Wednesday, 27 June 2018

ஒருமுறையேனும்...







அன்பூற்றி, ஆசையிட்டு
ருசிக்க ருசிக்க மனைவி சமைத்த
அமுதுணவை நாவிலிடும் போது
அலுவலகத்தின்
அவசர வேலைகளை
நினைவால் மெல்லுகிறீர்கள்

அலுவலகத்தில்
அதிகப் பணிநெருக்கடியின் போதும்
உடன்பணியாற்றும் எதிராளியின்
உயர்முன்னேற்றத்தை நினைத்து
மனசைச்
மலச்சாக்கடையில் அமிழ்த்துகிறீர்கள்

இலக்கியக் கூட்டத்தில் சுகி.சிவம் பேசும்போதும்
கைப்பேசியில்
விரல் தேய்க்கிறீர்கள்

பஞ்சணையில் மனைவி அரவணைக்கும் போதும்
பள்ளிப் பருவக் காதலை
அசைபோடுகிறீர்கள்

இன்றில் வாழும் போது
நேற்றில்
கால்பதித்து நடக்கிறீர்கள்.

கோவிலுக்குள் சென்று கும்பிடும் போதும்
களவு போகாமல் தப்புமோ என்று
வெளியில் நிறுத்திய வாகனத்தில்

உள்ளத்தை
ஒருமுகப்படுத்துகிறீர்கள்.

வாகனத்தை மிகுவேகத்தில் செலுத்தும்போதும்
மனது பறக்கிறது
வேறு திசைநோக்கி

நிகழ்நேரத்தில்
வாழ்ந்து மகிழ்ந்ததுண்டா
ஒருமுறையேனும்....?

-கோ. மன்றவாணன்



Thursday, 14 June 2018

வெல்லும் சொல்





              இன்னல் இழைக்காமல் இருந்ததில்லை
              எந்தப் போரும்

              ரத்த போதையில்
              ரவுடித்தனம் செய்கின்றன
              போரில் பெற்ற புகழெல்லாம்

              அசோகரைச் சாட்சித் தேரில்
              அழைத்து வந்து
              போதிக்கிறது வரலாறு
              போர் தீர்வாகாது என்று

              விடுதலைத் தவத்தில்
              வெற்றி கொண்டாடியது 
              காந்தியின் ஒருசொல்
                அகிம்சை

              கடைப்பிடியுங்கள்
              காந்தியத்தை
              நாடென்றாலும்
              வீடென்றாலும்

              அடங்கிப் போனது
              வெள்ளைச் சிங்கம் அன்று
              அகிம்சைப்புல் தின்று

             -கோ. மன்றவாணன்

Sunday, 10 June 2018

வாழ்க்கையெனும் போர்க்களம்

















முன்னோர்கள் அனுபவித்தார்கள்
முதலாம் உலகப்போர் ரத்த வெள்ளத்தை
இரண்டாம் உலகப்போர் கொலைபீடத்தை

நிமிடம்தோறும் அனுபவிக்கிறோம்
நிகழ்கால வாழ்க்கையில்.
மூன்றாம் உலகப் போரின்
முன்மாதிரியை

சொர்க்கம் போகவே ஆசை
சொக்கநாதனிடம் வேண்டுகிறார்கள்
அப்படியானால்
நாம்வாழும் வாழ்க்கை
நரகம்தானே

லஞ்சம் வஞ்சம் ஆடம்பரம்
மோசடி ஜாலம் கொடுந்தந்திரம்
இவையே வாழ்வென்றால்...
எதிர்கொள்வது போர்க்களம்தானே...

அடுத்த வீட்டில்
ஒப்பாரி பாடக் காரணமாகிவிட்டுத்
தன்வீட்டில்
தாலாட்டுப் பாடவே விரும்புகிறார்கள்

எல்லாரும் காந்தியாய் மாறுவது எப்போது?
இந்த வாழ்க்கை, பூவனமாய் மாறும் அப்போது!

-கோ. மன்றவாணன்

என்றும் என் இதயத்தில்...



















திமுதிமு என்று மோதும்
திருவிழா நெரிசலில் அவளிருந்தால்
அவளை மட்டும் படம்பிடித்து விடுகிறது
என் கண்கள்
எத்தனை தொலைவில் இருந்தாலும்

கடல்மணலில் அவள் நடந்துபோன போது
கவிதையாய் விட்டுச் சென்ற சுவடுகளைக்
காற்றுக் கலைக்கும்முன்
கண்களில் ஒத்திக்கொண்டு வந்துவிடுகிறேன்

நான்
இரவில் நிலவைக் கண்டாலும்
எட்டிப் பார்க்கிறாள் அங்கிருந்தும்

உலக
ஓவியர்கள் வரைந்த பெண்ணோவியங்களைக் காண
ஓவியக் காட்சிக்கு அவளுடன் சென்றேன்

அழகோவியங்கள் எழுந்துவந்து
அவளுக்கு மாலை சூட்டின

என்
இதயத்தைத் திறந்து உள்ளே சென்றவள்
பூட்டிக்கொண்டாள்


-கோ. மன்றவாணன்

யார் இட்ட சாபம்?




             சீர்இட்ட செய்யுள் போலச்
                  செப்பமாய் மிளிர்ந்த என்னைப்
             போர்இட்ட களமாய் மாற்றிப்
                  போட்டது எதனால்? யாரால்?
             நீர்இட்ட நெருப்பு அணைந்து
                  நீறென மாறல் போல
             யார்இட்ட சாபத் தாலே
                  என்வாழ்க்கை சாம்பல் ஆச்சு?

             நல்லதை விரும்பிச் செய்தேன்
                  நாடிது மதிக்க வில்லை
             உள்ளதை உரைத்து வைத்தேன்
                  உலகிது நம்ப வில்லை
             கல்லதை வைரம் என்பார்
                  கருமையை வெண்மை என்பார்
             சொல்லதை மாற்றிப் பேசும்
                  சூழ்ச்சியர் வெல்லு கின்றார்

             சட்டத்தைக் கற்றேன்; நீதி
                  சபையினில் நேர்மை இல்லை
             பட்டத்தைப் பெற்றேன்; எங்கும்
                  பணியது கிடைக்க வில்லை
             விட்டத்தைப் பார்த்துப் பார்த்து
                  வெறுங்கனா காணு கின்றேன்
             திட்டத்தை யார்தான் சொல்வார்
                  தேசத்தில் அறங்கள் வெல்ல?


             -கோ. மன்றவாணன்