Monday, 27 November 2017

யாருமில்லாத மேடையில்....





               யாருமில்லாத மேடை
               ஆளுமில்லாத அரங்கு
               சுவரில் ஒட்டியபடி
               சங்கீத கச்சேரியை அரங்கேற்றுகிறது
               சற்றே வாலாட்டும் பல்லி

               காற்று விடைபெற்றுச் சென்றிருக்கும்
               கீற்று அசையாத தென்னந்தோப்பு
               கூவிக் கொண்டிருக்கிறது
               குயில்

               தகிக்கிறது பாலைவனம்
               தடம்ஏதும் அற்ற மணல்வெளி
               மண்பிளந்து வெளிக்கிளம்பும் உயிர்த்துளியாய்
               எழத்துடிக்கிறது மனம்

               கொட்டி வைத்துக் காத்திருக்கிறேன் கவிதைகளை...
               கொத்த வரவில்லையே ஒரு குருவியும்

               ஓர் அருவக் காற்றாய் நின்று
               யாருமில்லாத மேடையில் பாடுகிறேன்
               செவிகளற்றுக் கிடக்கிறது திடல்


               ....கோ. மன்றவாணன்

Sunday, 26 November 2017






நறுமுகையும் முத்தரசியும்

------கோ. மன்றவாணன்-------

“ஏய் முத்துலட்சுமி... இந்தச் சாக்கடை எத்தன நாளா அடைச்சிக்கிட்டு இருக்கு. சொன்னாத்தான் செய்வீயா?”

“பாக்கலம்மா...”

“என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா... நீ பாக்கமாட்டீயா?”

“இல்லம்மா...”

“என்ன இல்லம்மா நொள்ளம்மா. சாக்கடையை ஒழுங்காக் கிளீன்பண்ணு”

“ஒடம்பு முடியலம்மா நாளக்கிச் செய்றேம்மா”

“அதுவரிக்கும் நாத்தம் குடலத்தின்னனுமா. கொசு வேற முட்டப்போட்டு டெங்கு சிக்கன்குனியான்னு நோய் வருதுங்கறாங். இப்பவே செய்யு” என்று கடும்உத்தரவு பிறப்பித்துவிட்டுக் கூடத்துக்குள் போனாள் திலகா.


ந்த வீட்டில் முத்துலட்சுமி இரண்டு மூணு வருஷமா வீட்டுவேலை பார்க்கிறாள். வீட்டுவேலை செய்கிற எல்லாப் பெண்களின் கணவன்களைப் போலவே அவளுடைய கணவனும்  வேலை எதற்கும் போகாமல் அவள்கிட்டேய பணம்வாங்கிக் குடிப்பதுதான் தினப்பலன்.

காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு வந்துவிட வேண்டும். வாசல் தெளித்துக் கோலம் போட வேண்டும். வீட்டுக்கு முன் வாசல் வழியாக அவள் வரக்கூடாது. பின்வாசல் வழியாகத்தான் வரவேண்டும். முந்தியநாள் பயன்படுத்திய பத்துப்பாத்திரங்களை எல்லாம் கழுவ வேண்டும். பாத்திரத்தில் ஏதாவது ஒட்டி இருந்தால் வீட்டம்மாவின் கடுஞ்சொல் சுடுஞ்சொல் எல்லாம் மனசைப் பாடாய்ப்படுத்தும். “ஏம்மா இப்படி ஏசுறீங்கன்னு” கேட்டால் அந்த நேரமே வேலை போய்விடும்.

மரம் செடி கொடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்ற வேண்டும். தினமும் வீடு முழுவதும் பெருக்கி  லைசால் நனைத்த நூல்பஞ்சால் தரைமுழுவதையும் துடைக்க வேண்டும். என்னதான் தரையைச் சுத்தமாகப் பெருக்கித் துடைத்தாலும் “என்ன நறநறன்னுது” என்று கேட்பார் வீட்டய்யா செல்வம். ஞாயிற்றுக்கிழமை என்றால் ஒட்டடை வேறு அடிக்க வேண்டும். வீட்டய்யா டிரைவர் வைத்திருக்கவில்லை. போர்ட்டிகோவில் இருக்கும் அவருடைய பழைய காரையும் அவள்தான் தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.

மாதம் 1 ஆம் தேதிதான் அவளுக்கும் சம்பள நாள். எந்த 1ஆம் தேதியிலும் அவள் கைநீட்டிச் சம்பளம் வாங்கியதில்லை. இன்று சம்பளம் தருவாங்க இன்று சம்பளம் தருவாங்கன்னு பல நாள்கள் எதிர்பார்த்துத் தலைசொறிந்து நிற்பாள். வீட்டய்யாவோ வீட்டம்மாவோ அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவளாகவும் சம்பளம் கேட்க மாட்டாள். “கேட்டா தப்பா நெனச்சுக்குவாங்களோ”ன்னு அவளுக்குப் பயம். ஏழு எட்டுத் தேதியில்தான் சம்பளம் தருவார்கள். சில மாதங்களில் பதினொன்று பன்னிரண்டு தேதிகூட ஆயிடும்.


சாக்கடையைச் சுத்தம் செய்துவிட்டு வந்தாள்.

ஓர் உயர் அதிகாரி போன்ற தோரணையில் தோட்டத்துக்கு வந்து ஆய்வு செய்தாள் வீட்டம்மா. “கழிதண்ணி ஏன் வேஸ்டா போவுது. அத வாழமரத்துக்குப் பாய்றமாரி வாய்க்கா பண்ணிவுடு” என்று சொன்னாள். அதையும் செய்தாள்.

வீட்டுக்குப் பின்புற ஜன்னல் விளிம்பில் அவளுக்கென வைத்திருந்த டம்ளரில் காபி ஊற்றிவிட்டு உள்ளே போனாள் வீட்டம்மா.

அங்கேயே குத்துக்காலிட்டு அதைக் குடித்தாள். அதுதான் அவளுக்கு கர்த்தர் இளைப்பாறுதல் தரும் நேரம். கொஞ்சம் காபி ஸ்டிராங்கா இருந்தா தேவலை  என நினைத்தாள்.

இளைப்பாறுதலை முடிவுக்குக் கொண்டுவர உள்ளே இருந்து அழைப்பு வந்தது.

“முத்துலட்சுமி...”

“இதோ வந்துட்டம்மா”

“இந்த டைனிங் டேபிள் கீழே காபி சிந்திடுச்சு. அதைச் சுத்தமா துடைச்சிட்டுப் போ”

இப்போது அவள் நிறைமாத கர்ப்பிணி. பெரிய டைனிங் டேபிள் அது. காபி ஆறாக ஓடி ஒருபுறம் இருந்து மறுபுறம் எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்கு. அவளால் குனிந்து நிமிருவது சிரமாக இருந்தது. அப்படியே தரையோடு உட்கார்ந்து உள்ளே நுழைந்து துடைத்தாள்.

தானும் ஒரு பெண்ணாக இருந்தும் வீட்டம்மா கர்ப்பிணி என்று அவள் மீது இரக்கப்படவில்லை. எல்லா வேலையையும் வாங்கினாள்.

“முத்துலட்சுமி”

“என்னம்மா... இதோ வந்துட்டம்மா...”

சமையல்கட்டிலிருந்து வந்த வீட்டம்மா, “ஃபிரிஜ்ல தக்காளி இல்ல... இப்பத்தான் பாத்தேன். ரொம்ப அர்ஜெண்ட்.ஓடிப்போய் தெருமுனையில இருக்கற கடையில ஒருகிலோ தக்காளி வாங்கிட்டு வா. சீக்கிரம் வா.

நடக்கவும் முடியாம இருக்கிற அவள் எப்படி ஓடிப்போய் ஓடிவருவாள்?

ஐம்பது ரூபாய்த் தாளை வாங்கிக்கொண்டு பின்வாசல் வழியே வந்து வீட்டைச் சுற்றி வெளியே வரும்போது நாய்க்குச் சோறு வைக்கிற தட்டில் கால்வைத்து விழப்போனவள் நல்ல வேளையாக கேட் கிரிலைப் பிடித்துச் சுதாகரித்துக்கொண்டாள். அப்போது சரிந்த முந்தானையைச் சரிசெய்த படியே கடையை நோக்கி முடிந்தவரை விரைந்தாள்.


ந்த வீடே மகிழ்ச்சியில் திளைத்தது. அன்றுதான் லக்னோவில் உள்ள தன் மகளுக்குப் பெண் குழந்தை பிறந்தது எனத் தொலைபேசியில் தகவல் வந்தது. ஆமாம் செல்வம் தாத்தாவாகிவிட்டார். அவர் ஒரு பெரிய எழுத்தாளர். மேடைப் பேச்சாளர். அவரின் கிடுக்கிப்பிடியில் சிக்காத அரசியல்தலைவர்களே இல்லை. தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் பங்குபெறுவார்.

செல்வத்திடம் மாப்பிள்ளை பேசினார். “பொண்ணு அனுஷ நட்சத்திரத்துல பொறந்திருக்கா. ந, நி, நு, நே என்ற எழுத்துகளில் தொடங்கும் ஒரு நல்ல பேரைச் சொல்லுங்க மாமா” என்றார்.

ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்ததுபோல் உடனடியாக “நறுமுகை” என்று சொல்லி, அருகிலிருந்த தன்மனைவியைப் பார்த்து குறுநகை செய்தார்.

“டிவி சீரியல்ல பிரியமானவளில் வரும் ஒரு குழந்தையோடப்  பெயர்தான் அது. என்னமோ புதுசா நீங்களே கண்டுபிடிச்சிட்டமாரி கெத்தா பாக்றீங்க” என்று போட்டு உடைத்தாள் அவருடைய மனைவி திலகா.

தனக்குப் பேத்தி பிறந்ததையும் அக்குழந்தைக்கு நறுமுகை எனப் பெயர்சூட்டி இருப்பதையும் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் சேதி பரப்பினார்.  

5.5 இஞ்ச் சைசில் இருந்த ஆண்டிராய்ட் போனில் என்ன கமெண்ட்ஸ் வருகிறது எத்தனை லைக் வருகிறது என்பதைப் பேராவலோடு பார்த்துக்கொண்டிருந்தார். இடையிடையே முகநூலில் வாழ்த்துரைத்த அத்தனை பேருக்கும் ஏற்கனவே காப்பி பண்ணித் தயாராக வைத்திருந்த “நெஞ்சினிக்கும் நன்றி” என்பதை பேஸ்ட் பண்ணியபடி இருந்தார்.

நறுமுகை என்று தமிழ்ப்பெயர் வைத்ததற்காகவே நிறைய வாழ்த்துகள் குவிந்தன. பாராட்டியவர்களில் எத்தனை பேருடைய குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் இருந்திருக்கும் என்று நீங்கள் கேள்வி கேட்டால் என்னிடத்தில் பதில் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் பெயர் வைப்பதே சாதனை ஆகிவிட்டது என்பது மட்டும் புரிகிறது.

சிலர் அவருடைய வீ்ட்டுக்கே அகர்வால் ஸவீட்பாக்ஸோடு வந்து பாராட்டிவிட்டுப் போனார்கள். அப்படி வந்த ஒவ்வொருவருக்கும் கையடக்கத் திருக்குறள் நூலை வழங்கினார். அது அவருடைய வழக்கமும் கூட.

அப்பொழுதுதான் கவனித்தார். அந்தக் கூடத்தில் பொருட்கள் கலைந்திருந்தன. பெருக்காமல் இருந்ததற்கான அடையாளமாகத் தரையில் பழைய பேப்பர்கள் சிதறிக் கிடந்தன.

“எங்க அந்த முத்துலட்சுமி? வீடே குப்பையா கிடக்குது. குழந்தை பிறந்த சேதி கேட்டு நிறைய பேரு வராங்க. அவங்க என்ன நெனப்பாங்க?”

“அவ நேத்திலிருந்து வரலைங்க. சொல்லிட்டும் போவல அந்தக் கழுதை. நானேதான் எல்லா வேலயையும் செஞ்சிக்கிட்டிருக்கேன்.”

“அவ வருவான்னு நா நெனக்கல. வேற ஆளத்தான் பாக்கணும்.”

அப்போது ஜெகதீசன் ஒரு சால்வையைக் கொண்டுவந்து அவருக்குப் போர்த்தினார். “தாத்தாவாயிட்டீங்க பாராட்டுகள்” என்றார்.

“தாத்தா ஆவது கூட ஏதோ ஒரு பெரிய பதவியைப் பிடிச்சிட்ட மாதிரி நெனைக்கிறாங்க. விட்டா தெருவுல ட்யூப் லைட் கட்டி மைக் வச்சு கொடி தோரணம் கட்டி கட்அவுட் செய்து விழாவே நடத்திடுவாங்க போலிருக்கே” என்று உங்களுக்குத் தோன்றலாம்.

“ஜெகதீசன் உங்களால எனக்கொரு வேல ஆகணுமே”

“சொல்லுங்க ஸார். என்ன வேலென்னாலும் செஞ்சிடலாம்”

“இல்ல... நம்ம வீட்ல வேலக்காரி வரல்ல. ஒரு நல்ல வேலக்காரி கிடச்சா நல்லாருக்கும்.”

“அதுக்கென்னங்க.... நம்ம ஆறுமுகங்கிட்ட சொல்லிடுறேன். உடனே ஏற்பாடு பண்ணிடுவான்.”

“வேலக்காரின்னா பிராமணாளா இருந்தா தேவல.”

“வேலக்கி பிராமணாள் யாரும் வரமாட்டாங்கய்யா.”

“தெனமும் பேப்பர்ல வீட்டு வேலைக்குப் பிராமணப்பெண் தேவைன்னு வெளம்பரம் வருதே...”

“வெளம்பரம் வரும். ஆனா பிராமணப்பெண் வரமாட்டாங்க”

“அப்படின்னா பிள்ளைமார் செட்டிமார்ல மட்டும் ஆளப் பாருங்க.”

“நிறைய ஆள் இருக்காங்க ஸார் இதுக்கு ஏன் கவலப்படுறீங்க. நாளக்கியே பாருங்க ஒங்க வீட்ல நீங்க கேட்டமாரியே வேலக்காரி இருப்பா”


சொன்னபடியே அடுத்த நாளே அவர் வீட்டுக்கு புதுவேலைக்காரப்பெண் வந்துவிட்டாள். புது துடைப்பம் ஒன்றை எடுத்துக்கொடுத்து வேலையைத் தொடங்கி வைத்தார் வீட்டம்மா திலகா.

பேத்தி பிறந்ததைவிடவும் பேத்திக்கு நறுமுகை என்று பெயர் வைத்ததால் அவருக்குக் குவிந்த பாராட்டுகளில் மகிழ்ந்து தலைகால் புரியாமல் இருக்கிறார் செல்வம்.

இன்றும் அவர் முகநூலில் மூழ்கி இருக்கிறார். பேத்தி நறுமுகை பிறந்ததால் இன்னும் அவருக்கு வாழ்த்து கமெண்டுகளும் லைக்குகளும் தொலைபேசி அழைப்புகளும் வந்தபடியே இருக்கின்றன.

“திலகா இங்க வாயேன். இந்தக் கமெண்ட்ஸ் பாரேன்.”

ராஜன் அனுப்பி இருந்தார்.

“மேடை வேறு வாழ்க்கை வேறு என்றில்லாமல் கொள்கைப் பிடிப்போடு தமிழில் பெயர் வைத்த தங்களைத் தமிழ்த்தாயே நன்றியோடு வாழ்த்துகிறாள்.”

அடுத்து அன்று காலையில் வந்த அவரது கட்சி நாளிதழில் வெளியான விளம்பரத்தையும் காட்டினார். அதில் மைக் முன்னால் கைநீட்டிப் பேசுவது போன்ற செல்வத்தின் படம் பளிச்சென இருந்தது.

நறுமுகை எனப் பேத்திக்குப் பெயர்சூட்டி
நம்தமிழை வாழ வைத்த எங்கள் வழிகாட்டி
செந்தமிழ்க் காவலர்
செல்வம் அவர்களை வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறோம் என்று கவிதைபோல எழுதி இருந்தார்கள்.

அவளும் அதைப் படித்துவிட்டு “இந்தப் புகழ்ப்போதை எப்போதான் தெளியுமோ உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு உள்ளே போக முனைந்த போது  “அம்மா...” என்று குரல் கேட்டது.

வெளியில் வந்து பார்த்தாள்.

முத்துலட்சுமியின் கணவர்தான் வந்திருந்தார்.

வேண்டா வெறுப்பாய் அவரைப் பார்த்து “என்ன...” என்று அழுத்திக்  கடுமையாகக் கேட்டாள்.

“முத்துலட்சுமிக்குக் கொழந்த பொறந்திருக்கு. அதான் வேலக்கி வர முடியல. சொல்லிட்டுப் போலாம்ன்னுதான்...”

எந்த எதிர்வினையும் இல்லாமல் இருந்தாள் திலகா.

“கொழந்தைக்கு முத்தரசின்னு பேரு வச்சிருக்கோம்மா. இந்தாங்கம்மா சாக்லெட்டு எடுத்துக்குங்க”

இதைக் கேட்டவாறே வெளியே வந்த செல்வம் காட்டமாகச் சொன்னார்.

“முத்துலட்சுமியை இன்னமே வேலக்கி வரவேணாம்ன்னு சொல்லு. நாங்க வேற ஆள வச்சிக்கிட்டோம். கெளம்பு... கெளம்பு...”

சட்டெனத் திலகாவின் கையைப் பிடித்திழுத்துக்கொண்டு உள்ளே போய்ச் சோபாவில் சாய்ந்தார். பகல்வேளையில் விளக்குகள் எரிந்தும் அவர் முகம் இருட்டாகவே இருந்தது.

தன் கணவரின் இந்தத் திடீர் நடத்தைக்கு முத்துலட்சுமி காரணமல்ல என்பது மட்டும் புரிந்தது திலகாவுக்கு.

                        -திண்ணை இணைய இதழ் 05-11-2017




Tuesday, 21 November 2017







பார்க்க முடியாத தெய்வத்தை...

--கோ. மன்றவாணன்—


பழைய திரைப்படங்களில் பார்க்கலாம். மருத்துவர்கள் கூரைமுகடு வைத்த தோலாலான தம் கைப்பைகளுடன் நோயாளிகளின் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதை. அந்தப் படங்களைக் கவனித்துப் பார்த்தால் அந்த நோயாளி வீட்டினர் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
தொலைதூரக் கிராமங்களில் உள்ள ஏழை வீட்டிற்கும் வந்து மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் இருந்தார்கள் என்று என் சிறுவயதில் கேள்விபட்டிருக்கிறேன்.
கோவை மாவட்டம் மதுக்கரையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மிதிவண்டியில் சென்று மருத்துவம் பார்த்த மருத்துவர் இருந்ததாகக் குரும்பப்பாளையத்தில் வசிக்கும் நாராயணசாமி என்னிடம் தெரிவித்தார்.
என் சிறுவயதில் ஆஸ்துமா என்ற மூச்சிரைப்பு வந்து அவதிபட்டிருக்கிறேன். என்னைவிட என் அம்மாதான் என் வேதனையைப் பார்த்து அதிகம் அவதிபட்டிருப்பார்கள். அதை இழுப்பு என்றும் இசிவு என்றும் என் அம்மா சொல்வார்கள். பொதுவாக அது இரவில்தான் வரும். அந்த நேரத்தில் மருந்துக்கடையும் இருக்காது. பக்கத்தில் மருத்துவர் வீடும் இல்லை. மருத்துவர் வரவும் வாய்ப்பில்லை. மருத்துவமனையும் அருகில் இல்லை. இருந்தாலும் உடனடியாகச் செல்ல வண்டி வசதியும் இல்லை. பல வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்க்கும் என் தாய்க்குப்  பணவசதியும் இல்லை. யாரோ சொன்னார்கள் என்று வேப்பெண்ணெய்யைக் காய்ச்சி என் உடல் முழுவதும் தேய்ப்பார்கள். ஒரு பாலாடை அளவுக்குக் குடிக்கவும் வைப்பார்கள். எதிர்வீட்டுத் திண்ணையில்தான் பொத்தல் விழுந்த கித்தான் சாக்கு விரித்துப் படுத்திருப்போம். இழுத்துக்கொண்டிருக்கும் என்னையும்- என் சிரமத்தைப் போக்கத் துடித்துக்கொண்டிருக்கும் என் தாயையும் அக்கம் பக்கத்தினர் பார்த்துப் பரிதாபப்படுவார்கள். அப்படி அவர்கள் பரிதாபப்படும்போது அவர்கள் நினைவில் நாம் இருக்கிறோமே என்று ஆறுதல் பெறுவதும் உண்டு. அது எப்படியோ இழுப்பு சரியாகி அடுத்தநாள் காலையில் பள்ளிக்குச் சென்றுவிடுவேன்.
பள்ளிக்குச் செல்லும்போது பார்த்திருக்கிறேன். ஒரு வீட்டில் விளம்பரப் பலகை ஒன்றிருக்கும். பரம்பரை செம்மண்டல வைத்தியசாலை என்று அதில் எழுதப்பட்டிருக்கும். அதன் இடது பக்கத்தில் எலும்பும் தோலுமாக ஒரு குழந்தைப்படம் வரையப்பட்டிருக்கும். அதைப் பார்க்கும்போது நோஞ்சானாக இருந்த நான்தான் அது என்று நினைத்துக்கொள்வேன். அதன் வலது பக்கத்தில் ஒரு கொழுகொழு குழந்தைப்படம் வரையப்பட்டிருக்கும். அந்தக் குழந்தையின் கையில் செம்மண்டல வைத்திய சாலையின் மருந்துப்புட்டி இருக்கும். ஆகப் பரம்பரை செம்மண்டல வைத்திய சாலையில் மருந்து சாப்பிட்டால் நோய் தீரும். நாமும் கொழுகொழு என்று இருக்கலாம் என ஆசைப்பட்டிருக்கிறேன். ஆசை நிறைவேறியதே இல்லை.
இந்தியா வளர்ந்துவிட்டதாகவே நம் அரசியல் தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். அவர்கள் வளர்ந்துவிட்டதால் இந்தியாவே வளர்ந்துவிட்டதாகக் கருதிக்கொள்கிறார்களோ என்னவோ. ஆகத் தங்கள் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற நிலையில்தான் நம் தலைவர்கள் இருக்கிறார்கள்.
இன்னமும் அருகில் மருத்துவ மனை, பள்ளிக்கூடம் இல்லாத கிராமங்கள் நம் நாட்டில் ஏராளமாக உள்ளன. சில தூரத்து மலைக்கிராமங்களில் பள்ளிகள் இருந்தாலும் ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதைக் கண்காணிக்க அவ்வளவு தூரம் எந்த மேலதிகாரியும் அங்கு வரப்போவதும் இல்லை.
ஏழைகளுக்காக மட்டும்தான் அரசு மருத்துவ மனைகள் உள்ளன. அங்கு வந்து பாருங்கள். நூற்றுக்கணக்கான நோயாளிகளை சில நிமிடங்களில் சிகிச்சை அளித்து அந்தப் பெருங்கூட்டத்தைக் கலைத்துவிடுகிறார் ஒரே மருத்துவர். அப்படியானால் சிகிச்சையின் தரம் எப்படி இருக்கும். அரசு மருத்துவ மனையில் தரமான சிகிச்சை வழங்குவதாக அதிகாரிகளும் அமைச்சர்களும் சொல்கிறார்கள். அவர்களுக்குச் சாதாரணமான காய்ச்சல் வந்தாலே தனியார் நடத்தும் மிகப்பெரும் மருத்துவ மனைக்குச் சென்றுதான் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். அப்படியானால் அரசு மருத்துவ மனையின் நிலையை அறிந்துகொள்ளலாம்.
உயர்மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அதுவே நல்லரசாகும். ஆனால் கல்வியும் மருத்துவமும் கோடிகள் புரளும் தொழிலாக மாறிவிட்டது.
கோடி ரூபாய் செலவிட்டு மருத்துவம் படித்து வருபவர், அதை மீட்க அனைத்துப் பணவசூல் முயற்சிகளும் செய்ய வேண்டியதாகிறது என நியாயப்படுத்துகிறார்.... தன் மகனை மருத்துவம் படிக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு தந்தை.
இப்போதெல்லாம் எந்தத் திரைப்படத்திலும் மருத்துவர்கள் நோயாளிகள் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதாகக் கனவுக் காட்சியில்கூடக் காட்டப்படுவதில்லை.
மருத்துவத்துறை மிகவும் வளர்ந்துவிட்டது. மருத்துவ உபகரணங்கள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் நோயாளிகள் வீட்டுக்குக் கொண்டுபோய் சிகிச்சை செய்ய முடியாது என்று சொல்லக்கூடும். ஆனால் மிகு அவசரத்துக்காகவாவது அல்லது முதலுதவி முயற்சியாகவாவது மருத்துவர்கள் நோயாளியின் வீட்டுக்கு வந்தால் என்ன?
என்னதான் முடியாமல் இருந்தாலும் எந்த மருத்துவரும் நம் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிப்பதில்லை. அப்படிச் செய்தால் அது டாக்டரின் கம்பீரம் போய்விடுமாம். மரியாதை இருக்காதாம்.
என் அண்ணன் ஜவஹர் மிகவும் சுறுசுறுப்பானவர். நோயென்று டாக்டரிடம் சென்றவரில்லை. அவருக்கு ஒருநாள் இரவு முடியாமல் போய்விட்டது. பேச்சு, நினைவு இல்லாமல் போய்விட்டது. அவருடைய மகளும் மனைவியும் உடனிருந்தனர். அவர் வாழ்ந்த தெருவில் சுமார் 20 மருத்துவ மனைகள் உள்ளன. அந்தத் தெருவே டாக்டர்கள் தெரு என்றாகிவிட்டது. என் அண்ணன் வீட்டுக்கு எதிரிலேயே ஒரு  பெரிய புகழ்வாய்ந்த மருத்துவமனை உள்ளது. என் அண்ணன் மகள் ரம்யா அந்த மருத்துவ மனைக்கு ஓடிச் சென்று எதிர்வீட்டில் என் அப்பா பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கிறார். சற்று வந்து பாருங்கள் என்று மருத்துவரைக் கெஞ்சிக் கேட்டிருக்கிறார். மருத்துவரைத் தெய்வம்  என்று கருதுகிறோம். ஆனால் அந்தக் கருணை தெய்வம் வரமுடியாது என்று மென்குரலில் பதில் சொன்னது. “ஒரு நர்சையாவது அனுப்பி என்னன்னு பார்க்கச் சொல்லுங்க” என்று மன்றாடி இருக்கிறார். நர்சையும் அனுப்ப முடியாது. வேண்டுமானா பேஷண்ட்ட நீங்க அழைச்சிட்டு வாங்க” என்றார் நவீன மருத்துவர். அம்மாவும் மகளும் எப்படித் தூக்கி வரமுடியும். முடிவில் அந்த இரவில் என் அண்ணன் டாக்டரிடம் செல்லாமலேயே இறந்துவிட்டார். ஆக எதிர்வீட்டுக்கே கூட அவசர அவசியத்துக்கு ஒரு மருத்துவர் வந்து எட்டிப் பார்க்கவில்லை.
இதுதான் இன்றைய மருத்துவர்களின் எதார்த்த நிலை. அங்கொன்றும் இங்கொன்றுமாக உதவும் மனப்பான்மையில் நற்குணம் நிறைந்த தரமான மருத்துவர்கள் இருக்கிறார்கள்தாம்.
இந்நிலையில் என்னால்  நம்ப முடியாத ஒரு செய்தியைப் பார்த்தேன். அது கனவா நனவா என்று என்னை நான் கிள்ளிப் பார்த்துக்கொள்ளவில்லை. நல்ல நினைவோடுதான் இருந்தேன். அந்த அளவுக்கு வியப்பளிக்கும் நற்செய்தி அது.
ஒடிசாவில் உள்ள மால்கங்காரி பகுதியில் மருத்துவ வசதி இல்லை. அங்குப் போக வர சாலை வசதியும் இல்லை. அதனால் ஆம்புலன்சும் வர இயலாத நிலை. பிரசவ வலியில் உயிருக்குப் போராடி இருக்கிறாள் ஓர் இளம்பெண். தகவல் தெரிந்து ஓம்கர் ஹோட்டா மருத்துவமனையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் தன் உதவியாளரை அழைத்துக்கொண்டு அந்தக் கிராமத்துக்குப் போய்ப் பிரசவம் பார்த்துள்ளார்.
ஆனால் பிரசவத்திற்குப் பிறகு குருதிப் போக்கு நிற்காததால் தாயையும் குழந்தையையும் கயிற்று கட்டிலில் வைத்து 8 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார் அந்த மருத்துவர். மருத்துவ மனையில் வைத்துத் தகுந்த மருத்துவம் கிடைக்கச் செய்துள்ளார். இப்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இணையத்தில் வந்த அந்தச் செய்தியின் ஊடாகவே அந்த மருத்துவர் தாயையும் குழந்தையையும் கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்துத் தூக்கி வரும் காட்சி காணொலியாக இணைக்கப்பட்டிருந்தது. மேடு பள்ளங்கள்.... முட்கள் கற்கள்... கரடு முரடு நிறைந்த குறுகலான ஒற்றையடிப் பாதை... சறுக்கிவிடும் ஏற்ற இறக்கங்கள்... குறுக்கிடும் சிற்றாறுகள்... இவற்றைத் தாண்டி அவர்களை மருத்துவர் சுமந்து ஓடி வருவதைப் பார்க்கும் போது... தெரசாக்கள் இந்த மருத்துவரைப் போன்ற சிலரின் வடிவில் இருக்கிறார்கள் என்றே தோன்றியது. என் கணினி வழியாகக் காணொலிக் காட்சியில் தெரிந்த அந்த மருத்துவரைக் கைகூப்பி வணங்கினேன் என்னையும் அறியாமல் எழுந்து நின்று.

எத்தனையோ திருக்கோவில்களின் நெடும்படிகளில் ஏறி இறங்கியும் பார்க்க முடியாத தெய்வத்தைப் பார்த்துவிட்டேன்.

                          -திண்ணை இணைய இதழ் 12-11-2017

Wednesday, 15 November 2017

உன் குரல் கேட்டால்...





              நள்ளிரவைக் கடந்து வெகுதூரம் 
              நடந்து வந்த பொழுதுக்கும்
              நாள்விடியலுக்கும் இடையே உள்ள
              நேரத்துளிகளில்
              தோட்டத்து மாமரத்தில் இருந்து
              தொடர்ந்து கேட்கிறது
              குருவிகளின் முணுகலோசை...

              அதைக்கேட்டுத்தான் விழித்துக்கொள்கிறதோ
              செம்மஞ்சள் பூசிய சூரியன்

              தலையாட்டிப் பேசும் பூவின் குரல்
              கருவண்டுகளுக்கும் கேட்கிறது
              கவிஞர்களுக்கும் கேட்கிறது

              நிலா பேசுவதை
              மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள்
              அவரவர் தாய்மொழிகளில்

              ஊமைகளும் பேசுகிறார்கள்
              விரல் மொழியில்
              விழி வழியில்

              மொழிபெயர்ப்புத் தேவையில்லாத
              அழியாத மொழியொன்று உண்டு
              அது காதல்மொழி


              தாயின் குரல்கேட்பதே
              குழந்தையின் மனசை வார்ப்பிக்கும்
              இசை


              தாயே... தமிழே....
              உயிர்எரியும் வருத்தம் உண்டு
              உன்குரலைக் கேட்க முடியவில்லையே
              எங்கள் மழலையர் பள்ளிகளில்....

              இறந்து கிடக்கும் நான்
              எழுந்துவர முடியும்
              உன் குரலைக் கேட்டால் !

              -கோ. மன்றவாணன்


Saturday, 11 November 2017



மேதாவிகள் சிலர் நடத்தும் மேல்சபை

---கோ. மன்றவாணன்---

எனக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார்களோ இல்லையோ... எங்கே இலக்கியக் கூட்டம் நடந்தாலும் அங்கே சென்று தமிழ்கேட்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. மழைவர எத்தனிக்கும் ஒரு மாலை வேளையில் ஓர் இலக்கியக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன்.
சுற்றுவட்டாரப் பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து புகழ்பெற்ற ஒருவர் பாவேந்தரின் நூலைப்படி என்ற பாடலை வரிபிசகாமல் சுவைபடச் சொன்னார். காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் நீண்ட நேரம் அவர் பேசியது கூட்டத்தை நெளிய வைத்தது என்னவோ மெய்தான்.
அடுத்து இன்னொருவர் எழுந்தார். அவர் தன்னை நவீன இலக்கியவாதியாகவும்- சங்கத்தமிழ் அறிந்தவராகவும் வெளிப்படுத்திக்கொள்பவர் அல்லது அறியப்படுபவர். உண்மையிலேயே நவீன இலக்கியத்தில் மிகுஅறிவு கொண்டவர். அந்தக் கூட்டத்தை நடத்தும் அமைப்பாளர்களுக்கு மேலாக இருந்து கட்டளை பிறப்பிக்கும் நிலையிலும் இருப்பவர். நாள்தோறும் படிப்பவர். நான் மதிக்கின்ற நல்லவரும்கூட.
எது பேசுவதென்றாலும் ஆழ்ந்து படித்துவிட்டுப் பேச வேண்டும் என்று அறிவுரையோடு அவர் பேசத் தொடங்கினார்.
சங்கத்தமிழ் நூலைப்படி என்றெழுதிய பாரதிதாசன், சங்க இலக்கியத்துக்காக என்ன செய்தார்? சங்கத் தமிழ் பற்றி அவருக்கு என்ன தெரியும் என்றவாறு கேட்டு அதற்குப் பதில்களும் சொன்னார். சங்க இலக்கியத்துக்காக எதுவும் செய்யவில்லை; சங்கத் தமிழ் இலக்கியம் பற்றி எதுவும் எழுதவில்லை; சங்க இலக்கியம் அறிந்திருக்கவில்லை என்றார். ஓரிடத்தில்கூடக் கைதட்டல் கிடைக்கவில்லை என்றோ என்னவோ சோர்ந்துபோய் நன்றி வணக்கம் சொன்னார்.
அவரைப் பார்த்துக் கேட்டேன். பாவேந்தர் தமிழ்படித்தவர்; தமிழாசிரியராக இருந்தவர்; கண்ணகி புரட்சிக் காப்பியம் படைத்தவர்; மணிமேகலை வெண்பா பாடியவர்; பிசிராந்தையார் நாடகம் எழுதியவர்; திருக்குறளுக்கு உரை எழுதியவர் என்றேன். பிரெய்லி எழுத்தில் தமிழ்படித்த பேராசிரியர் ஒருவர் என் கருத்துக்கு ஒத்திசைந்து, பாவேந்தர் சேரத்தாண்டவம் என்றொரு நூலெழுதி உள்ளார் என்றார். அதைக் கேட்ட அவர், “அப்படியா” என்றபடி சற்றும் நாணாமல் மிடுக்கோடு அவர் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
அன்று அந்த அவையில் பாவேந்தரை வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியமே இல்லை. பாவேந்தர் பெயரை உச்சரிப்பதையே நவீன இலக்கியவாதிகள் எனச் சொல்லிக்கொள்வோர் விரும்புவதில்லை. பாவேந்தர் கவிஞரே இல்லை என்று “ஒரே அடி” கொடுத்து ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். திராவிட இயக்கம் சார்ந்த கவிஞர் என்பதாலும் அவரை வெறுக்கிற ஒரு கூட்டம் இருக்கவே செய்கிறது. பாரதிதாசன் கவிதைகளைப் படித்தால் தீட்டுபடும் என்பார்களோ என்னவோ. படிக்காமலேயே பாரதிதாசனை ஒதுக்கும் போக்கு, சில குழுக்களிடம் உண்டு.
பாரதியாரைவிடவும் தொழிலாளர்களுக்காக அதிகமாகப் பாடல்கள் எழுதியவர் பாவேந்தர். அப்படி இருந்தும் பொதுவுடைமைக் கட்சியினர் பாரதியையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும் மட்டும் தூக்கிப்பிடித்துப் பாரதிதாசனைப் புறக்கணித்த காலமும் இருந்தது. அந்தப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எந்தப் பாடலை எழுதினாலும், பிள்ளையார்ச்சுழி போலத் தலைப்பில் பாரதிதாசன் பெயரை எழுதிவிட்டுத்தான் எழுதத் தொடங்குவார். சில ஆண்டுகளாகத்தான் பொதுவுடைமைக் கட்சியினரும் பாரதிதாசனை ஏற்றுப் போற்றுகிறார்கள்.
சரி! பாவேந்தர் சங்கத் தமிழ் இலக்கியத்துக்காக எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதனால் அவர் தரம் தாழ்ந்துவிடுவாரா? ஒரு கவிஞன் என்ன எழுதி இருக்கிறானோ அதில்தான் அவனின் பெருமை இருக்கிறது. அதற்குள்தான் நாம் ஆய்வு நடத்த வேண்டும். பாரதியோ பாவேந்தரோ தாம் வாழ்ந்த காலத்தின் தேவைக்கேற்ப இயங்கி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாரதிதாசன் இதுபற்றி ஏன் எழுதவில்லை? அதுபற்றி ஏன் எழுதவில்லை என்றெல்லாம் கேள்வி கேட்பது நியாயமா? “இதுபோன்ற தனத்தில்” கேள்வி கேட்டால் எந்த எழுத்தாளரும் எந்த இலக்கியவாதியும் தப்ப முடியாதே. எந்த எழுத்தாளரும் எல்லாவற்றையும் எழுதிவிட முடியாதே!
நான் நினைப்பதையெல்லாம் ஓர் எழுத்தாளன் எழுத வேண்டும் என்று நினைப்பதும்-  என் கருத்துக்கு உட்பட்டே எந்த எழுத்தாளனும் எழுத வேண்டும் என்று நினைப்பதும்... அப்படி எழுதாதவர்களை எழுத்தாளர்களே இல்லை என்று இழிவுபடுத்துவதும்... இலக்கியக் கொடுங்கோல் அல்லவா?
தனக்கு வேண்டியவர்கள் தப்பாக எழுதினாலும் அதுவே சரியென்றும்... ஆகா... அருமையென்றும் சாதிக்கிறார்கள். தனக்கு ஆகாதவர்கள் சரியாக எழுதினாலும் அதை முட்டாள்களின் பிதற்றல் என்றும்... இலக்கியமே இல்லை என்றும் சாடுகிறார்கள். இதுவே தற்கால இலக்கிய மேதாவிகள் சிலர் நடத்தும் மேல்சபையின் தீர்ப்பாக உள்ளதே.
இலக்கியப் படைப்பின் நிறை-குறைகளைச் சுட்டி விவாதிப்பது தவறல்ல. ஆனால் அதில் அறம் வெளிப்பட வேண்டும்.
காலத்தின் தேவையையும் காலத்தின் பின்னணியும் அடிப்படையாக வைத்துத்தான் இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் நோக்க வேண்டும். விருப்பு – வெறுப்பு இவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். சாதி, மதம், கட்சி, கொள்கை, மொழி, தனிப்பட்ட நோக்கம் சார்ந்து எடைபோடக் கூடாது.
சுருக்கமாகச் சொன்னால்...
தனக்குப் பிடித்தவர்கள் எழுதுவதே இலக்கியம் என்றும்- பிறயாவும் கழிவுகள் என்றும் கருதும் முன்முடிவுகள் அறமாகாது.
இலக்கியம் மனங்களைப் பண்படுத்தும் என்கிறார்கள். மெத்த இலக்கியம் படித்த பலரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது... அது கேள்விக்குறியாகி விடுகிறது.





சட்டமா? நியாயமா?

கோ. மன்றவாணன்


சட்டம் மேலானதா? நியாயம் மேலானதா? என்ற கேள்வியை உங்களுக்குள் எழுப்பி விடைகாணப் பாருங்கள். கிட்டத்தட்ட எல்லாருடைய பதிலும் நியாயம்தான் மேலானது என்பதாக இருக்கும்.

கொலை செய்வோர் கூட, அவர்கள் தரப்பிலிருந்து சில நியாயங்களை அடுக்கக் கூடும். கொலைசெய்யப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும் நியாயங்கள் அணிவகுக்கும்.

திருடர்கள் கூட, வறுமையின் காரணமாகத் திருடினேன் என்று சொல்லக்கூடும். திருடு கொடுத்தவனின் வேதனையைப் பொருப்படுத்த வேண்டியதில்லை என்றும் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்றும் புத்திமதி புகலக்கூடும். யாரிடம் திருடினான்? பணக்காரன்கிட்டேதானே திருடினான் என்று இரக்க நியாயம் பேசுவார்கள்.

ஏதாவது யாராவது குற்றம் செய்தால், அதைச் சமூகத்தின் மீது சார்த்திவிட்டுத் தாங்கள் நியாயவாதிகள் என்று மார்தட்டுகின்ற புதிய தர்மர்கள் உண்டு.

இளம்பெண்ணை ஒருவன் களங்கப்படுத்திவிட்டான் என்றால்…. கற்பழித்துவிட்டான் என்றால்… அவனுக்காகச் சிலர் வாதாடத் தயாராக உள்ளார்கள். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மீதே பழிசுமத்திப் பாதகனைப் பாதுகாக்கப் புறப்பட்டுவிடுவார்கள். அந்தப் பெண் அந்த நேரத்தில் ஏன் அங்கு வரவேண்டும்? அவள் ஏன் ஆளைக் கவரும் ஆடை அணிய வேண்டும்? அவள் ஏன் துணைக்கு ஒருவரை அழைத்து வரவில்லை. அவளே உடன்பட்டு இருப்பாள். வெளிச்சத்துக்கு வந்ததும் பத்தினி வேடம் தரிக்கிறாள் என்றெல்லாம் ரப்பர் நாக்கை நாலாப்புறமும் சுழற்றுவார்கள்.

பள்ளிக்கூடத்தில் காலை 9 மணிக்கு மாணவர்கள் வருகை தர வேண்டும் என்பது பொதுஒழுங்கு. காலம் கடந்துவரும் மாணவர்கள் எப்படி எல்லாம் நியாயப் போர்வை போர்த்திப் பொய்க்காரணங்களைச் சொல்வார்கள் என்பது, மாணவர்களாக இருந்த நமக்கெல்லாம் தெரியும். பேருந்து தாமதம்; ஆட்டோ வரவில்லை; போக்குவரத்து முடக்கம்; வழியில் விபத்து; மருத்துவ மனைக்குப் போய்விட்டு வந்தேன் என்றெல்லாம் காரணங்கள் சொல்லக் கூடும். இவை சில நேரங்களில் உண்மையாக இருக்கக் கூடும். அந்த உண்மையான காரணங்கள் நியாயமானவைதாம். அதற்காக அவற்றை ஏற்கத் துணிந்தால் அதையே காரணம் காட்டி, அதையே சாதகமாக்கி, அவரவர் தாமதமாக வருவார்கள். இது தொடரும் போது பள்ளியில் பொதுஒழுங்கு கெட்டுப்போகும்.

வீட்டிலேயே காலம் தாழ்த்திவிட்டு, தூங்கிவிட்டு, தேநீர்க் கடையில் வம்பளந்துவிட்டு, தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டு,  அதுபற்றிக் கவலைப்படாமல் சமாளித்துக்கொள்ளலாம் என்றிருந்துவிட்டு; யார் என்ன செய்துவிடுவார்கள் என்று வீரம் பேசிவிட்டு அலட்சியமாகப் புறப்பட்டு வருபவர்கள் அந்தக் காரணங்களை வெளிப்படையாகச் சொல்வார்களா?

நியாயவிலைக் கடையில் பொருட்களை எடைக்குறைவாகக் கொடுப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நியாயமானதாகத்தான் இருக்கிறது. சாக்குப் பைகளில் கொக்கி போட்டுத் தூக்குவதால், சரக்குந்தில் வரும் மூட்டைகள் எல்லாம் எடை குறைவாகத்தாம் இருக்கின்றன என்கிறார்கள். என்ன பிரச்சனையோ எங்கே பிரச்சனையோ அதற்குத் தீர்வு காண்பதைவிட்டு, இழப்பை எல்லாருடைய தலையிலும் ஏற்றி வைப்பது சரியா? சரியென்றால் சரக்கு ஏற்றி இறக்கும் தருணங்களில்  இடையில் திருடுவார்கள்; கடைசியில் கடையில் எடையில் திருடுவார்கள். வாதத்துக்கு ஒவ்வொரு மூட்டையிலும் ஒரு கிலோ குறைவதாக வைத்துக்கொள்வோம். அதற்காக ஒவ்வொரு கிலோவிலும் 100 கிராம் எடைகுறைத்து விநியோகம் செய்யும்போது பல கிலோ கொள்ளை போகவில்லையா?

இப்போது இருக்கும் நிலை என்ன என்றால், சணல்சாக்குப் பைகளில் பொருட்கள் வருவதில்லை. அடர்த்தியான கெட்டியான ஞெகிழிப் பைகளில்தாம் பொருட்கள் வருகின்றன. கொக்கிப் போடும் நிலையும் இப்போது இல்லை. அப்போதும் எடை குறைகிறதே!

தங்கள் பிழைக்குத் தனக்கு மேலிருப்போரைக் காரணம் காட்டித் தப்பித்துக்கொள்ளவே தனிப்பட்ட நியாயங்கள் பயன்படும்.

உரிய படிவங்கள் கொடுத்தும்- சட்டப்படியான அனைத்தும் செய்தும்- அந்தப் பணியை நிறைவேற்றாமல் ஓர் அதிகாரி தாமதம் செய்து வந்தார். பலமுறை நடந்தும் பல காரணங்கள் சொன்னார். பிறகு அவர் நாசூக்காக லஞ்சமும் கேட்டார். கொடுத்திருக்கிறார்கள். லஞ்சம் வாங்கிய அந்த அதிகாரி, “இது எனக்கில்லை. மேலதிகாரிகளுக்கு” என்று நேர்மை பேசினார்.

அலுவலக எழுத்தர் தான் செய்யும் தவறுக்கு, அவருடைய மேலதிகாரியைக் காட்டுவார். அந்த மேலதிகாரியைக் கேட்டால் அவரைவிட மேலதிகாரியைக் கைகாட்டுவார். அந்த உயரதிகாரியைக் கேட்டால் அமைச்சருக்காக என்பார். அமைச்சரைக் கேட்டால் மேலிடத்துக்கு என்பார். ஆக ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு நியாயம் சிலுக்குச் சட்டை போட்டுக் கொண்டு சிரிக்கிறது. சில அலுவலகங்களில் லஞ்சப் பணத்துக்குக் கூட்டணி உண்டு.

இது குறித்துப் பொதுமக்களைக் கேட்டால், இதெல்லாம் சாதாரணமப்பா. அப்படி வாங்கினால்தான் இந்தக் காலத்தில் அவர்களுடைய குழந்தைகளை நல்ல பள்ளியில் நல்ல கல்லூரியில் படிக்க வைக்க முடியும்.  பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் செலவு பண்ண முடியும் என்று நியாயம் பேசி சமாதானம் ஆகிவிடுகிறார்கள்.

எந்த இடத்திலும் எந்தக் காலத்திலும் தவறு செய்யாமல் உரிய நேரத்தில் பணிகளைச் செய்யும் நேர்மையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது என்று சமூக அக்கறை நண்பர்கள் சிலரிடம் பேசி உள்ளேன். . நேர்மையாக இருந்த சிலருக்கு அரிதாக ஏற்பட்ட துயர நிகழ்வுகளைச் சொல்லி, நேர்மைக்கு எதிராகக் கொடிபிடிக்கும் நியாயவாதிகளாக அவர்கள் இருக்கிறார்கள்.

பரபரப்பான சாலையின் நாற்சந்தியில் சமிஞ்ஞை தூண் இருக்கிறது. சிவப்பு விளக்கு ஒளிரும் போது நின்றும்- மஞ்சள் விளக்கு எரியும் போது தயாராகியும்- பச்சை விளக்கு சுடரும் போது பயணித்தால் ஒரு நிமிடக் காத்திருப்பில் அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் சென்றுவிடலாம்.

“எனக்கு அவசர வேலை இருக்கிறது” “பள்ளிக்கு நேரமாகிவிட்டது” என்று ஒவ்வொருவரும் அவர்களின் அவசர நியாயங்களுக்கு உட்பட்டு போக்குவரத்து விதிகளை மதிக்காமல் போனால் என்னாகும்? விபத்து நடக்கும்; போக்குவரத்து முடங்கும். வாய்த்தகராறும் கைகலப்பும் கைகோர்த்துக்கொள்ளும். போக்கு வரத்தைச் சரிசெய்ய அரை மணி நேரத்துக்கும் மேலாகும். அதுவரை யாரும் அவரவர் போக வேண்டிய இடங்களுக்குப் போக முடியாது. இந்த எளிய எடுத்துக்காட்டு உணர்த்துவது என்னவென்றால், அவரவர் நியாயத்தைவிடச் சட்டமே சமூக அறனுக்கு வழிவகுக்கும் என்பதுதான். 

தப்புச் செய்பவர்கள் இங்கே புத்திசாலிகளாகவும் பிழைக்கத் தெரிந்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சட்டப்படி நடப்பவர்களைப் பைத்தியக்காரர்களாகப் பார்த்து நகையாடுகிறார்கள்.

இவ்வாறு பேசுவோரைத்தான் கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் இப்படிச் சொல்லியுள்ளார்.     

           கதைகட்ட சிலபேர் பிறந்துவிட்டால்
           கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
           காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
           கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு

சட்டம் என்பது ஒரே பார்வை கொண்டது. நியாயம் என்பது 360 பாகையிலும் பயணித்து ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் ஒவ்வொரு நியாயம் பேசும். அத்தனைக்கும் செவிசாய்த்தால் ஒரு தீர்வும் கிடைக்காது. அவரவர்க்கு அவரவர் தரப்பே நியாயமானதாகத் தெரியும். நியாயம் என்பது ஆளாளுக்கு மாறுபடும். சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றே!

அப்படியானால் சட்டம் என்பது நியாயம் அற்றதா? சட்டத்தில் நியாயம் உள்ளடங்கி இருக்காதா? என்றெல்லாம் யாரேனும் வினா அம்புகள் தொடுக்கலாம்.

சட்டம் என்பதே பொதுவான நியாயங்களின் அடிப்படையில் உருவாவது. அந்தப் பொதுநியாயத்துக்கு உட்படும் போது தனிப்பட்ட நியாயங்கள் ஏற்கத் தக்கதல்ல. பொதுஒழுங்கை நிலைநாட்டுவதே சட்டம். அந்தப் பொதுஒழுங்கை நோக்கியே உங்கள் நியாயங்கள் இருக்க வேண்டுமே தவிர, சுய நியாயங்களைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது.

நிறைவேற்றப்பட்ட ஒருசட்டம் நியாயமற்றதாக உள்ளது எனக் கருதினால், அந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முயலாம். அதுவரை அந்தச் சட்டத்தின்படிதான் நடக்க வேண்டும்.

சட்டத்துக்கு மதிப்பளித்துத் தனிப்பட்ட நியாயங்களை விட்டுத் தருவதுதான் சமூக அறனுக்கு உகந்த வாழ்க்கை.


சட்டமா? நியாயமா? என்றால் சட்டமே மேலோங்கும்..




கோப்பையைக்

கவிழ்த்துவிடுகிறார்கள்.



---கோ. மன்றவாணன்---


இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். பேராசிரியர் ஒருவர் கவிதை நூலொன்றை விமர்சனம் செய்தார். அது மரபுக்கவிதை நூல். அதைப் படிக்காமலேயே அதுகுறித்துப் பேசினார் என்றால் அவருடைய அசாதாரண ஆற்றலை வியக்காமல் இருக்க முடியாது.

பொதுவாக அணிந்துரையை, முன்னுரையைப் படித்துவிட்டு மொத்த நூலையும் படித்த மாதிரி பேசுகிற வழக்கம் பெருகிவிட்டது. மிகவும் எதிர்பார்ப்போடும் மதிப்போடும் ஒருவரை அணுகி, மதிப்புரை ஆற்ற அழைக்கிறார்கள்; வண்ண அழைப்பிதழ் அச்சடிக்கிறார்கள்; சுவரொட்டி ஒட்டுகிறார்கள்; நாளிதழ்களில் சிலர் விளம்பரமும் செய்கிறார்கள்; வெளியூர்க்காரர் என்றால் குளிரறை ஏற்பாடு செய்கிறார்கள்; அழைத்துவர மகிழுந்து கொண்டுவருகிறார்கள்.

நூல்குறித்து விமர்சனம் செய்பவரின் சிறப்புகளை எல்லாம் செந்தமிழ்த் திறத்தால் புகழ்ந்துரைக்கிறார்கள்; பொன்னாடை அணிவித்துப் பூங்கொத்துக் கொடுக்கிறார்கள்; மினுமினு தாளில் பொதிந்து பரிசுப்பொருட்களைத் தருகிறார்கள்; விடைபெற்றுப் போகும்போது பணஉறை அளிக்கிறார்கள்.

ஆனால் அத்தகு பேராசிரியர்கள் அந்நூலைப் படிக்காமல் பேசிச் சென்றால், ஆர்வத்தோடு கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் நிலை எப்படி இருக்கும். எதிர்பார்ப்போடு காத்திருந்த நூலாசிரியரின் நுண்மனம் நொந்து நைந்து இருக்காதா? வருகை தந்த சுவைஞர்கள் ஏமாற மாட்டார்களா?
அப்படித்தான் அன்றும் நடந்தது.

மரபுக் கவிதை நூலென்று தெரிந்துவிட்டது. எண்சீர் விருத்தங்களால் எழுதப்பட்ட நூல் என்பதும் புரிந்துவிட்டது. அதுபோதுமே பேராசிரியருக்கு. அதனால் அவர் முன்னுரையையோ அணிந்துரையையோகூடப் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

புதுக்கவிதையா மரபுக்கவிதையா என்ற சென்ற நூற்றாண்டு தலைப்பில் அரைமணி நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார். பலரும் பலகாலமாகச் சொல்லித் தேய்ந்த கருத்துகளையே மேலும் தேய்த்தார். அது அந்நிகழ்வின் பேசுபொருள் அல்ல. பேச வேண்டிய பொருள், பேசாப் பொருளாய் ஆனது.

“மரபுக்கவிதை என்பது உறையில் உள்ள வாள்” என்றார். “புதுக்கவிதை என்பது உறையில் இருந்து வெளிவந்த வாள்” என்றார். கூட்டம் கைதட்டி மகிழ்ந்தது.  நவீன கவிதை பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் அதை  “மார்பில் செருகப்பட்ட வாள்” என்று சொல்லி இருப்பாரோ என்னவோ?

மரபுக்கவிதை என்பது உறையில் உள்ள வாள் என்றால், பாரதியின் மரபுக்கவிதை அப்படித்தானோ? சுதந்திரப்போர் காலத்தில் பாரதியின் கவிதையே மக்களின் ஆயுதமாகக் கையாளப்பட்டிருக்கிறதே!

கவிதையைப் பார்க்காமல் கவிவடிவை விமர்சித்துக்கொள்வதில் என்ன பெரிய ஆதாயம்? கோப்பையின் வடிவத்தைக் குறைசொல்லும்போது, கோப்பையைக் கவிழ்த்துவிடுகிறார்கள். விளைவு... பருகத் தந்த தேநீர் மண்ணில் கொட்டிப் பாழாகிவிடுகிறதே. உள்ளத்தைப் பார்க்காமல் உடலைப் பார்த்துக் கூறுபோடுவது போல் அல்லவா இத்தகைய விமர்சனம் இருக்கிறது.

காலத்துக்கு ஏற்ப வடிவங்கள் மாறும். சொல்லும் முறைகளும் மாறும். ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிக்கொண்டு வந்தால்தான் அது வளர்ச்சி முகம். ஆனால் நுண்ணிய கவிமனம் மட்டும் என்றும் ஆராதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

பேச்சை முடிக்கும் தறுவாயில், கடைசி மூன்று மணித்துளிகளில் அந்தக் கவிநூலில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு வரிகள் படித்தார். ஏன் அதைப் படித்தார் என்று எங்களுக்கும் தெரியவில்லை. அவரும் சொல்லவில்லை.

கடைசிவரை அந்த நூலில் என்ன சிறப்பு இருக்கிறது என்று சொல்லவில்லை.

முழுவதும் படித்ததுபோல் காட்டிக்கொள்ளவும், தனக்கும் இலக்கணம் தெரியும் என்று மிடுக்குயர்த்திக்கொள்ளவும் முயன்றார். அதனால் அந்த விருத்தங்களில் ஏழு இடங்களில் தளை தட்டுப்படுகிறது என்றார். ஆனால் எந்த இடத்தில் எப்படித் தளை தட்டுப்படுகிறது என்று இறுதிவரை சொல்லவில்லை. எங்கோ எப்போதோ தமிழ்படித்த என் உள்மனம் புலம்பியது. “வெண்பா, கலிப்பா போன்ற பாவகைகளில் தளை தட்டுப்படுகின்ற சிக்கல் வரும். விருத்தப்பாக்களில் தளை தட்டுப்படுவதாகச் சொல்ல முடியாது”

விருத்தப்பா வாய்ப்பாட்டுக்குரிய சீர்களில் தவறு ஏற்படலாம். காய்ச்சீர் வரவேண்டிய இடங்களில் விளச்சீர், கனிச்சீர் போன்றவற்றை வைத்துவிடுவோர் உண்டு. குற்றியலுகரப் புணர்ச்சி காரணமாகச் சீர் குறைந்து போவதும் உண்டு. ஆனால் விருத்தப்பாக்களில் தளை பார்ப்பதில்லை. இவை என் பட்டறிவுக்குப் பட்டவை.

கூட்டத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகளை மறக்காமல் பாராட்டி உரையை நிறைவு செய்த பேராசிரியர், ஓரிடத்தில் கூட நூலாசிரியரைக் குறிப்பிடவே இல்லை.

குறிப்பு :

இதுகுறித்துக் கலிபோர்னியாவில் உள்ள பொறியாளரும் புலவருமான செந்தமிழ்ச்சேய் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். விருத்தப்பாக்களில் தளைபார்ப்பதில்லை என்று விளக்கமாகவும் எடுத்துக்காட்டுகளுடனும் பதில் அனுப்பினார்.