Wednesday, 30 October 2019

தீபம்
















எந்த
இருட்டுக்குள்ளும்
தீபம் ஏற்றி வைப்பவர்களையே
திசைகள் வரவேற்கும்

ஏற்றி வைப்பதோடு
எதுவும் முடிந்துவிடுவதில்லை

திரியை
உயர்த்திக்கொண்டே இரு

நெய்யிட்டவாறு
நீ இரு

காற்று
ஊதி அணைக்கலாம்
கவசம் அமைத்துக்
காவல் காத்திரு

இருளை
ஓடி ஓடி விரட்டுகிறது
ஒற்றை மின்மினிப் பூச்சி

கோடி கோடி மின்மினிகளின்
கூட்டம் நீ

கோ. மன்றவாணன்

Friday, 25 October 2019

யார் மனிதன்?

யார் மனிதன்?

மனிதன் யாரெனக்
கண்டறியும் கருவியொன்று இல்லையெனக்
கவலையுறுகிறான் கடவுளும்.

சிறப்பு தரிசனத்தில்
சிலை அருகில் வருபர்களை
உற்றுப் பார்த்த அவன்
உதட்டைப் பிதுக்கவும் அஞ்சுகிறான்.

கடவுளே தானெனச் சொல்லி
உண்டியலை நிரப்பிக்கொள்கிறவர்களை
ஓரமாக நின்று பார்த்து
ஒருமுறை தன்னைச் சோதித்துக்கொள்கிறான்.

அனைத்துக்கும் ஆசைப்படு என்ற
அருளுரைக்குப்
பொருளுரை எழுதுவோரின்
பூசை அறைக்குள்ளிருந்து தப்பியோடத் துடிக்கிறான்.

கீழிறங்கி வந்து தேடி அலைந்தபின்
ஒப்புக்கொள்கிறான்
“மனிதனை
இன்னும் நான் படைக்கவில்லை” என்று!


-கோ. மன்றவாணன்
























Friday, 18 October 2019

மனம் வருந்துவதா? மன்னிப்புக் கேட்பதா?
















மனம் வருந்துவதா...?
மன்னிப்புக் கேட்பதா...?

-கோ. மன்றவாணன்-

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் கடவுள்கூட இல்லை என்பதுதான் உலகம் முழுவதும் தொன்றுதொட்டுவரும் கருத்துரிமை நிலை. ஆனாலும் கருத்துரைப்பதில் நனிநாகரிகம் மிளிர வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற மனப்பான்மை இருந்தால்தான் மற்றவரை மதித்து உறவாட முடியும்.

தவறான கருத்துரைத்த ஒருவர், எதிர்ப்புகள் வரும்போது “அதற்காக வருந்துகிறேன்” “என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றெல்லாம் சொல்கின்றனர். வருத்தம் தெரிவிப்பது எங்களுக்குத் தேவையில்லை. மன்னிப்புத்தான் கேட்க வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் வற்புறுத்துகிறார்கள். மன்னிப்புக் கேட்பதா வருந்துவதா என்றால்... இந்த இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல் உரை எழுதுகின்றனர் சிலர். இரண்டும் ஒன்றல்ல என்றும் வேறுவேறு என்றும் விரிவுரை எழுதுகின்றனர் சிலர்.

பொதுவாக மன்னிப்புக் கேட்பது என்பது அவமானக்குறியாகக் கருதப்படுகிறது. அதனால்தான் பலரும் மன்னிப்புக் கேட்க விரும்புவதில்லை. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வரும்போது, “வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று சொல்லி, மீசையில் மண்ணொட்டவில்லை என்று மிகுமகிழ்ச்சி அடைகிறார்கள்.

மன்னிப்பு என்பது கேட்டுப் பெறுவதாக இருக்கக் கூடாது. மன்னிப்புக் கேட்க  வேண்டும் என்று வற்புறுத்துவதும் போராட்டம் நடத்துவதும், தவறு செய்தவர்களைத் திருத்தாது. தங்கள் கால்களில் விழவைத்து அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்மைதான் அதில் ஓங்கி நிற்கும்.   மன்னிப்புக் கேட்டால்தான் மன்னிப்பேன் என்பது, அதிகாரத் திமிராகவே ஆணவப் போக்காகவே பார்க்கப்படும். தவறு செய்தவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எந்த அருளாளரும் அறிவுறுத்தவில்லை. அப்படியே மன்னிப்புக் கேட்பதாக இருந்தாலும்... அது, தவறுகளை உணர்ந்து, வருந்தி, யாருடைய வற்புறுத்தலுமின்றி நிகழ வேண்டும்.

மன்னிக்கும் பண்பு நம் உயிரோடு ஒட்டி இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் மன்னிக்கிறவர்கள்தாம் கடவுளின் பிரதிபலிப்புகள். கூலி கேட்டுக் கொடுப்பதாக மன்னிப்பு இருக்க முடியாது.

ஒருவரை மன்னிக்க வேண்டுமானால் அதற்குமுன் அவரிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். அன்பின் நீட்சிதான் அருள்பொழிவு. அன்பு அற்ற மனம் யாரையும் மன்னிக்காது.

தவறு செய்தவர்களைத் தாக்க நினைப்பதைவிட... உண்மை எதுவென உணரும் வாய்ப்புகளை, திருந்தும் வாய்ப்புகளை அவர்களுக்குத் தரவேண்டும்.

தவறு செய்தவர்களுக்குத் தண்டனைதான் தரவேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறீர்களா? அவர்களை எப்படித் தண்டிக்க வேண்டும் என்பதை வள்ளுவர் சொல்கிறார். தவறு செய்தவர்களே நாணும் அளவுக்கு அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் செய்த தீமையையும், தாம் செய்த நன்மையையும் மறந்துவிட வேண்டும். இதுவே தண்டிக்கும் முறையாகும். இதை உணர்த்தும் இனிய குறள் இதுதான்.   

      இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
      நன்னயம் செய்து விடல். 

ஒருவரை ஒருதடவை மன்னிக்கலாம். இருதடவைகூட மன்னிக்கலாம். திரும்பத் திரும்ப மன்னித்துக்கொண்டே இருப்பதா என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்காக இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஒருகதை.

முனிவர் ஒருவர் குளக்கரையில் அமர்ந்திருக்கிறார். ஒருதேள் அவரைக் கொட்டுகிறது. அதைப்பிடித்து அருகில் விடுகிறார். திரும்பவும் அந்தத் தேள் அவரைக் கொட்டுகிறது. அப்போதும் அவர் அதைப்பிடித்து அருகில் விடுகிறார். திரும்பத் திரும்ப அந்தத் தேள் அவரைக் கொட்டுகிறது. அவரும் திரும்பத் திரும்ப அந்தத் தேளைப் பிடித்து அருகில் விடுகிறார். அப்போது அருகில் இருந்த சீடர் கேட்கிறார். அந்தத் தேள் முதலில் கொட்டிய போதே அதை அடித்திருந்தால் தங்களை இவ்வாறு பலதடவை கொட்டி இருக்காதே என்கிறார். அதற்கு அந்த முனிவர் சொல்கிறார். கொட்டுவது தேளின் குணம். அதை மன்னித்துக் காப்பாற்றுவது எனது குணம். இப்படித்தான் அருளாளர்களின் குணம் இருக்கும். ஆக எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். அந்தத் தேள் வேண்டுமானால் திருந்தாமல் இருக்கலாம். ஒருநாள், தவறு செய்தவர்கள் வெட்கப்பட்டுத் திருந்தும் வாய்ப்புகள் உண்டு.

பேசிய கருத்திலிருந்து பின்வாங்காமலே வாய்ச்சொற்களால் மன்னிப்புக் கேட்டுவிடலாம். அதனால் என்ன மெய்ப்பயன்? வருந்துவது என்பது அதிலிருந்து வேறுபட்டது. மனம் சம்பந்தப்பட்டது.
     
      கவிஞர் வாலி எழுதினார்.
      தவறு செய்தவன் திருந்தி ஆகணும்
      தப்புச் செய்தவன் வருந்தி ஆகணும்.


ஒரு தப்புக்காக மன்னிப்புக் கோருவதைவிட, மனம்வருந்துவதுதான் உள்ளார்ந்தது.

மன்னிப்புக் கேட்டால் யாராவது “மன்னித்தேன்” என்று சொல்கிறார்களா? இல்லையே! அப்போது அவர்கள் அகம்பாவமாக வெற்றி மிதப்பில்தான் திளைக்கிறார்கள். தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்கிறார்கள். நம் மக்களுக்கு மன்னிக்கத் தெரியவில்லை. மன்னிக்கத் தெரிந்தவர்கள் மனிதர்களுள் புனிதர்கள்.  அதனால்தான் “மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோவிலடா” என்று கண்ணதாசன் சொன்னார்.

வருந்துகிறேன் என்று வாயளவில் சொல்லி, எதிரிகளின் வாயடைக்கும் உத்தியைக் கையாளவும் வாய்ப்புண்டு.  அப்படி இருந்தால் அதுவும் தப்புதான். வருந்துகிறேன் என்பதில் உள்ளபடியே மனம்வருந்த வேண்டும். உதட்டு வார்த்தைகள் ஊரை ஏமாற்ற உதவலாம். உள்ளத்தின் வார்த்தைகள்தாம் உலகையும் உங்களையும் உயர்த்தும்.

மன்னிப்புக் கேட்பதால் ஒருவரின் கோபத்தில் இருந்து சற்று மீளலாம். தண்டனையிலிருந்து தப்பலாம். அவரால் காரியம் ஆக வேண்டி இருப்பதாலும் மன்னிப்புக் கேட்கக் கூடும். அத்தகைய மன்னிப்புக் கோருவதில் ஆதாய நோக்கே இருக்கும். என்னைப் பொறுத்தவரை மன்னிப்புக் கேட்பதைவிட மனம்வருந்துவது சரியானது. உள்ளம் வருந்தினால் தவறோ தப்போ கரையோ களங்கமோ கழுவப்பட்டுவிடும்.

எந்தக் கருத்துக்கும் எதிர்கருத்து இருப்பது இயற்கையே. நதியின் பாதையை ஒழுங்கமைத்துச் செல்வன அதன் இருகரைகள். அதுபோல்தான் எந்தக் கருத்துக்கும் இருதரப்புகள் இருக்கும். கருத்தோட்டத்துக்கு மேலும் வலு சேர்ப்பனவாக அவை அமைய வேண்டும். பகை வளர்த்தால் துயரத்தைத்தான் அறுவடை செய்ய முடியும்.

சட்டங்களால் வரையறுக்கப்பட்ட பெருங்குற்றங்கள் குறித்தோ... அவைகுறித்த தண்டனைகள் குறித்தோ எதிர்நிலை இல்லை. அத்தகைய சட்டங்களும் தண்டனைகளும் தேவையே. ஆனாலும் சட்டத்திலும் மன்னிக்கும் பிரிவுகள் உண்டு.

மன்னிப்பது என்பது பிழைசெய்பவர்களின் கையில் இல்லை. வருந்துவதும் திருந்துவதும் மட்டுமே தப்புச் செய்தவர்களை நல்லவர்களாக மாற்றும்.

வெளியீடு :
தினத்தந்தி 17-10-2019


மதுரை


















புத்தக ஏடுகளை விழுங்கியது
பொற்றாமரைக் குளம்...
புனல்வாதம் நிகழ்ந்த போது!

கொற்றவனின் கொடிமீனைக்
கூசச் செய்தன
மீனாட்சியின் விழிச்சுடர்கள்

கள்ளழகர்
கடந்த கால நதியைத் தேடிவந்து
ஏமாறுகிறார் ஆண்டுதோறும்

ஒவ்வொரு கவிதைப் போட்டியிலும்
தாங்க முடியவில்லை
தருமிகளின் ஆதிக்கம்

நக்கீரன் இல்லாததால்
தனக்குத் தானே பட்டம் சூடித் திரிகிறார்கள்
தமிழ்க்கவிஞர்கள்

சங்கம் வைத்துத்
தமிழ்வளர்த்த மதுரையில்
பெரிய எழுத்து இந்தி

கோவில் மண்டபத்தில்
இன்னமும் சில பாட்டிகள் இருக்கிறார்கள்
பிட்டுக்கு மண்சுமந்த சிவனைக் காண

கோ. மன்றவாணன்


Wednesday, 9 October 2019

சாம்பலாய் முடியும் உடல்




















நேற்று எரியூட்டிய சடலத்தின்
சாம்பலைக்
கொண்டு வந்தார்கள்.

கைப்பிடிச் சாம்பலில்
பூதக் கண்ணாடி வைத்துப்
பார்த்தேன்

கடமையைச் செய்யக்
கையூட்டு வாங்கிய
கைகளைத் தேடினேன்

பார்வையாலும் பெண்களைப்
பாலியல் துன்புறுத்தல் செய்த
கண்களைத் தேடினேன்

வெறி ஏறஏற மதுசுவைத்து
நல்லோரை ஏசிய
நாவினைத் தேடினேன்

காசை விட்டெறிந்து
கடவுளெனத் தன்னைப் புகழ்வதில்
சிலிர்த்த
செவிகளைத் தேடினேன்

அதிகாரத் திமிரில் நடந்த
அந்தக் கால்களைத் தேடினேன்

அடுத்தவர் சொத்துகளை
அபகரித்த
அந்த
ஆசை ஒளிந்திருந்த இடம் தேடினேன்

நொடிப்பொழுது வீசிய காற்று
விழுங்கிச் சென்றது
அந்தச் சாம்பலையும்.

-கோ. மன்றவாணன்.

Thursday, 3 October 2019

பெட்டி பெட்டியாய்க் காந்தி

















சுதைமண் காந்தியின்
தடியைப் பிடுங்கித்
தலையை உடைக்கிறார்கள்

காந்தி பதாகையில்
குறிதவறாது சுட்டுக்
குருதியோடச் செய்கிறார்கள்

காந்தி சாலையில்
பிராந்திக் கடைகளைத் திறந்து
ஆடுவோமே – கள்ளு
போடுவோமே என்கிறார்கள்

காந்தி விழா கொண்டாடியதாகப்
பொய்க்கணக்கெழுதிப்
பொருளாதாரத்தை உயர்த்துகிறார்கள்

காந்தியாக நடிக்கக்கூட
இந்தியர் எவருமில்லை

காந்தி பிறந்த நாளைக்
கோலாகலமாய்க்
கொண்டாடுகிறார்கள்
தொலைக்காட்சியில் குத்தாட்டம் பார்த்து

அது எப்படி?
பணத்தாளில் புன்னகைக்கும் காந்தியைப்
பாதுகாக்கிறார்களே
பெட்டி பெட்டியாய்...

-கோ. மன்றவாணன்    

Tuesday, 1 October 2019

புத்தரின் புன்னகை


















பணம்கொட்டினால்
திருப்பதி உண்டியல் நிரம்பிவிடுகிறது
ஆனால்
ஆசையின் உண்டியல் நிரம்புவதே இல்லை

ஜீவ நதிகளும்
ஜீவ சமாதியாகிறது
வயது கடந்தாலும்
வற்றுவதே இல்லை
காமநதி

பதவி பறிக்கப்
பாவ ஏணியில்
ஏறுவதை யாரும் நிறுத்துவதே இல்லை

ஆயிரம் துயர்கள் வரும் எனினும்
யாரும் விடத் தயாரில்லை
ஆசையை

கல்லாப் பெட்டியின் மீது
புத்தர் பொம்மை
புன்னகையைக் காணவில்லை

-கோ. மன்றவாணன்


Thursday, 19 September 2019

தேநீர் நேரம்















எல்லாரும் வாருங்கள்
இளைப்பாறுதல் தருவேன் என்கிறார்
வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரில் இருக்கும்
தேநீர்க் கடையின் உரிமையாளர்

சர்க்கரையில் மொய்க்கும் ஈக்கள் போலவே
தேநீர்க் கடையில்
சுவைஞர்கள்

சர்க்கரை இல்லாத... சர்க்கரை போட்ட...
அரை சர்க்கரை, கால் சர்க்கரை
ஸ்டார்ங்காக
லைட்டாக
மீடியமாக என்றெல்லாம்
நேயர் விருப்பங்கள் இடைவிடாமல்
நாயர் தேநீர்க் கடையில்...

நிறைவேறுகின்றன விருப்பங்கள்
நினைவு தவறாமல்

சாய்ந்துவிழும் அருவியென
மேல்குவளையிலிருந்து
கீழ்க்குவளையில் பாயும் தேநீர் சங்கீதத்தைக்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்

ஆனாலும்
அரசு அலுவலரைப் பார்க்க
எந்த நேரம் சென்றாலும்
தேநீர் அருந்தச் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.

கோ. மன்றவாணன்



Tuesday, 17 September 2019

மழைமேகம்
















காற்றை வருடிக்கொடுக்கிறது
விசிறியாய் விரிந்த
மயில்தோகை 

வாடும் பயிர்களின் வேண்டுதல்கள்
கேட்டிருக்குமோ
கூடி முடிவெடுக்கிறது முகில்கூட்டம் 

தெருக்கள் தாண்டிய பின்னே
திடீரென ஞாபகப்பூவுக்குள் விரிகிறது
வீட்டுக்குள் இருக்கும் குடை 

முகில் உருகிவந்து அணைத்துக்கொள்ளும்
தகவலை
நெல்வயலுக்கு
முன்கூட்டியே சொல்லிச் செல்கிறது குளிர்காற்று 

கூடு நோக்கிப் பறக்கிறது
குருவிக் கூட்டம் 

எவ்வளவு மழை பெய்தாலும்
நனைவதில்லை
மேகம்.

-கோ. மன்றவாணன்

Monday, 9 September 2019

அதிரூபன் தோன்றினானே...


















அச்சுறுத்துகிறது
கரும்பாம்புகளோ என மிதந்து நெளியும்
இரவுக் கடல்

திகைக்க வைக்கிறது
திசைகளைப் பறிகொடுத்துக் கிடக்கும்
புவி

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
கருஞ்சாந்து
நிரம்பி வழிகிறது

வாழ்க்கையின்
எந்தப் பக்கம் திரும்பினாலும்
முட்டுகிறது
இருட்டால் பிசைந்து எழுப்பிய சுவர்

காத்திருந்தேன்... நம்பிக்கையுடன்
காத்திருந்தேன்... பொறுமையுடன்

அதோ
கையில் விளக்கோடு
அதிரூபன் தோன்றினானே....

கோ. மன்றவாணன்

அரசியல்




















பொய்கள் அமோகமாக விற்கும்
பெருஞ்சந்தை இது

நேற்று நடந்து சென்றவர்
இன்று
இன்னோவா காரில் பயணிக்கிறார்
இதுபோல் இல்லை
இலாபம் கொழிக்கும் தொழிலொன்று

வெள்ளுடை வேந்தர்களாக
வீதிவலம் வருகிறார்கள்
தேசம் அழுக்காகிறது

மாறுவேடம் தரித்தது
மன்னராட்சி
வாரிசுகளுக்கே அரசாட்சி

இனி,
காமராசர் கக்கன் வரலாறுகளின்
சாம்பலும் கிடைக்காது
ஊரெங்கும் ஊழல்தீ

கோ. மன்றவாணன்

சிரிப்பு


















சிரிக்கும் தருணங்களில்
ஓடி ஒளிந்துகொள்கிறது
எந்த நோயின் வலியும்

அழகின் உச்சத்தைக் காணலாம்
காந்தியின் சிரிப்பிலும்
மோனலிசா புன்னகையிலும்

இளம்பெண்ணின் கண்ணும் சிரிக்கும்
இதயத்தில் காதல் மலர்ந்தால்

யார் சொன்னார்
மனிதருக்கு மட்டுமே சிரிப்புச் சொந்தமென்று
கொடியின் சிரிப்புதானே பூக்கள்

நம்
வெள்ளைச் சிரிப்பையும்
கொள்ளையடித்துவிட்டார்களே
அதிகாரப் படையெடுத்துவந்து

கோ. மன்றவாணன்

Monday, 2 September 2019

பறவை



















சிறகு விரித்துப் பறக்கிறது
மனம்
வானத்தின் உயரம் போதவில்லை.

எவ்வளவு உயர உயரப் பறந்தாலும்
மண்ணுக்கு வரவேண்டி இருக்கிறது
உயிர் வளர்க்க

வானமே வீடாக வாழ்ந்த பறவையைப்
பொற்கூண்டில் அடைத்துப்
பழம்நறுக்கித் தந்தாலும்
அது
விரும்புவது என்னவோ
விடுதலையைத்தான்

விடுதலை என்பது வேறொன்றுமில்லை
சிறகு வரித்தலே
சிந்தனையின் எல்லையையும் தாண்டி.

கடல்தாண்டிப் பறக்கும்
புறாவைப் பார்த்துப்
பொறாமைப்படுகிறேன் நானும்.

கோ. மன்றவாணன்


கருப்பு


















இரவு
கருப்பாய் இருப்பதால்தான்
பேய் நடமாடுகிறது

நிலாத்துணை அற்ற
தென்னந்தோப்பு ஓசையும்
அச்சுறுத்துகிறது

ஜன்னல் கதவு திறந்து மூடுகிறது
இருட்டுக்கு
நீளக் கைகள் எப்படி முளைத்தன?

தொப்பென்று குதிக்கிறது
கருப்புப் பூனையொன்று
கண்களில் தீச்சட்டி ஏந்தி

என் மனசுக்குள்
அவிந்து போயின
அனைத்து விளக்குகளும்

கருப்புக் கயிறு கட்டினால்
காத்துக் கருப்பு அண்டாது என்ற
பூசாரி
போதையில் உருண்டு கிடக்கிறார்

அப்போதுதான் தடவிப் பார்த்தேன்
என் மணிக்கட்டில் வளையமிட்டிருந்த
கருப்புக் கயிறு
எங்கோ அறுந்து விழுந்துவிட்டிருக்கிறது

இருட்டில்  தேடுகிறேன்
அவசர அவசரமாக
அந்தக் கயிற்றை

-கோ. மன்றவாணன்

இனிமேல் மழைக்காலம்











குளம்
காத்திருக்கிறது
பறவைகள் வருமென்று

வயல் பொறுத்திருக்கிறது
மறுபடியும்
பசுமை குலுங்குமென்று

பூமியின் நா
நீண்டு கிடக்கிறது வான்நோக்கி

அருவியின் கால்பதிந்த மலைப்பாறையும்
அண்ணார்ந்து பார்க்கிறது

மழைநீரில் சூடு தணிக்கச்
சூரியனும்
முந்தி வந்து நிற்கிறான்

இனிமேல் மழைக்காலம்
என்ற அறிவிப்பை
நம்பி...

கோ. மன்றவாணன்

Saturday, 24 August 2019

நெடுவாழ்வின் நினைவு





















கரைதாண்ட மாட்டேன் என
ஊருக்குச் சத்தியம் செய்துவிட்டு
ஓடிக்கொண்டே இருந்தாள் காவிரி

நிலவு குளிக்க வரும்வரை
கயல்களோடு போட்டியிட்டு நீந்தினர்
மூவேந்தர் காலத்து மக்கள்

ஆழ்துளைக் கிணறுகள் இல்லை
மரகதப் பட்டுடுத்தி மகிழ்ந்தாள்
மண்மகள்

மாசு ஏதும் இல்லாத காற்று
மாசு ஏதும் இல்லாத மனசு
இரவின் மடியில் கண்துயின்றனர்
எம் மூதாதையர்

நள்ளிரவில்
தண்ணீர் லாரி வருமென்று
காத்திருந்த கூட்டத்தில்
எழுந்தடங்கியது அந்த நினைவு.

கோ. மன்றவாணன்

Saturday, 22 June 2019

ஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்...




















ஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்....

கோ. மன்றவாணன்

நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகரில் உள்ள வீட்டில் எழுத்தாளர் ஜெயமோகன் வாழ்ந்து வருகிறார். 14-06-2019 அன்று இரவு தோசை வார்த்து உண்ணலாம் என்றெண்ணிய அவர், அருகில் உள்ள வசந்தம் மளிகைக்கடைக்குச் சென்று மாவு பாக்கெட்டுகள் வாங்கி வந்துள்ளார். அந்த மாவு கெட்டிருந்தது. கெடுநாற்றம் வீசியது. அந்த மாவுப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அந்தக் கடைக்குச் சென்று மாவு கெட்டிருக்கு என்று சொல்லி உள்ளார். மாவு பாக்கெட்டைத் திரும்ப வாங்க மறுத்த அந்தக் கடையின் அம்மையார், ஜெயமோகனை வசைபாடி உள்ளார். அதனால் அந்தப் பாக்கெட்டை அங்கேயே போட்டுவிட்டுக் கிளம்ப எத்தனித்தவரை, கடையின் உரிமையாளரும் அந்த அம்மையாரின் கணவருமான ஒருவர், ஜெயமோகனைத் தாடையில் அறைந்து கீழே தள்ளி உள்ளார். உதைத்தும் அடித்தும் உள்ளார்.
இச்செய்தியைக் கேட்டவுடன் எனக்கு வலித்தது. அந்த அறை ஒவ்வொரு தமிழ்எழுத்தாளரின் கன்னத்தில் விழுந்ததுபோலவே நான் கருதுகிறேன். உலகம் அறிந்த அந்த எழுத்தாளரை உள்ளூர் அறிந்திருந்தால் இந்த இழிவு ஏற்பட்டிருக்காது. தகுதிவாய்ந்த எழுத்தாளர் யாரும் தன்னை ஊரில் முன்னிறுத்திக் கொள்வதில்லை.
கெட்ட மாவுப் பாக்கெட்டுகளை வேண்டுமென்றே விற்பது தொழில் அறமன்று. எது கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு போக வேண்டும் என்பது நம் தலையெழுத்து அல்ல. வணிகத்தில் வாடிக்கையாளரே முக்கியமானவர். அவரே நம் எஜமானர் என்று காந்தி அடிகள் சொன்ன மணிமொழியை எந்த வணிகரும் ஏற்பதில்லை. விற்ற பொருட்கள் வாபஸ் வாங்கப்பட மாட்டாது என்று விற்பனை பில்களில் அச்சிட்டிருப்பார்கள். நம்முடைய நுகர்வோர் சட்டப்படி அந்த வாசகமே ஏற்புடையதல்ல.
சில கடைகளில் கெட்டு நாறிய பொருட்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள். வீட்டுக்கு வந்தபின்தான் அவற்றின் குணம் மணம் எல்லாம் தெரி்யும். அழுகிய பொருட்களைக் கலந்து விற்பவர்களும் உண்டு. நாம் பணம் கொடுத்து வாங்குகிறோம். சரியான பொருட்களை வழங்க வேண்டியது வணிகர்களின் கடமை. நேர்மை தவறியவர்களே வணிகத்தில் பெருமுதலாளிகளாக- சமூகத்தில் பெரிய மனிதர்களாக உயர்வதையும் பார்க்க முடிகிறது.
காலவரம்பு கடந்த, கெட்டுப்போன பொருட்களை விற்பது சட்டப்படிக் குற்றம். அந்தப் பொருட்களைத் திரும்பக் கொடுத்தால் அதைப் பெற்றுக்கொண்டு சரியான பொருட்களைத் தரவேண்டும் அல்லது அந்தப் பொருட்களுக்குரிய தொகையைத் திருப்பித் தந்துவிட வேண்டும். இதுவே நியாயமான வணிக முறை.
“சிறிய மாவுப் பாக்கெட்டுக்காகப் பெரிய எழுத்தாளர் மளிகைக்கடைக்காரரிடம் மல்லுக்கட்டி நிற்கலாமா? அற்ப விஷயத்துக்காக அந்தக் கடைக்குச் சென்று நியாயம் கேட்கலாமா? விட்டுவிட்டுப் போவதே... கண்டும் காணாமல் போவதே நம் கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்கிற வழிமுறை. இது தெரியவில்லையே இந்த ஜெயமோகனுக்கு” என்று எண்ணுவோரும் உள்ளனர். குற்றம் சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும், குற்றம் குற்றமே. அதைக் கண்டுகொள்ளாமல் போவதாலேயே குற்றங்கள் பெருகி, அவையே தர்ம நியாயங்களாக  வேடம் தரிக்கின்றன.
நுகர்வோர் விழிப்புணர்வின்படி நியாயம் கேட்டதற்காக எழுத்தாளர் தாக்கப்பட்டுள்ளார். இன்றைய உலகில் எந்த இடத்திலும் நியாயம் உதைபடுகிறது.
தமிழில் உள்ள இன்றைய எழுத்தாளர்களில் உச்சப் புகழில் இருப்பவர் ஜெயமோகன். நட்சத்திர நடிகர்கள் பங்கேற்கும் பெருஞ்செலவு கொண்ட திரைப்படங்களுக்கு அவர் திரைக்கதை வசனம் எழுதி உள்ளார். கமல், ரஜினிகாந்த் போன்ற பெரு நடிகர்களோடு நட்புறவு கொண்டவர். இந்தியா முழுவதும் இருக்கின்ற இலக்கிய ஆளுமைகளோடு நெருங்கிய உறவுடையவர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கே அவருக்கென ரசிகர் கூட்டம் உண்டு. இந்தியாவின் பல அரசியல் தலைவர்களுடனும் அவருக்கு பழக்கமுண்டு. இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க முன்வந்த போது அதைத் தவிர்த்தவர்.  
தமிழகத்தின் எந்த ஊருக்குச் சென்றாலும் இவரின் பின்னால் அணிவகுக்கும் வாசகர்படை உண்டு. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒன்றை நிறுவி, ஆண்டுதோறும் பெரியதோர் இலக்கியத் திருவிழாவை நடத்தி வருகிறார். மூத்தப் படைப்பாளிகளுக்கு விருது வழங்குகிறார். இளம்படைப்பாளிகளை ஊக்குவிக்கிறார். பிறமொழிப் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். இலக்கிய விவாதங்கள் தொடர்பாக எந்தக் கேள்வி எழுந்தாலும் அவருடைய இணையத்தளத்தில் அதுபற்றி ஒரு கட்டுரையாவது இருக்கும். அவரளவு வாசித்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற அளவில் வாசிப்பர். வாசிப்பை நேசிப்பவர்.
இவரின் இலக்கிய படைப்புகள் யாவும் உலகத்தரம் வாய்ந்தவை. எந்தப் பெரும் விருதுக்கும் தகுதியானவர். தமிழ் எழுத்தாளர்களில் ஜெயகாந்தனுக்குக் கிடைத்த கம்பீரம், தற்காலத்தில் ஜெயமோகனுக்குக் கிடைத்துள்ளது.
இவருக்கு எந்த அளவு ஆதரவுகள் உண்டோ, அதற்குச் சரிசமமாக எதிர்ப்புகளும் உண்டு. கறாரான விமர்சனங்களை அவர் முன்வைப்பதால் எதிர்ப்புகளை அவர் நேர்கொள்ள வேண்டியதாகிறது. அவருடைய இலக்கியப் படைப்புகளுக்கு நான் ரசிகன். ஆனால் அவருடைய பல கொள்கைகளுக்கு நான் முரணானவன்.  அவர் வெறுக்கின்ற திராவிட இயக்கத்தில் நான் பற்றுள்ளவன். எனினும் அவருடைய விஷ்ணுபுரம் இலக்கியத் திருவிழாவுக்கு 2014ஆம் ஆண்டுமுதல் சென்று வருகிறேன். கலந்துரையாடல்களில் பங்கேற்றும் வருகிறேன்.
அதே நேரத்தில் ஜெயமோகனை விரும்பாதவர்கள், அவர் அடிவாங்கிய தகவலைக் கேட்டு ஆனந்தப்பண் பாடுவது, தமிழ் நாகரிகம் அல்ல. அரசியல், மதம் சார்ந்து அவருடைய கொள்கைள் பலருக்கு ஒவ்வாமை தந்தாலும், அவர் தமிழின் புகழை உயர்த்தும் எழுத்தாளர். கருத்து வேறுபாடுகள் இருந்தால் கருத்துகளைத்தான் எதிர்கொள்ள வேண்டும். கருத்துரைத்தவரை  நண்பராகவே அணைத்துக்கொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் இருவேறு கருத்துகளால் நிரம்பியதே இந்த உலகம்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த எழுத்தாளருக்கு உள்ளூரில் அவமரியாதை என்கின்ற போது இதயம் வலிக்கிறது. சமூகத்தில் எந்த அளவு மரியாதை எழுத்தாளருக்கு உள்ளது என்பதை அறிகிற போது வெட்கித் தலைகுனிய வேண்டியதாகிறது. எழுத்தாளருக்கு வெளியூரில் மாலை மரியாதை விருது விழா எல்லாம் கிடைத்தாலும் உள்ளூரில் அவர்முகம் தெரியவில்லை என்றால் என்ன செய்வது?
பல பெரிய அறிஞர்களை, எழுத்தாளர்களை, அவர்களுடைய சொந்த ஊரில் விசாரித்தால் யாருக்கும் தெரிவதில்லை. அஞ்சல்காரருக்குக் கூட அவர்பெயர் நினைவுக்கு வருவதில்லை.
ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரில் உள்ள எழுத்தாளர் கொண்டாடப்பட வேண்டும். ஊழல் செய்கிற ஒரு கவுன்சிலருக்குக் கொடுக்கின்ற மரியாதையைக்கூட  எழுத்தாளருக்குக் கொடுப்பதில்லை.
எழுத்தாளர் இறந்தபிறகு அவருடைய சொந்த ஊரில் சிலை வைக்கக்கூட வேண்டாம். குறைந்த பட்சம் அவர் வாழுகின்ற காலத்தில் அவரை அவமரியாதை செய்யாது இருத்தலே நற்சமூக மாண்பு.
நன்றி :
திண்ணை, ஜுன் 16, 2019