிஞனே இல்லை என்றேன்
செவ்விலக்கிய ஏடுகளில் பேட்டி எடுத்துக்
கொண்டாடினர் என்னை

சமஸ்கிருதத்தில் இருந்து
குறளை மொழிபெயர்த்தவர்
வள்ளுவர் என்றேன்
தமிழாய்வுச் செம்மல் என விருது வழங்கித்
தங்கப்பட்டயம் தந்தனர்

சிலரை வாங்கி
விற்காத என் கவிநூலைப்
பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் சேர்த்தேன்
கல்வித்தரம் உயர்ந்ததாய்த்
துணைவேந்தர்கள் சொன்னார்கள்

தேவநாகரி வரிவடிவில்
தமிழெழுத வேண்டும் என்று
கோரிக்கை வைத்தேன்
பத்மபூஷன் விருதுக்குப்
பரிந்துரைத்திருக்கிறார்கள்

தலைமுழுக்க
விருதுகள் நிரப்பி
வீடு திரும்பினேன்
தலைதூக்கி என்னைப் பார்த்த நாய்
திரும்பிப் படுத்துக்கொண்டது

கோ. மன்றவாணன்

மேகம் போடும் தாளம்





                  நேற்றிருந்த
                  நீல வானம்
                  மிரண்டு மறைந்ததுவோ
                  மேகத்திரள் கண்டு!

                  இசைத்தாளம் கேட்பதெப்போ என
                  எட்டிப் பார்த்துவிட்டுப்
                  போகிறாள் மின்னல்

                  மின்னலை ஏமாற்றி
                  மேகக் கலைஞனின்
                  மிருதங்க வாசிப்பு
                  இடியென!

                  மேக தாளம் கேட்டு
                  உருகி வழிந்து ஓடுகிறாள்
                  பூமழை!

                  மேகம் போடும் சந்தத்துக்குப்
                  பாட்டெழுதிச் செல்கிறது காற்று ;
                  தலையசைத்து ரசிக்கிறது மரம்!

                  தூரத்து மலையில் மயிலொன்று
                  தோகை மலர்த்தி ஆடுகிறது

                  வானக் கலைநிகழ்ச்சியைப் பார்த்து மகிழ
                  வெட்ட வெளியில் நிற்கிறாள் என்மகள்
                  குடையைத் தூக்கி எறிந்துவிட்டு!



                     -கோ. மன்றவாணன்


அனிச்சப் பூக்களுக்கு மீசை







  






குடும்பங்கள் வாழும்
குடியிருப்புப் பகுதியில்
குடிநீர்க் குழாய் கேட்டுக்
கோரிக்கை வைத்துக்
காத்திருந்ததில்
ஐந்து மாவட்ட ஆட்சியர்கள்
நான்கு வட்டாட்சியர்கள்
மூன்று முதலமைச்சர்கள்
மாறிப் போனார்கள்.

கோஷமும் இல்லை ;
கோரிக்கையும் இல்லை ;
நள்ளிரவில் பெற்ற
சுதந்திரம்போல்
இரவில் சுவரெழுப்பிக்
காலையில் திறந்தார்கள்
மதுக்கடை

எமனுக்குப் போட்டியாய்
நம் தெருவுக்குள்ளேயே
நரகத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள்

தெருவோர அரச மரத்தடியில்
பிள்ளையாருக்கு எதிரே
புஸ்ஸென்று
புட்டியைத் திறந்து குடிக்கிறார்கள்
மறக்காமல்
காலி பாட்டலை
செருகிச் செல்கிறார்கள்
சிறிதே வளைந்த தும்பிக்கையில்

தெரு வாசலில்
கோலம் போடக்கூட வரமுடியவில்லை
பெண்கள்

பருவம் எய்யக் காத்திருக்கும்
சிறுமிகள்
சைக்கிள் ஓட்டிப் பழக முடியவில்லை

எவ்வளவு கோபங்களை அடக்கி வைப்பது
சின்னச் சிமிழுக்குள்?

மயிலிறகுகள்
மாறிப் போயின அம்புகளாய்

மலர்த்தோட்டம்
மாறிப் போனது பாசறையாய்

காந்தள் விரல்களின் விசைபட்டு
மதுப்பாட்டில் ஒவ்வொன்றாய்
உடைந்து நொறுங்குகிறது

மோப்பக் குழையும் அனிச்சங்களின்
முகங்களில்
முறுக்கிய மீசைகள்;
குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கிறான்
மதுஅரக்கன்

வருங்காலத்துக்கு
நற்செய்தி எழுதி நகர்கிறது
நிகழ்காலம்
  
கோ. மன்றவாணன்

Tuesday, 6 June 2017

குழந்தையின் குரல்




Image result for child


       என்னைத்
       தன்குரலால் மயக்க
       எத்தனை குரல்கள்?

       நட்சத்திரப் பூச்சொரியும் நள்ளிரவில்
       கீழிறங்கி...
       பாறையை மீட்டி...
       பூமியைச் சிலிர்க்க வைக்கிறது
       அருவியின் குரல்

       பாரதியின்
       குயில்தோப்பில் இருந்து
       கூவுது குயிலொன்று

       கண்ணதாசன் தமிழில்
       காற்றேறி வருகிறது
       சுசீலாவின் குரல்

       கம்பன் காவியமும்
       கண்மூடிக் கேட்கிறது
       தாயின்
       தாலாட்டுக் குரல்

       வானிலிருந்தும் வரலாம்
       ஒரு தேவ குரல்

       மெல்லிய விரல்படும் யாழும்
       மலரிதழ் முத்தமிடும் குழலும்
       காதுக்குள்
       பேரம் பேசிச் செல்கின்றன

       தீர்ப்பெழுதி
       என்னை முந்திக்கொண்ட
       வள்ளுவன் மீது
       இன்னமும் கோபம் எனக்கு.

       மழலை பேசி
       மடியில் வந்து அமர்ந்தது குழந்தை
       மனதில் வந்து அமர்ந்தது குழந்தையின் குரல்!


      -கோ. மன்றவாணன்