Sunday, 18 December 2016


வேலி தாண்டிய காற்று



கரையில் அத்துமீறி நுழைந்து வெறித்தாண்டவம்
ஆடிவிட்டுப் போகிறது
ஆண்டுதோறும் புயல்

விரிந்து பரந்து நிமிர்ந்து நின்ற
நூற்றாண்டு மரங்களை
நொடியில் சாய்த்து மாவீரம் பேசுகிறது

பசுமரத்து நிழலைப்
பறித்துக்கொண்டுபோய் எங்கேயோ
ஒளித்துகொள்கிறது

இருட்டில் விழி இழந்து தவிக்கின்றன
எங்கள் மின்கம்பங்கள்

வீட்டுக் கூரைகளுக்கு இறக்கைகள் முளைத்து
திசை தெரியாத வெளியில்
தத்தளிக்கின்றன

கருவாட்டுத் துண்டுகள் காய்ந்த
கடற்கரையில்
உடைந்த படகுகளின் மரத்துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன

பள்ளிக்கட்டடங்களைத் தகர்த்துவிட்டுப் போவதைப்
பார்த்தாலே புரிந்துவிடுகிறது
காற்றுக்கு இல்லை கல்வி வாசம் 

கடலோரத்தில் காவல் தெய்வமாய்க் கோவில் அமர்த்தப்பட்ட
மாரியம்மனும் கண்மூடிக் கொண்டாளோ
கோயிலையும் இடித்துவிட்டுப் போகிறதே புயல்

காற்றைக் கைது செய்யும் அதிகாரம்
யாருக்கும் வழங்கப்படவில்லை என்று தீர்ப்பளித்துவிட்டதாம்
இயற்கை நீதிமன்றம்

சுதந்திர ரவுடியாய்க் காற்று

-கோ. மன்றவாணன்






தீபத்தின் ஒளியில்



திரண்டு வந்து
அச்சுறுத்தியது இருட்டு
சிரித்தது அகல்விளக்கு

தலைகுனிவதே இல்லை
தீபம்
கவிழ்த்துப் பார்த்தும்

கருவறை இருட்டு
கடவுளின் முகதரிசனம்
தீபத்தின் கருணை

இரவு மாடம்
தீப ஒளி
நிலவு

பகலுக்கும்
விளக்குண்டு
சூரியன்

குடிசைக்குள்
குத்துவிளக்கு ஏற்றினேன்
கோவிலானது

அகல்விளக்குகளின்
அணிவரிசை
ஒளிக்கொலு

இருட்டா?
விளக்கேற்று
சிக்கலுக்குத் தீர்வு

வெளிச்சம்
விளக்குக்கு அல்ல
காந்தி

தீபத்தின் ஒளியில்
தேடு
நற்பாதை


     - கோ. மன்றவாணன்






அழுத கண்ணீர்


அலைசீறும்
ஆழியைப் போலவே
தொண்டர்களின் கண்ணீர்
வடிவதுமில்லை
வற்றுவதுமில்லை
தம்
தலைவர்கள் மறைகையில்

மனைவியின் கண்ணீர்
ரத்தமாக வழியும்
கணவன் பிரிகையில்

பிள்ளையைப் பறிகொடுத்த
பெற்றோரின் கண்ணீர்
ஆயுளின் ஒவ்வொரு
நொடியிலும்
நுரைததும்பும்

ஒற்றை வார்த்தையில்
ஒடிந்துவிடும்
காதல் ;
அதுதரும் கண்ணீர் மட்டும்
மவுன நதியாக
மனப்பரப்பில் தகித்தோடும் என்றென்றும் 

உளியின்
ஓசை எழும்போதெல்லாம்
கல் வடிக்கும்
கண்ணீரை யார் காண்பார்?

மலையின் இடுக்கில் இருந்து கசியும்
கண்ணீரை
யார் துடைப்பார்?

யாரும் தெரிந்ததாகக்
காட்டிக் கொள்ளவில்லை
என் கண்ணீரை!

சேரிடம் தெரியாமல்
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
அநாதைக் கண்ணீர்

அனுபவித்துச் சொல்கிறேன்
அழுத கண்ணீராலும்
அணைக்க முடிவதில்லை
துயரப் பெருந்தீயை

- கோ. மன்றவாணன்









செல்லாக் காசு


ஒரு கறுப்பு இரவில்
அறிவித்தது
அரசு
ஆயிரம் ஐநூறு ரூபாய்த்தாள்கள்
செல்லாதென!

பதவி பறிக்கப்பட்ட மந்திரிகளாய்ப்
பார்ப்பாரற்றுப் போயின
ரூபாய்த் தாள்கள்

பத்து, ஐம்பது, நூறு என விழுந்திருந்த
உண்டியலை
ஆளுங்கட்சியினரிடமிருந்து பாதுகாக்க
அந்த
ஆண்டவனாலும் முடியவில்லை.

சொர்க்க வாசல் திறக்காதா
எனக் காத்திருந்த
அந்தக் கால பக்தர்கள்போல்
ஏடிஎம் வாசல்களில்
இந்திய மக்கள்

உணவகத்தில்
உண்டு மகிழ்கிறார் பிச்சைக்காரர்;
வெளியில்
பசியோடு தவிக்கிறார்
பணக்காரர்
சில்லறை இன்றி! 

மருந்து
வாங்க முடியாமல்
உலகைத் துறந்து போகிறது
தாயின் உயிர்

பேருந்து நிலையத்தில்
பிச்சைக்காரர்களாய் வெளியூர்க்காரர்கள்
ஆயிரங்கள் இருந்தும்
ஐநூறுகள் இருந்தும்

பேருந்துகள்
புறப்பட்டுப் போகின்றன
பயணிகள் இன்றி

வங்கி வாசலைத் தொடமாட்டோமோ என
வரிசையில் காத்திருக்கும்
கால்கள்
வீதி எல்லையையும் தாண்டி

கறுப்புப் பணம் ஒழிகிறதோ இல்லையோ
கறுப்பு மை
எங்கள் விரல்களில்

பணம் பத்தும்  செய்யும்
பழமொழியாம் ;
பழம்வாங்க முடியவில்லை 

இந்தியக் காக்கைகள்
வெள்ளையாக மாறும் என
மேஜிக் செய்கிறார் தலைவர்

விடிந்து கொண்டுதான் இருக்கிறது
ஒவ்வொரு நாளும்…
தேநீர் குடிக்கவும் வழியின்றி!

-கோ. மன்றவாணன்




புதையல்



பூமியின் ஆழத்தில்
பொன்பொருளைப் புதைத்து வைத்தார்கள்
தன்னலவாதிகள்
அவர்களும் அனுபவிக்கவில்லை ;
அடுத்தவர்களையும் விடவில்லை!

பத்மநாபசாமி திருக்கோயில்
பாதாள அறைகளுக்குள்
பல லட்சம்கோடி ஆபரணங்களாம்
யாருக்கும் பயனில்லை ;
அந்த மாலவனோ அனந்த சயனத்தில்!

புதையலைப்
பூதம் காப்பதாகப்
புரளியைக் கிளப்பிவிட்டு
யார்யாரோ பங்கிட்டதாக
யார்யாரோ கதைசொன்னார்கள்

பூசைகள் போட்டுப்
புதையல் தேடிப்
பூமியைத் தோண்டியவர்கள்,
தங்களின் பிணக்குழியைத்
தாங்களே வெட்டிக்கொண்டார்கள்

இன்றுகூட
நிலத்தின் கீழ்
மர்மக் குகைமாளிகைகள் கட்டி
கட்டித் தங்கங்களையும்
கட்டு பணத்தாள்களையும் அடுக்கி வைத்தவர்கள்
கதறுகிறார்கள் சப்தமின்றி….
கனவில் ரெய்டு வந்து !

புதையலைத் தேடி
அலைய வேண்டாம்
அங்கும் இங்கும்

உனக்கு எதற்கு
உழைப்பின் வாராச் சொத்து?

உனக்குள்
கொட்டிக் கிடக்கும் ஆற்றலைத்
தோண்டி எடு

உனக்குள்
பூட்டிக் கிடக்கும் அறிவைத்
திறந்து விடு

உனக்குள்
நிரம்பி இருக்கும் புதுநம்பிக்கைகளுக்கு
உயிர் கொடு

உனக்குள்
உறங்கிக் கிடக்கும் உழைப்பை எழுப்பு


உன்னைத் தோண்டிப்பார்
உனக்குள்ளேதான் இருக்கு
ஒட்டுமொத்த புதையலும்

- கோ. மன்றவாணன்




பட்டதாரி

பூமிக்கு வந்த
ஞான வானம்
அன்றைய பட்டதாரி

இலட்சங்கள் தா  
பட்டங்கள் இதோ
கல்லூரிக் கடை

ஆங்கிலப் பட்டதாரி
கையில் தலைகீழாக
இந்தியன் எக்ஸ்பிரஸ்

படிக்காத கொத்தனார்
விஐபி நகரில்
சொந்த வில்லா

கல்லூரிக் குவியல்
பட்டதாரிகள் உற்பத்தி
வேலை இல்லாத் தமிழ்நாடு

பட்டதாரிகள் கைகளில்
பிச்சைப் பாத்திரங்கள்
நாளைய தேசம்

வெறுங்கையோடு சரஸ்வதி !
வீணையை விற்றுவிட்டார்கள்
கல்வி முதலாளிகள்


கட்டுக் கட்டாகக்
கல்விப் பட்டங்கள்
பழைய பேப்பர் கடை

சுழல் நாற்காலியில் மேஸ்திரி
டீ, சிகரெட் வாங்கித்தரும் வேலைக்கு
இன்ஜினிரிங் பட்டதாரி

சரஸ்வதி தேவி வீட்டில்
ஒப்பாரி கேட்கிறது
சிதைத்தீயில் கல்வி

-கோ. மன்றவாணன்