Sunday, 10 June 2018

யார் இட்ட சாபம்?




             சீர்இட்ட செய்யுள் போலச்
                  செப்பமாய் மிளிர்ந்த என்னைப்
             போர்இட்ட களமாய் மாற்றிப்
                  போட்டது எதனால்? யாரால்?
             நீர்இட்ட நெருப்பு அணைந்து
                  நீறென மாறல் போல
             யார்இட்ட சாபத் தாலே
                  என்வாழ்க்கை சாம்பல் ஆச்சு?

             நல்லதை விரும்பிச் செய்தேன்
                  நாடிது மதிக்க வில்லை
             உள்ளதை உரைத்து வைத்தேன்
                  உலகிது நம்ப வில்லை
             கல்லதை வைரம் என்பார்
                  கருமையை வெண்மை என்பார்
             சொல்லதை மாற்றிப் பேசும்
                  சூழ்ச்சியர் வெல்லு கின்றார்

             சட்டத்தைக் கற்றேன்; நீதி
                  சபையினில் நேர்மை இல்லை
             பட்டத்தைப் பெற்றேன்; எங்கும்
                  பணியது கிடைக்க வில்லை
             விட்டத்தைப் பார்த்துப் பார்த்து
                  வெறுங்கனா காணு கின்றேன்
             திட்டத்தை யார்தான் சொல்வார்
                  தேசத்தில் அறங்கள் வெல்ல?


             -கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment