அன்னப்பறவை ஆகவில்லை நான்
தண்ணீரை நீக்கிவிட்டுப்
பால்மட்டும் பருக
நீதிப்பறவை ஆகவில்லை நான்
மெய்யெது பொய்யெது
என அறிய
உள்மனநோக்குப் பறவை ஆகவில்லை நான்
முகமூடிகளே நிறைந்த உலகில்
நல்ல நட்பைக் காண
வஞ்சத்தால் கொழுத்துக் கிடக்கிறது
பூமியின்
ஒவ்வோர் அணுவும்
தீராத ஆசை
பூமியைத் தொடாமலே
புதியதோர் வாழ்வு காண
அடங்காத வேட்கை
மண்ணைத் தொடுவதற்கு முன்பே
மழைநீர் அருந்த
அமுதம் வேறேது?
நிலம்சேரும் முன்பே அருந்தும்
மழைநீர் போல
கனவு காணுகிறேன்
கருவாக...
சக்கரவாகப் பறவையின் முட்டையில்
-கோ. மன்றவாணன்

No comments:
Post a Comment