மேனி மின்ன
நிறைமாதக் கருசுமந்து
நடக்கிறாள் என்பதைவிட அசைகிறாள்
தோளில்
துணித்தூளி கட்டி நடக்கிறாள்
கந்தல் விலக்கி
கங்காரு குட்டிபோல் எட்டிப்பார்க்கிறது இவ்வுலகை
குறுகுறு குழந்தை
முள்மர விறகுகளை
முடியில் சுமந்து போகிறாள் பெண்ஏசுவாய்
விற்றபின் கிடைக்கும் பணத்தில்
கனவுகளை உயிர்ப்பிக்க
வெள்ளருவியைப் பானையில் பொத்தி
இடைச்சுமை ஏற்றி வருகிறாள்
சற்றே உடல்நெளிந்து
சுமைகளை அவிழ்க்கும்போது
கொட்டுகின்றன
சுகப்பரல்கள்
உங்கள் துக்கம் மகிழ்ச்சியாக மாறும் எனச்
சொன்னது வேதம்
உங்கள் சுமை சுகமாக மாறும் எனச்
சொல்லிச் செல்கிறாள்
மற்றொரு வேத வாக்காய்
கனிகள் சுமப்பதால்
எந்த மரமும் முறிந்து விழுவதில்லை
-கோ. மன்றவாணன்