அன்பூற்றி, ஆசையிட்டு
ருசிக்க ருசிக்க மனைவி சமைத்த
அமுதுணவை நாவிலிடும் போது
அலுவலகத்தின்
அவசர வேலைகளை
நினைவால் மெல்லுகிறீர்கள்
அலுவலகத்தில்
அதிகப் பணிநெருக்கடியின் போதும்
உடன்பணியாற்றும் எதிராளியின்
உயர்முன்னேற்றத்தை நினைத்து
மனசைச்
மலச்சாக்கடையில் அமிழ்த்துகிறீர்கள்
இலக்கியக் கூட்டத்தில் சுகி.சிவம் பேசும்போதும்
கைப்பேசியில்
விரல் தேய்க்கிறீர்கள்
பஞ்சணையில் மனைவி அரவணைக்கும் போதும்
பள்ளிப் பருவக் காதலை
அசைபோடுகிறீர்கள்
இன்றில் வாழும் போது
நேற்றில்
கால்பதித்து நடக்கிறீர்கள்.
கோவிலுக்குள் சென்று கும்பிடும் போதும்
களவு போகாமல் தப்புமோ என்று
வெளியில் நிறுத்திய வாகனத்தில்
உள்ளத்தை
ஒருமுகப்படுத்துகிறீர்கள்.
வாகனத்தை மிகுவேகத்தில் செலுத்தும்போதும்
மனது பறக்கிறது
வேறு திசைநோக்கி
நிகழ்நேரத்தில்
வாழ்ந்து மகிழ்ந்ததுண்டா
ஒருமுறையேனும்....?
-கோ. மன்றவாணன்