அழுத
கண்ணீர்
அலைசீறும்
ஆழியைப் போலவே
தொண்டர்களின் கண்ணீர்
வடிவதுமில்லை
வற்றுவதுமில்லை
தம்
தலைவர்கள் மறைகையில்
மனைவியின் கண்ணீர்
ரத்தமாக வழியும்
கணவன் பிரிகையில்
பிள்ளையைப் பறிகொடுத்த
பெற்றோரின் கண்ணீர்
ஆயுளின் ஒவ்வொரு
நொடியிலும்
நுரைததும்பும்
ஒற்றை வார்த்தையில்
ஒடிந்துவிடும்
காதல் ;
அதுதரும் கண்ணீர் மட்டும்
மவுன நதியாக
மனப்பரப்பில் தகித்தோடும் என்றென்றும்
உளியின்
ஓசை எழும்போதெல்லாம்
கல் வடிக்கும்
கண்ணீரை யார் காண்பார்?
மலையின் இடுக்கில் இருந்து கசியும்
கண்ணீரை
யார் துடைப்பார்?
யாரும் தெரிந்ததாகக்
காட்டிக் கொள்ளவில்லை
என் கண்ணீரை!
சேரிடம் தெரியாமல்
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
அநாதைக் கண்ணீர்
அனுபவித்துச் சொல்கிறேன்
அழுத கண்ணீராலும்
அணைக்க முடிவதில்லை
துயரப் பெருந்தீயை
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment