Saturday, 30 December 2017

கொண்டாட்ட தினங்கள்







                 விழிபிடித்து அழைத்துச்செல்லும்
                 விறுவிறுப்பான நாவலின் பக்கங்கள்தாம்
                 ஒவ்வொரு நாளும்

                 பூமி மாற்றி உடுத்தும்
                 புத்தாடைகள்தாம்
                 பருவ காலங்கள் யாவும்

                 புவி
                 புதுப்பித்துக்கொள்கிறது
                 நாள்குளியல் செய்து

                 வெற்றியாளர்கள்
                 மெருகேறி மின்னுகிறார்கள்
                 ஒவ்வொரு நாளையும் அலங்காரம் செய்து

                 தாயைப் பழித்தவனையும் மன்னித்துவிடு
                 தப்பவிடாதே
                 நாளைப் பழிக்கும் சோதிடத்தை

                 வானவில் அழகெனவே
                 வசீகரித்து வண்ணம் பூசுகின்றன
                 வார நாட்கள்

                 நேற்று என்பது ஒத்திகை
                 இன்று என்பது அரங்கேறும் நாடகம்
                 நாளை என்பது விருதுபெறும் வைபவம்


                 உன்னை நம்பி உழை
                 எல்லா நாட்களும்
                 கொண்டாட்ட தினங்கள்தாம்


                -கோ. மன்றவாணன்


Thursday, 21 December 2017

மனத்திற்கு இட்ட கட்டளை







               முப்படை வந்தாலும்
               எப்படை வந்தாலும்
               சிறைப்படுத்த முடியாது
               மனத்தை 

               திண்டுக்கல் பூட்டுண்டு
               திறவுகோல் உண்டு
               வீட்டுக்கு!
               வானமாய்ப் பரந்து கிடக்கும்
               மனத்துக்கு?

               ஊரை அடித்துச் செல்லும்
               கரையுடைத்து வரும்
               காட்டு வெள்ளம்

               முட்டுக்கட்டை இல்லாத தேர்
               பலருக்குப்
               பலிபீடம்        

               மூக்கணாங்கயிறு இல்லாத மாடு
               குடைசாய்ந்து கிடக்கிறது
               வண்டி

               காமிரா கண் ஏமாறவில்லை
               துறவறம் பூண்ட சாமியும்
               காமப் பஞ்சணையில் 

               கட்டளை இடாவிட்டால்
               உன்னைச் சிறையில் தள்ளி
               வெளியில் திரியும் மனம்

               மனத்திற்குக் கட்டளையிட
               மந்திரம் தேடி அலையாதே

               குணத்தால் நிரம்பு
               மனம் அடங்கும் உனக்கு
                     

                 -கோ. மன்றவாணன்

பெண் எனும் பிரபஞ்சம்





                 மண்ணுக்கும் விண்ணுக்குமாக
                 மாளிகை கட்டிவைத்தென்ன
                 வாழ
                 யாருமில்லை எனில்...

                 பெண்ணெனும் உயிரூற்று இல்லெனில்
                 பிரபஞ்ச அறைகளில் இருந்து
                 வெளியேறி மரித்துப்போகும் காற்றும்

                 பிரபஞ்ச மாடத்தில் ஒளியேற்றுவாள்
                 பெண்,
                 மதியும் கதிரும் இல்லெனினும்

                 பெண்ணில்லாத உலகை விரும்புவதில்லை
                 கவிஞர் மட்டுமல்லர்
                 கண்ணில்லாதவரும்

                 பிரபஞ்சத்தின் ருசியைத் தேடி அலைந்தால்
                 பெண்ணில்தான் முடியும்

                 பிரபஞ்சத்தின் விதியைப் படிப்பதென்றால்
                 பெண்ணில்தான் தொடங்கும்

                 உயிர் ரகசியம் கற்றிருந்தால் போதும்...

                 பெண்ணுக்குள்ளே
                 பிரபஞ்சம் காணலாம்
                 பிரபஞ்சத்துக்குள்ளே
                 பெண்ணைக் காணலாம்.

                 பிரபஞ்சத்தின் சக்தி உனக்குள்ளும் சுழலும்...
                 பெண்ணைக் காதலித்துப்பார்!


                 -கோ. மன்றவாணன்


Wednesday, 6 December 2017

என் முதல் கனவு





                    கனவொன்று இல்லையெனில்
                    முன்னோக்கி நகராது
                    யாருடைய வாழ்க்கையும்

                    வானத்து நட்சத்திரங்களை
                    வலைபோட்டுப் பிடித்துவந்து
                    என்
                    அறைக்குள் கொட்டுகின்றன
                    கனவுகள்

                    விடிந்த பின்தானே தெரிகிறது
                    அறைமுழுவதும்
                    குப்பைக் கூளங்களும்
                    கொடும் நாற்றங்களும்

                    நிறைவேறாமலே போய்விட்டன
                    என் முதல் கனவின் வரிசையில்
                    எல்லாக் கனவுகளும்

                    இருப்பினும்
                    கனவுப் பரணில் இருந்து
                    கலைத்துப் போட்டுத் தேடிக்
                    கண்டுபிடித்தேன்
                    முதல்கனவை


                       “மரத்தடிப் பிள்ளையாரிடம்
                     மனமுருகி வேண்டி நிற்கிறேன்
                     ஞானப்பழம் தாவென்று”


                    -கோ. மன்றவாணன்


Monday, 27 November 2017

யாருமில்லாத மேடையில்....





               யாருமில்லாத மேடை
               ஆளுமில்லாத அரங்கு
               சுவரில் ஒட்டியபடி
               சங்கீத கச்சேரியை அரங்கேற்றுகிறது
               சற்றே வாலாட்டும் பல்லி

               காற்று விடைபெற்றுச் சென்றிருக்கும்
               கீற்று அசையாத தென்னந்தோப்பு
               கூவிக் கொண்டிருக்கிறது
               குயில்

               தகிக்கிறது பாலைவனம்
               தடம்ஏதும் அற்ற மணல்வெளி
               மண்பிளந்து வெளிக்கிளம்பும் உயிர்த்துளியாய்
               எழத்துடிக்கிறது மனம்

               கொட்டி வைத்துக் காத்திருக்கிறேன் கவிதைகளை...
               கொத்த வரவில்லையே ஒரு குருவியும்

               ஓர் அருவக் காற்றாய் நின்று
               யாருமில்லாத மேடையில் பாடுகிறேன்
               செவிகளற்றுக் கிடக்கிறது திடல்


               ....கோ. மன்றவாணன்

Sunday, 26 November 2017






நறுமுகையும் முத்தரசியும்

------கோ. மன்றவாணன்-------

“ஏய் முத்துலட்சுமி... இந்தச் சாக்கடை எத்தன நாளா அடைச்சிக்கிட்டு இருக்கு. சொன்னாத்தான் செய்வீயா?”

“பாக்கலம்மா...”

“என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா... நீ பாக்கமாட்டீயா?”

“இல்லம்மா...”

“என்ன இல்லம்மா நொள்ளம்மா. சாக்கடையை ஒழுங்காக் கிளீன்பண்ணு”

“ஒடம்பு முடியலம்மா நாளக்கிச் செய்றேம்மா”

“அதுவரிக்கும் நாத்தம் குடலத்தின்னனுமா. கொசு வேற முட்டப்போட்டு டெங்கு சிக்கன்குனியான்னு நோய் வருதுங்கறாங். இப்பவே செய்யு” என்று கடும்உத்தரவு பிறப்பித்துவிட்டுக் கூடத்துக்குள் போனாள் திலகா.


ந்த வீட்டில் முத்துலட்சுமி இரண்டு மூணு வருஷமா வீட்டுவேலை பார்க்கிறாள். வீட்டுவேலை செய்கிற எல்லாப் பெண்களின் கணவன்களைப் போலவே அவளுடைய கணவனும்  வேலை எதற்கும் போகாமல் அவள்கிட்டேய பணம்வாங்கிக் குடிப்பதுதான் தினப்பலன்.

காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு வந்துவிட வேண்டும். வாசல் தெளித்துக் கோலம் போட வேண்டும். வீட்டுக்கு முன் வாசல் வழியாக அவள் வரக்கூடாது. பின்வாசல் வழியாகத்தான் வரவேண்டும். முந்தியநாள் பயன்படுத்திய பத்துப்பாத்திரங்களை எல்லாம் கழுவ வேண்டும். பாத்திரத்தில் ஏதாவது ஒட்டி இருந்தால் வீட்டம்மாவின் கடுஞ்சொல் சுடுஞ்சொல் எல்லாம் மனசைப் பாடாய்ப்படுத்தும். “ஏம்மா இப்படி ஏசுறீங்கன்னு” கேட்டால் அந்த நேரமே வேலை போய்விடும்.

மரம் செடி கொடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்ற வேண்டும். தினமும் வீடு முழுவதும் பெருக்கி  லைசால் நனைத்த நூல்பஞ்சால் தரைமுழுவதையும் துடைக்க வேண்டும். என்னதான் தரையைச் சுத்தமாகப் பெருக்கித் துடைத்தாலும் “என்ன நறநறன்னுது” என்று கேட்பார் வீட்டய்யா செல்வம். ஞாயிற்றுக்கிழமை என்றால் ஒட்டடை வேறு அடிக்க வேண்டும். வீட்டய்யா டிரைவர் வைத்திருக்கவில்லை. போர்ட்டிகோவில் இருக்கும் அவருடைய பழைய காரையும் அவள்தான் தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.

மாதம் 1 ஆம் தேதிதான் அவளுக்கும் சம்பள நாள். எந்த 1ஆம் தேதியிலும் அவள் கைநீட்டிச் சம்பளம் வாங்கியதில்லை. இன்று சம்பளம் தருவாங்க இன்று சம்பளம் தருவாங்கன்னு பல நாள்கள் எதிர்பார்த்துத் தலைசொறிந்து நிற்பாள். வீட்டய்யாவோ வீட்டம்மாவோ அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவளாகவும் சம்பளம் கேட்க மாட்டாள். “கேட்டா தப்பா நெனச்சுக்குவாங்களோ”ன்னு அவளுக்குப் பயம். ஏழு எட்டுத் தேதியில்தான் சம்பளம் தருவார்கள். சில மாதங்களில் பதினொன்று பன்னிரண்டு தேதிகூட ஆயிடும்.


சாக்கடையைச் சுத்தம் செய்துவிட்டு வந்தாள்.

ஓர் உயர் அதிகாரி போன்ற தோரணையில் தோட்டத்துக்கு வந்து ஆய்வு செய்தாள் வீட்டம்மா. “கழிதண்ணி ஏன் வேஸ்டா போவுது. அத வாழமரத்துக்குப் பாய்றமாரி வாய்க்கா பண்ணிவுடு” என்று சொன்னாள். அதையும் செய்தாள்.

வீட்டுக்குப் பின்புற ஜன்னல் விளிம்பில் அவளுக்கென வைத்திருந்த டம்ளரில் காபி ஊற்றிவிட்டு உள்ளே போனாள் வீட்டம்மா.

அங்கேயே குத்துக்காலிட்டு அதைக் குடித்தாள். அதுதான் அவளுக்கு கர்த்தர் இளைப்பாறுதல் தரும் நேரம். கொஞ்சம் காபி ஸ்டிராங்கா இருந்தா தேவலை  என நினைத்தாள்.

இளைப்பாறுதலை முடிவுக்குக் கொண்டுவர உள்ளே இருந்து அழைப்பு வந்தது.

“முத்துலட்சுமி...”

“இதோ வந்துட்டம்மா”

“இந்த டைனிங் டேபிள் கீழே காபி சிந்திடுச்சு. அதைச் சுத்தமா துடைச்சிட்டுப் போ”

இப்போது அவள் நிறைமாத கர்ப்பிணி. பெரிய டைனிங் டேபிள் அது. காபி ஆறாக ஓடி ஒருபுறம் இருந்து மறுபுறம் எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்கு. அவளால் குனிந்து நிமிருவது சிரமாக இருந்தது. அப்படியே தரையோடு உட்கார்ந்து உள்ளே நுழைந்து துடைத்தாள்.

தானும் ஒரு பெண்ணாக இருந்தும் வீட்டம்மா கர்ப்பிணி என்று அவள் மீது இரக்கப்படவில்லை. எல்லா வேலையையும் வாங்கினாள்.

“முத்துலட்சுமி”

“என்னம்மா... இதோ வந்துட்டம்மா...”

சமையல்கட்டிலிருந்து வந்த வீட்டம்மா, “ஃபிரிஜ்ல தக்காளி இல்ல... இப்பத்தான் பாத்தேன். ரொம்ப அர்ஜெண்ட்.ஓடிப்போய் தெருமுனையில இருக்கற கடையில ஒருகிலோ தக்காளி வாங்கிட்டு வா. சீக்கிரம் வா.

நடக்கவும் முடியாம இருக்கிற அவள் எப்படி ஓடிப்போய் ஓடிவருவாள்?

ஐம்பது ரூபாய்த் தாளை வாங்கிக்கொண்டு பின்வாசல் வழியே வந்து வீட்டைச் சுற்றி வெளியே வரும்போது நாய்க்குச் சோறு வைக்கிற தட்டில் கால்வைத்து விழப்போனவள் நல்ல வேளையாக கேட் கிரிலைப் பிடித்துச் சுதாகரித்துக்கொண்டாள். அப்போது சரிந்த முந்தானையைச் சரிசெய்த படியே கடையை நோக்கி முடிந்தவரை விரைந்தாள்.


ந்த வீடே மகிழ்ச்சியில் திளைத்தது. அன்றுதான் லக்னோவில் உள்ள தன் மகளுக்குப் பெண் குழந்தை பிறந்தது எனத் தொலைபேசியில் தகவல் வந்தது. ஆமாம் செல்வம் தாத்தாவாகிவிட்டார். அவர் ஒரு பெரிய எழுத்தாளர். மேடைப் பேச்சாளர். அவரின் கிடுக்கிப்பிடியில் சிக்காத அரசியல்தலைவர்களே இல்லை. தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் பங்குபெறுவார்.

செல்வத்திடம் மாப்பிள்ளை பேசினார். “பொண்ணு அனுஷ நட்சத்திரத்துல பொறந்திருக்கா. ந, நி, நு, நே என்ற எழுத்துகளில் தொடங்கும் ஒரு நல்ல பேரைச் சொல்லுங்க மாமா” என்றார்.

ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்ததுபோல் உடனடியாக “நறுமுகை” என்று சொல்லி, அருகிலிருந்த தன்மனைவியைப் பார்த்து குறுநகை செய்தார்.

“டிவி சீரியல்ல பிரியமானவளில் வரும் ஒரு குழந்தையோடப்  பெயர்தான் அது. என்னமோ புதுசா நீங்களே கண்டுபிடிச்சிட்டமாரி கெத்தா பாக்றீங்க” என்று போட்டு உடைத்தாள் அவருடைய மனைவி திலகா.

தனக்குப் பேத்தி பிறந்ததையும் அக்குழந்தைக்கு நறுமுகை எனப் பெயர்சூட்டி இருப்பதையும் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் சேதி பரப்பினார்.  

5.5 இஞ்ச் சைசில் இருந்த ஆண்டிராய்ட் போனில் என்ன கமெண்ட்ஸ் வருகிறது எத்தனை லைக் வருகிறது என்பதைப் பேராவலோடு பார்த்துக்கொண்டிருந்தார். இடையிடையே முகநூலில் வாழ்த்துரைத்த அத்தனை பேருக்கும் ஏற்கனவே காப்பி பண்ணித் தயாராக வைத்திருந்த “நெஞ்சினிக்கும் நன்றி” என்பதை பேஸ்ட் பண்ணியபடி இருந்தார்.

நறுமுகை என்று தமிழ்ப்பெயர் வைத்ததற்காகவே நிறைய வாழ்த்துகள் குவிந்தன. பாராட்டியவர்களில் எத்தனை பேருடைய குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் இருந்திருக்கும் என்று நீங்கள் கேள்வி கேட்டால் என்னிடத்தில் பதில் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் பெயர் வைப்பதே சாதனை ஆகிவிட்டது என்பது மட்டும் புரிகிறது.

சிலர் அவருடைய வீ்ட்டுக்கே அகர்வால் ஸவீட்பாக்ஸோடு வந்து பாராட்டிவிட்டுப் போனார்கள். அப்படி வந்த ஒவ்வொருவருக்கும் கையடக்கத் திருக்குறள் நூலை வழங்கினார். அது அவருடைய வழக்கமும் கூட.

அப்பொழுதுதான் கவனித்தார். அந்தக் கூடத்தில் பொருட்கள் கலைந்திருந்தன. பெருக்காமல் இருந்ததற்கான அடையாளமாகத் தரையில் பழைய பேப்பர்கள் சிதறிக் கிடந்தன.

“எங்க அந்த முத்துலட்சுமி? வீடே குப்பையா கிடக்குது. குழந்தை பிறந்த சேதி கேட்டு நிறைய பேரு வராங்க. அவங்க என்ன நெனப்பாங்க?”

“அவ நேத்திலிருந்து வரலைங்க. சொல்லிட்டும் போவல அந்தக் கழுதை. நானேதான் எல்லா வேலயையும் செஞ்சிக்கிட்டிருக்கேன்.”

“அவ வருவான்னு நா நெனக்கல. வேற ஆளத்தான் பாக்கணும்.”

அப்போது ஜெகதீசன் ஒரு சால்வையைக் கொண்டுவந்து அவருக்குப் போர்த்தினார். “தாத்தாவாயிட்டீங்க பாராட்டுகள்” என்றார்.

“தாத்தா ஆவது கூட ஏதோ ஒரு பெரிய பதவியைப் பிடிச்சிட்ட மாதிரி நெனைக்கிறாங்க. விட்டா தெருவுல ட்யூப் லைட் கட்டி மைக் வச்சு கொடி தோரணம் கட்டி கட்அவுட் செய்து விழாவே நடத்திடுவாங்க போலிருக்கே” என்று உங்களுக்குத் தோன்றலாம்.

“ஜெகதீசன் உங்களால எனக்கொரு வேல ஆகணுமே”

“சொல்லுங்க ஸார். என்ன வேலென்னாலும் செஞ்சிடலாம்”

“இல்ல... நம்ம வீட்ல வேலக்காரி வரல்ல. ஒரு நல்ல வேலக்காரி கிடச்சா நல்லாருக்கும்.”

“அதுக்கென்னங்க.... நம்ம ஆறுமுகங்கிட்ட சொல்லிடுறேன். உடனே ஏற்பாடு பண்ணிடுவான்.”

“வேலக்காரின்னா பிராமணாளா இருந்தா தேவல.”

“வேலக்கி பிராமணாள் யாரும் வரமாட்டாங்கய்யா.”

“தெனமும் பேப்பர்ல வீட்டு வேலைக்குப் பிராமணப்பெண் தேவைன்னு வெளம்பரம் வருதே...”

“வெளம்பரம் வரும். ஆனா பிராமணப்பெண் வரமாட்டாங்க”

“அப்படின்னா பிள்ளைமார் செட்டிமார்ல மட்டும் ஆளப் பாருங்க.”

“நிறைய ஆள் இருக்காங்க ஸார் இதுக்கு ஏன் கவலப்படுறீங்க. நாளக்கியே பாருங்க ஒங்க வீட்ல நீங்க கேட்டமாரியே வேலக்காரி இருப்பா”


சொன்னபடியே அடுத்த நாளே அவர் வீட்டுக்கு புதுவேலைக்காரப்பெண் வந்துவிட்டாள். புது துடைப்பம் ஒன்றை எடுத்துக்கொடுத்து வேலையைத் தொடங்கி வைத்தார் வீட்டம்மா திலகா.

பேத்தி பிறந்ததைவிடவும் பேத்திக்கு நறுமுகை என்று பெயர் வைத்ததால் அவருக்குக் குவிந்த பாராட்டுகளில் மகிழ்ந்து தலைகால் புரியாமல் இருக்கிறார் செல்வம்.

இன்றும் அவர் முகநூலில் மூழ்கி இருக்கிறார். பேத்தி நறுமுகை பிறந்ததால் இன்னும் அவருக்கு வாழ்த்து கமெண்டுகளும் லைக்குகளும் தொலைபேசி அழைப்புகளும் வந்தபடியே இருக்கின்றன.

“திலகா இங்க வாயேன். இந்தக் கமெண்ட்ஸ் பாரேன்.”

ராஜன் அனுப்பி இருந்தார்.

“மேடை வேறு வாழ்க்கை வேறு என்றில்லாமல் கொள்கைப் பிடிப்போடு தமிழில் பெயர் வைத்த தங்களைத் தமிழ்த்தாயே நன்றியோடு வாழ்த்துகிறாள்.”

அடுத்து அன்று காலையில் வந்த அவரது கட்சி நாளிதழில் வெளியான விளம்பரத்தையும் காட்டினார். அதில் மைக் முன்னால் கைநீட்டிப் பேசுவது போன்ற செல்வத்தின் படம் பளிச்சென இருந்தது.

நறுமுகை எனப் பேத்திக்குப் பெயர்சூட்டி
நம்தமிழை வாழ வைத்த எங்கள் வழிகாட்டி
செந்தமிழ்க் காவலர்
செல்வம் அவர்களை வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறோம் என்று கவிதைபோல எழுதி இருந்தார்கள்.

அவளும் அதைப் படித்துவிட்டு “இந்தப் புகழ்ப்போதை எப்போதான் தெளியுமோ உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு உள்ளே போக முனைந்த போது  “அம்மா...” என்று குரல் கேட்டது.

வெளியில் வந்து பார்த்தாள்.

முத்துலட்சுமியின் கணவர்தான் வந்திருந்தார்.

வேண்டா வெறுப்பாய் அவரைப் பார்த்து “என்ன...” என்று அழுத்திக்  கடுமையாகக் கேட்டாள்.

“முத்துலட்சுமிக்குக் கொழந்த பொறந்திருக்கு. அதான் வேலக்கி வர முடியல. சொல்லிட்டுப் போலாம்ன்னுதான்...”

எந்த எதிர்வினையும் இல்லாமல் இருந்தாள் திலகா.

“கொழந்தைக்கு முத்தரசின்னு பேரு வச்சிருக்கோம்மா. இந்தாங்கம்மா சாக்லெட்டு எடுத்துக்குங்க”

இதைக் கேட்டவாறே வெளியே வந்த செல்வம் காட்டமாகச் சொன்னார்.

“முத்துலட்சுமியை இன்னமே வேலக்கி வரவேணாம்ன்னு சொல்லு. நாங்க வேற ஆள வச்சிக்கிட்டோம். கெளம்பு... கெளம்பு...”

சட்டெனத் திலகாவின் கையைப் பிடித்திழுத்துக்கொண்டு உள்ளே போய்ச் சோபாவில் சாய்ந்தார். பகல்வேளையில் விளக்குகள் எரிந்தும் அவர் முகம் இருட்டாகவே இருந்தது.

தன் கணவரின் இந்தத் திடீர் நடத்தைக்கு முத்துலட்சுமி காரணமல்ல என்பது மட்டும் புரிந்தது திலகாவுக்கு.

                        -திண்ணை இணைய இதழ் 05-11-2017




Tuesday, 21 November 2017







பார்க்க முடியாத தெய்வத்தை...

--கோ. மன்றவாணன்—


பழைய திரைப்படங்களில் பார்க்கலாம். மருத்துவர்கள் கூரைமுகடு வைத்த தோலாலான தம் கைப்பைகளுடன் நோயாளிகளின் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதை. அந்தப் படங்களைக் கவனித்துப் பார்த்தால் அந்த நோயாளி வீட்டினர் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
தொலைதூரக் கிராமங்களில் உள்ள ஏழை வீட்டிற்கும் வந்து மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் இருந்தார்கள் என்று என் சிறுவயதில் கேள்விபட்டிருக்கிறேன்.
கோவை மாவட்டம் மதுக்கரையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மிதிவண்டியில் சென்று மருத்துவம் பார்த்த மருத்துவர் இருந்ததாகக் குரும்பப்பாளையத்தில் வசிக்கும் நாராயணசாமி என்னிடம் தெரிவித்தார்.
என் சிறுவயதில் ஆஸ்துமா என்ற மூச்சிரைப்பு வந்து அவதிபட்டிருக்கிறேன். என்னைவிட என் அம்மாதான் என் வேதனையைப் பார்த்து அதிகம் அவதிபட்டிருப்பார்கள். அதை இழுப்பு என்றும் இசிவு என்றும் என் அம்மா சொல்வார்கள். பொதுவாக அது இரவில்தான் வரும். அந்த நேரத்தில் மருந்துக்கடையும் இருக்காது. பக்கத்தில் மருத்துவர் வீடும் இல்லை. மருத்துவர் வரவும் வாய்ப்பில்லை. மருத்துவமனையும் அருகில் இல்லை. இருந்தாலும் உடனடியாகச் செல்ல வண்டி வசதியும் இல்லை. பல வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்க்கும் என் தாய்க்குப்  பணவசதியும் இல்லை. யாரோ சொன்னார்கள் என்று வேப்பெண்ணெய்யைக் காய்ச்சி என் உடல் முழுவதும் தேய்ப்பார்கள். ஒரு பாலாடை அளவுக்குக் குடிக்கவும் வைப்பார்கள். எதிர்வீட்டுத் திண்ணையில்தான் பொத்தல் விழுந்த கித்தான் சாக்கு விரித்துப் படுத்திருப்போம். இழுத்துக்கொண்டிருக்கும் என்னையும்- என் சிரமத்தைப் போக்கத் துடித்துக்கொண்டிருக்கும் என் தாயையும் அக்கம் பக்கத்தினர் பார்த்துப் பரிதாபப்படுவார்கள். அப்படி அவர்கள் பரிதாபப்படும்போது அவர்கள் நினைவில் நாம் இருக்கிறோமே என்று ஆறுதல் பெறுவதும் உண்டு. அது எப்படியோ இழுப்பு சரியாகி அடுத்தநாள் காலையில் பள்ளிக்குச் சென்றுவிடுவேன்.
பள்ளிக்குச் செல்லும்போது பார்த்திருக்கிறேன். ஒரு வீட்டில் விளம்பரப் பலகை ஒன்றிருக்கும். பரம்பரை செம்மண்டல வைத்தியசாலை என்று அதில் எழுதப்பட்டிருக்கும். அதன் இடது பக்கத்தில் எலும்பும் தோலுமாக ஒரு குழந்தைப்படம் வரையப்பட்டிருக்கும். அதைப் பார்க்கும்போது நோஞ்சானாக இருந்த நான்தான் அது என்று நினைத்துக்கொள்வேன். அதன் வலது பக்கத்தில் ஒரு கொழுகொழு குழந்தைப்படம் வரையப்பட்டிருக்கும். அந்தக் குழந்தையின் கையில் செம்மண்டல வைத்திய சாலையின் மருந்துப்புட்டி இருக்கும். ஆகப் பரம்பரை செம்மண்டல வைத்திய சாலையில் மருந்து சாப்பிட்டால் நோய் தீரும். நாமும் கொழுகொழு என்று இருக்கலாம் என ஆசைப்பட்டிருக்கிறேன். ஆசை நிறைவேறியதே இல்லை.
இந்தியா வளர்ந்துவிட்டதாகவே நம் அரசியல் தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். அவர்கள் வளர்ந்துவிட்டதால் இந்தியாவே வளர்ந்துவிட்டதாகக் கருதிக்கொள்கிறார்களோ என்னவோ. ஆகத் தங்கள் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற நிலையில்தான் நம் தலைவர்கள் இருக்கிறார்கள்.
இன்னமும் அருகில் மருத்துவ மனை, பள்ளிக்கூடம் இல்லாத கிராமங்கள் நம் நாட்டில் ஏராளமாக உள்ளன. சில தூரத்து மலைக்கிராமங்களில் பள்ளிகள் இருந்தாலும் ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதைக் கண்காணிக்க அவ்வளவு தூரம் எந்த மேலதிகாரியும் அங்கு வரப்போவதும் இல்லை.
ஏழைகளுக்காக மட்டும்தான் அரசு மருத்துவ மனைகள் உள்ளன. அங்கு வந்து பாருங்கள். நூற்றுக்கணக்கான நோயாளிகளை சில நிமிடங்களில் சிகிச்சை அளித்து அந்தப் பெருங்கூட்டத்தைக் கலைத்துவிடுகிறார் ஒரே மருத்துவர். அப்படியானால் சிகிச்சையின் தரம் எப்படி இருக்கும். அரசு மருத்துவ மனையில் தரமான சிகிச்சை வழங்குவதாக அதிகாரிகளும் அமைச்சர்களும் சொல்கிறார்கள். அவர்களுக்குச் சாதாரணமான காய்ச்சல் வந்தாலே தனியார் நடத்தும் மிகப்பெரும் மருத்துவ மனைக்குச் சென்றுதான் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். அப்படியானால் அரசு மருத்துவ மனையின் நிலையை அறிந்துகொள்ளலாம்.
உயர்மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அதுவே நல்லரசாகும். ஆனால் கல்வியும் மருத்துவமும் கோடிகள் புரளும் தொழிலாக மாறிவிட்டது.
கோடி ரூபாய் செலவிட்டு மருத்துவம் படித்து வருபவர், அதை மீட்க அனைத்துப் பணவசூல் முயற்சிகளும் செய்ய வேண்டியதாகிறது என நியாயப்படுத்துகிறார்.... தன் மகனை மருத்துவம் படிக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு தந்தை.
இப்போதெல்லாம் எந்தத் திரைப்படத்திலும் மருத்துவர்கள் நோயாளிகள் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதாகக் கனவுக் காட்சியில்கூடக் காட்டப்படுவதில்லை.
மருத்துவத்துறை மிகவும் வளர்ந்துவிட்டது. மருத்துவ உபகரணங்கள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் நோயாளிகள் வீட்டுக்குக் கொண்டுபோய் சிகிச்சை செய்ய முடியாது என்று சொல்லக்கூடும். ஆனால் மிகு அவசரத்துக்காகவாவது அல்லது முதலுதவி முயற்சியாகவாவது மருத்துவர்கள் நோயாளியின் வீட்டுக்கு வந்தால் என்ன?
என்னதான் முடியாமல் இருந்தாலும் எந்த மருத்துவரும் நம் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிப்பதில்லை. அப்படிச் செய்தால் அது டாக்டரின் கம்பீரம் போய்விடுமாம். மரியாதை இருக்காதாம்.
என் அண்ணன் ஜவஹர் மிகவும் சுறுசுறுப்பானவர். நோயென்று டாக்டரிடம் சென்றவரில்லை. அவருக்கு ஒருநாள் இரவு முடியாமல் போய்விட்டது. பேச்சு, நினைவு இல்லாமல் போய்விட்டது. அவருடைய மகளும் மனைவியும் உடனிருந்தனர். அவர் வாழ்ந்த தெருவில் சுமார் 20 மருத்துவ மனைகள் உள்ளன. அந்தத் தெருவே டாக்டர்கள் தெரு என்றாகிவிட்டது. என் அண்ணன் வீட்டுக்கு எதிரிலேயே ஒரு  பெரிய புகழ்வாய்ந்த மருத்துவமனை உள்ளது. என் அண்ணன் மகள் ரம்யா அந்த மருத்துவ மனைக்கு ஓடிச் சென்று எதிர்வீட்டில் என் அப்பா பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கிறார். சற்று வந்து பாருங்கள் என்று மருத்துவரைக் கெஞ்சிக் கேட்டிருக்கிறார். மருத்துவரைத் தெய்வம்  என்று கருதுகிறோம். ஆனால் அந்தக் கருணை தெய்வம் வரமுடியாது என்று மென்குரலில் பதில் சொன்னது. “ஒரு நர்சையாவது அனுப்பி என்னன்னு பார்க்கச் சொல்லுங்க” என்று மன்றாடி இருக்கிறார். நர்சையும் அனுப்ப முடியாது. வேண்டுமானா பேஷண்ட்ட நீங்க அழைச்சிட்டு வாங்க” என்றார் நவீன மருத்துவர். அம்மாவும் மகளும் எப்படித் தூக்கி வரமுடியும். முடிவில் அந்த இரவில் என் அண்ணன் டாக்டரிடம் செல்லாமலேயே இறந்துவிட்டார். ஆக எதிர்வீட்டுக்கே கூட அவசர அவசியத்துக்கு ஒரு மருத்துவர் வந்து எட்டிப் பார்க்கவில்லை.
இதுதான் இன்றைய மருத்துவர்களின் எதார்த்த நிலை. அங்கொன்றும் இங்கொன்றுமாக உதவும் மனப்பான்மையில் நற்குணம் நிறைந்த தரமான மருத்துவர்கள் இருக்கிறார்கள்தாம்.
இந்நிலையில் என்னால்  நம்ப முடியாத ஒரு செய்தியைப் பார்த்தேன். அது கனவா நனவா என்று என்னை நான் கிள்ளிப் பார்த்துக்கொள்ளவில்லை. நல்ல நினைவோடுதான் இருந்தேன். அந்த அளவுக்கு வியப்பளிக்கும் நற்செய்தி அது.
ஒடிசாவில் உள்ள மால்கங்காரி பகுதியில் மருத்துவ வசதி இல்லை. அங்குப் போக வர சாலை வசதியும் இல்லை. அதனால் ஆம்புலன்சும் வர இயலாத நிலை. பிரசவ வலியில் உயிருக்குப் போராடி இருக்கிறாள் ஓர் இளம்பெண். தகவல் தெரிந்து ஓம்கர் ஹோட்டா மருத்துவமனையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் தன் உதவியாளரை அழைத்துக்கொண்டு அந்தக் கிராமத்துக்குப் போய்ப் பிரசவம் பார்த்துள்ளார்.
ஆனால் பிரசவத்திற்குப் பிறகு குருதிப் போக்கு நிற்காததால் தாயையும் குழந்தையையும் கயிற்று கட்டிலில் வைத்து 8 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார் அந்த மருத்துவர். மருத்துவ மனையில் வைத்துத் தகுந்த மருத்துவம் கிடைக்கச் செய்துள்ளார். இப்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இணையத்தில் வந்த அந்தச் செய்தியின் ஊடாகவே அந்த மருத்துவர் தாயையும் குழந்தையையும் கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்துத் தூக்கி வரும் காட்சி காணொலியாக இணைக்கப்பட்டிருந்தது. மேடு பள்ளங்கள்.... முட்கள் கற்கள்... கரடு முரடு நிறைந்த குறுகலான ஒற்றையடிப் பாதை... சறுக்கிவிடும் ஏற்ற இறக்கங்கள்... குறுக்கிடும் சிற்றாறுகள்... இவற்றைத் தாண்டி அவர்களை மருத்துவர் சுமந்து ஓடி வருவதைப் பார்க்கும் போது... தெரசாக்கள் இந்த மருத்துவரைப் போன்ற சிலரின் வடிவில் இருக்கிறார்கள் என்றே தோன்றியது. என் கணினி வழியாகக் காணொலிக் காட்சியில் தெரிந்த அந்த மருத்துவரைக் கைகூப்பி வணங்கினேன் என்னையும் அறியாமல் எழுந்து நின்று.

எத்தனையோ திருக்கோவில்களின் நெடும்படிகளில் ஏறி இறங்கியும் பார்க்க முடியாத தெய்வத்தைப் பார்த்துவிட்டேன்.

                          -திண்ணை இணைய இதழ் 12-11-2017

Wednesday, 15 November 2017

உன் குரல் கேட்டால்...





              நள்ளிரவைக் கடந்து வெகுதூரம் 
              நடந்து வந்த பொழுதுக்கும்
              நாள்விடியலுக்கும் இடையே உள்ள
              நேரத்துளிகளில்
              தோட்டத்து மாமரத்தில் இருந்து
              தொடர்ந்து கேட்கிறது
              குருவிகளின் முணுகலோசை...

              அதைக்கேட்டுத்தான் விழித்துக்கொள்கிறதோ
              செம்மஞ்சள் பூசிய சூரியன்

              தலையாட்டிப் பேசும் பூவின் குரல்
              கருவண்டுகளுக்கும் கேட்கிறது
              கவிஞர்களுக்கும் கேட்கிறது

              நிலா பேசுவதை
              மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள்
              அவரவர் தாய்மொழிகளில்

              ஊமைகளும் பேசுகிறார்கள்
              விரல் மொழியில்
              விழி வழியில்

              மொழிபெயர்ப்புத் தேவையில்லாத
              அழியாத மொழியொன்று உண்டு
              அது காதல்மொழி


              தாயின் குரல்கேட்பதே
              குழந்தையின் மனசை வார்ப்பிக்கும்
              இசை


              தாயே... தமிழே....
              உயிர்எரியும் வருத்தம் உண்டு
              உன்குரலைக் கேட்க முடியவில்லையே
              எங்கள் மழலையர் பள்ளிகளில்....

              இறந்து கிடக்கும் நான்
              எழுந்துவர முடியும்
              உன் குரலைக் கேட்டால் !

              -கோ. மன்றவாணன்