வேலி
தாண்டிய காற்று
கரையில் அத்துமீறி நுழைந்து வெறித்தாண்டவம்
ஆடிவிட்டுப் போகிறது
ஆண்டுதோறும் புயல்
விரிந்து பரந்து நிமிர்ந்து நின்ற
நூற்றாண்டு மரங்களை
நொடியில் சாய்த்து மாவீரம் பேசுகிறது
பசுமரத்து நிழலைப்
பறித்துக்கொண்டுபோய் எங்கேயோ
ஒளித்துகொள்கிறது
இருட்டில் விழி இழந்து தவிக்கின்றன
எங்கள் மின்கம்பங்கள்
வீட்டுக் கூரைகளுக்கு இறக்கைகள் முளைத்து
திசை தெரியாத வெளியில்
தத்தளிக்கின்றன
கருவாட்டுத் துண்டுகள் காய்ந்த
கடற்கரையில்
உடைந்த படகுகளின் மரத்துண்டுகள் சிதறிக்
கிடக்கின்றன
பள்ளிக்கட்டடங்களைத் தகர்த்துவிட்டுப் போவதைப்
பார்த்தாலே புரிந்துவிடுகிறது
காற்றுக்கு இல்லை கல்வி வாசம்
கடலோரத்தில் காவல் தெய்வமாய்க் கோவில் அமர்த்தப்பட்ட
மாரியம்மனும் கண்மூடிக் கொண்டாளோ
கோயிலையும் இடித்துவிட்டுப் போகிறதே புயல்
காற்றைக் கைது செய்யும் அதிகாரம்
யாருக்கும் வழங்கப்படவில்லை என்று தீர்ப்பளித்துவிட்டதாம்
இயற்கை நீதிமன்றம்
சுதந்திர ரவுடியாய்க் காற்று
-கோ. மன்றவாணன்