Tuesday, 30 August 2016


காத்திருப்பு

ஆலயத்தில்
அன்னதானம் செய்துவிட்டு-
சாமிக்குப் போட்ட மாலையைத்
தன்கழுத்தில் அணிந்துவரும்
தர்ம புண்ணியவான்கள் சிலர்
விரட்டி அடிப்பார்கள்
வீதி நாய்களை!

என்
மற்றொரு அம்மாவான
மாமியார்
தினமும் சோறளிக்கும்
திருத்தொண்டு ஆற்றுவார்
தெரு நாய்களுக்கு!

அது எப்படி
அந்த நாய்கள்
கடிகாரம் இல்லாமல்
காலநேரம் தவறாமல்
வாசலில்
வந்து காத்திருக்கின்றனவே!

காலம்
கடந்து வரும்
பணியாளர்களைப்
பழிக்கின்றனவோ அவை?

ஒருநாள் என் மாமியார்
ஊருக்குப் போய்விட்டார்
அன்றும்
வழக்கம் போலவே
வாசலில் காத்திருந்தன
அந்த
நடமாடும்
நன்றி இலக்கியங்கள்!

அம்மா சென்று
ஆறேழு நாட்கள் ஆகிவிட்டன
நாய்கள் காத்துக் கிடக்கின்றன
இன்னமும்…..

நாளை
நல்லது நடக்கும் என
நம்பிக்கையோடு
நாம் காத்திருப்பதுபோல்!



           - கோ. மன்றவாணன்

பசியாக இருக்குமோ…
கோ. மன்றவாணன்
9944006276

     மொட்ட மாடியில என்னமோ சத்தம் கேக்குது. என்னான்னு போய்ப் பாருங்கஎன்ற என் இல்லத்து ராணியின் கட்டளையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடித்து மனதைச் சிதறடித்துவிடும். எனவே கதவைத் திறந்து வெளியில் வந்தேன்.

       வெளிப்புறத்தில் இருந்துதான் மாடிக்குப் படிகள் உள்ளன. மெதுவாகச் சத்தம் காட்டாமல் மாடிக்குச் சென்று பார்த்தேன்.  நாலைந்து சிறுவா்கள் மாங்காய்ப் பறித்துக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் திடுதிப்பென என்னைத் தள்ளிவிடாத குறையாகக் கீழே இறங்கி ஓடினார்கள். மதில் பக்கத்திலேயே தயாராக நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டார்கள். அவர்கள் பறித்த மாங்காய்கள் அங்கங்கே சிதறிக்கிடந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து இல்லத்தரசியிடம் அறிக்கை சமர்ப்பித்தேன்.

       தெண்டம்  தெண்டம்… அந்தப் பசங்கள புடிக்கத் துப்பில்ல ஒங்களுக்கு. விட்டுவிட்டு வந்து கத சொல்றீங்க கத. புடிச்சுக் கட்டி வச்சிருக்க வேணாமா?என்று வார்த்தைகளை வாரி வீசினார். வேறு யாரு? என் மகாராணியார்தான்.

       அணில் சாப்பிட்டுப்போறத ஆசையா சாப்பிடப் பறிச்சிருக்கானுவ.

           அணில் சாப்பிடலாம்ங்க. அதுக்கு அதுதான் விதி. அணில் என்ன வேலைக்குப் போயி சம்பாதிச்சு வந்தா சாப்பிட முடியும்.

       சரி விடு சின்னப் பசங்க.

      என்ன சின்னப் பசங்க? இன்னைக்கு மாங்கா திருடுறவன் நாளைக்கு நகைநட்ட திருடுவான். இந்த மாதிரிப் பசங்கள சும்மா விடக்கூடாது

       அதுக்கு நாம என்ன செய்றது.           சின்ன வயசுல இதெல்லாம் சகஜம்தான். ஏன் நானே சின்ன வயசில  ஒரு வீட்டுத் தோட்டத்துல வேலியை லாவகமா விலக்கிட்டு, கைய உட்டு, பட்டு ரோஜா செடிய திருடிட்டு வந்து எங்க வீட்டுல நட்டிருக்கேன் தெரியுமா… அதனால நான் என்ன இப்ப திருடனாவா ஆயிட்டேன்?

       அதனாலதானோ என்னவோ திருடனுக்கு ஆஜராவற வக்கீலா ஆயிட்டீங்க என்று சொன்ன என் மனைவி, சொரட்டுக்கோல எடுத்துக்கிட்டு என் பின்னாலேயே வாங்க என்ற ஆணையை பிறப்பித்துவிட்டு, ஒரு சாக்குப்பையோடு மாடிக்குப் போனாள். நானும் பின்தொடா்ந்தேன்.

       கைக்கு எட்டிய மாங்காய்களை என் மனைவியின் வளைக்கரம் வளைத்துப்போட்டது. வாங்கரிவாளுக்கு எட்டிய மட்டும் மாங்காய்க் காம்புகளைத் திருகி மாங்காய்களை விழச்செய்தேன். விழுந்த மாங்காய்களை நானும் என் மனைவியும் எடுத்துச் சாக்குப்பையில் நிரப்பினோம். அந்த மூட்டையைப் படியில் தேய்த்தவாறே இருவரும் சோ்ந்து இழுத்துவந்து வீட்டுக்குள் போட்டோம்.

       த்தோ பாருங்க இப்படியே விட்டா எல்லா மாங்காயையும் திருடிட்டுப் போயிடுவாங்க. யாருகிட்டயாவது விலைபேசி மரத்துல இருக்கற மாங்காய பறிச்சிட்டுப் போ சொல்லுங்க

       எங்க போயி ஆளத் தேடறது?

       ம்க்கும்… அதெல்லாம் நான்தான் சொல்லணும்?

       யாராவது மொத்தமா மாங்கா பறிச்சிட்டுப் பணம்கொடுக்குற ஆளு இருந்தா சொல்லுங்க. வீட்டு மரத்துல நிறைய மாங்கா இருக்கு என்று தெரிந்தவா்களிடம் எல்லாம் சொல்லி வைத்தேன்.
      
***
       நாலைந்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலை ஆறு மணிக்கு அழைப்பு மணி ஒலித்தது. வெளியில் வந்து பார்த்தேன்.

       மாங்கா தரீங்களா?
       ஆமா… தர்றதுதான். யார் சொல்லி அனுப்புனது?
              “யாரும் சொல்லலீங்களே… நானாத்தான் வா்றேன்.
              “சரி என்ன வெல சொல்றே?
       மரத்துல மாங்கா ஒண்ணும் அதிகமா இல்லீங்களே
      அதுக்கு நான் என்ன பண்ணுவேன். இருக்குற மாங்காய பறிச்சிட்டுப் போ. சீக்கிரம் வெலய சொல்லு
       நானூறு ரூவா தர்றன். அதுக்கே எனக்கு நஷ்டம்தான் என்று இழுத்தார்.
       கடையில கிலோ 20 ரூபா விக்குது. நீ என்னா இவ்வளவு கம்மியா கேக்குற?
       அது வேற மாங்காங்க. இது ஓடாது.
       யோவ் நாங்க இந்த மாங்காயைச் சாப்பிடுறோம் அவ்வளவு டேஸ்டா இருக்கு
       அதோ பாருங்க… மாங்காய் கருப்படிச்சிருக்கு. யாரு வாங்குவாங்க?
       சரி என்ன சொல்றே
       நானூறுன்னு நான் சொன்னதே அதிகங்க.
      
     இதைக்கேட்டபடி உள்ளே இருந்துவந்த என்மனைவி ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டுப் பறிச்சிட்டுப் போ என்று சொன்னார்.

      என் மனைவி சொன்ன விலையைக் கேட்டு, வியாபாரி அதிர்ச்சி அடையவில்லை. நக்கலாக சிரித்துக்கொண்டே சொன்னார்.

       ஆமாம்மா… இரண்டாயிரம்கூடக் கேளுங்க… அப்படியே விட்டுவையுங்க. அழுகித்தான் போவும். இந்த நானூறுகூடத் தேறாது.

            “நானூறுக்கெல்லாம் தர முடியாது. என்று கட் அண்ட் ரைட்டா சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டேன். வியாபாரி வாசலிலே நின்றுகொண்டிருந்தார்.

       சார்… சார்… என்று வியாபாரியின் குரல்கேட்டு மீண்டும் வெளியில் வந்தேன்.
        சார்… யோசித்துச் சொல்லுங்க சார். காய் ஒண்ணும் அதிகம் தேறாதுங்க.
        யோசிக்கறதுக்கு என்னய்யா இருக்கு. பத்து மூட்ட காய் வரும்.
       அட நீங்க ஒண்ணு. இரண்டு மூட்ட கூட வராது. ஒன்றரை மூட்ட வர்றதே ரொம்ப பெரிசு
       நான் ஒன்றும் பேசவில்லை. அவரே பேசினார்.
       சார்… ஒங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நானூத்தைம்பது ரூவா தர்றேன்.
       வேணாம் வேணாம் நீ கிளம்பு. ஊங்கிட்ட பேசிக்கிட்டு இருக்க முடியாது. எனக்கு நெறய வேல இருக்கு.

       அப்படியும் அவர் விடுவதாயில்லை. ஒரு வழியாக ஐநூறுக்கு முடிவானது. நூறு ரூபாய் முன்பணமாகக் கொடுத்தார். சாக்கு எடுத்துக்கொண்டு  வருவதாகச் சொல்லிப் போனார். ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தார். கூடவே ஒரு பையனும் வந்தான். அவன் அவருடைய மகனாக இருக்கக் கூடும். நான் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. முனையில் வலைக்கூடை கொண்ட ஒரு நீண்ட வாங்கரிவாளை அவர்கள் வைத்திருந்தார்கள். அவரும் அந்தப் பையனும் மாடிக்குப் போனார்கள். சார்… நீங்க கீழேயே இருங்க. பறிச்சிட்டு வந்து சொல்றோம் என்றார் வியாபாரி. நானும் வீட்டுக்குள்ளே நாளிதழ் படித்துக்கொண்டிருந்தேன். மாங்காய் விழும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தோட்டத்தில் கீழே விழுந்த மாங்காய்களை அந்தப் பையன் பொறுக்கிச் சாக்குப்பையில் போட்டுக்கொண்டிருந்தான். அருகே இருந்த எலுமிச்ச மரத்தின் மீது மாங்காய் விழுந்து எலுமிச்சம் பழங்கள் வேறு கீழே விழுந்துகொண்டிருந்தன. சன்னல் வழியாக எட்டிப் பார்த்து அந்தப் பையனிடம் சொன்னேன்.

            “ஏய் எலுமிச்சம் பழத்த எல்லாம் வெல பேசல்ல. அதெல்லாம் எங்ககிட்ட கொடுத்துட்டுப் போவணும்.

            “அது எங்களுக்கு எதுக்கு சார்? அத பொறுக்கி அப்படியே கொடுத்துட்டுப் போறோம் என்று நாணயத்தைத் தம்பட்டம் அடித்தான்.

       கொண்டுவந்த சாக்குப்பைகளில் பறித்த.. விழுந்த மாங்காய்களை நிரப்பினார்கள். பன்னிரண்டு மூட்டைகள் நிரம்பி, பதிமூன்றாவது மூட்டையில் பாதியளவு மாங்காய்கள் இருந்தன.

            “யோவ்… ஒன்றரை மூட்டக்கூட வராதுன்னு சொன்ன… இப்ப 13 மூட்ட வா்றது.

            “சார்… ஒங்ககிட்டெல்லாம் அப்படிப் பேசினாத்தான் இறங்கி வருவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா? என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான். என் ஏமாளித்தனம் என் முகத்திலேயே எழுதி இருக்குறத அவன் படிச்சிருக்கான் போலிருக்கு என்று மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டேன். ஆனாலும் பிடி கொடுக்காமல்,

            “13 மூட்ட மாங்கா வந்துடுச்சி. ஆயிரம் ரூபாயாய கொடுக்கணும்என்று கண்டிப்பாகச் சொன்னேன்.

            “பேசனது பேசனதுதான். ஐநூறுக்குப் பேசி முடிச்சாச்சு. இப்பக் கூட கேக்குறது ஒங்களுக்கே நல்லா இருக்கா சார்

       இதை எதிர்வீட்டுக்காரர் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு வியாபாரியிடம் மேற்கொண்டு பேசவில்லை. எப்படியாவது ஒழியுது என்று விட்டுவிட்டேன்.

       டிவிஎஸ் 50ல் இரண்டிரண்டு மூட்டைகளாக வைத்துக்கட்டி மார்க்கெட்டுக்கு எடுத்துச்செல்வதாகச் சொல்லிச் சென்றார்கள். கடைசி நடையின் போது, மீதிப் பணத்தைத் தருவார்கள் என்று வாசல்படியிலேயே நின்றுகொண்டிருந்தேன்.

       சார்… இந்த மூட்டையை போட்டுட்டு வந்து பைசல் பண்றோம்.

            “யோவ்… இப்பவே கொடுத்துட்டுப் போய்யா.

       சார்… நாங்க சின்ன வியாபாரிங்க. மொத்த வியாபாரிக்கிட்ட போடுறோம். த்தோ… அரை மணிநேரத்துல பணத்தை வாங்கிட்டு வந்து கொடுத்துடுறோம். உங்க பணம் எங்களுக்கு எதுக்கு சார்.

       அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே என்று நம்பினேன். வியாபாரி விர்ரென்று பறந்தார். பையனைக் காணவில்லை. அவன் எப்பொழுது போனான்? எப்படிப் போனான்? என்று தெரியவில்லை.

       தோட்டத்தைச் சுற்றி வந்தேன். விழுந்த எலுமிச்சப் பழங்களில் ஒன்றைக்கூடக் காணோம். ஐம்பது பழங்களாவது தேறும். அவற்றையும் மூட்டையிலேயே வைத்துக் கட்டிக்கொண்டு போய்விட்டிருக்கிறார்கள். ஓஸ் பைப்பையும் காணவில்லை. அதன் மதிப்பு ஐநூறு ரூபாய் இருக்கும்.

       பணம்கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்ற வியாபாரி, மூன்று மணிநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

            “என்னங்க… மீதி நானூறு ரூபாய வாங்கினீங்களா?
            “கொண்டுவந்து தர்றதா சொல்லிப் போன ஆள இன்னும் காணல
        “அப்ப நாமந்தான் போங்க. அவன் அட்ரஸ கேட்டீங்களா? கேட்டிருக்க மாட்டீங்களே… நீங்களும் ஒரு வக்கீலு? எனக்கென்னு வந்து வாச்சீங்களே
    “அப்படியே அட்ரஸைக் கேட்டாலும், ஏமாத்த நெனக்கறவன் சரியான அட்ரஸையா சொல்லிட்டுப் போவான்?

       ஒரு வாரம் ஓடிப் போனது. மார்க்கெட்டில் எல்லாம் விசாரித்துப் பார்த்துவிட்டேன். அப்படி ஒருவரை யாருக்கும் தெரியவில்லை.

***
       மரத்தில் அணில்கள் கிறீச் கிறீச் என்று ஓயாமல் சத்தம் போட்டுக்கொண்டிருக்கின்றன.

       பசியாக இருக்குமோ…
    


சிறுகதை உழவன் 




    அப்போதெல்லாம் கடலூா் முதுநகர் செட்டிக்கோவில் திடலில்தான் அரசியல் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும். தொலைக்காட்சி இல்லாத காலம் என்பதால் நிறைய கூட்டம் வரும். எந்தக் கட்சிக் கூட்டம் நடந்தாலும் கூட்டத்தின் முன்வரிசையில் நான் கலந்துகொள்வேன். அப்போது எனக்கு 12 வயது இருக்கலாம். என்னோடு என் வயது பையன்கள் இருப்பார்கள். மேடையில் பிரமுகர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, மேடைக்கு முன் தரையில் அமா்ந்து நாங்கள் பேசிக்கொண்டும் மண்ணில் விளையாடிக்கொண்டும் இருப்போம். கூட்ட அமைப்பாளா்கள்  அடிக்கடி எங்களைப் பேசாதீங்க என்று அதட்டுவார்கள். நாங்கள் அப்போது மட்டும் அடங்கிப்போவோம். அப்புறம் அனிச்சை  செயலாக நாங்கள் பேசத் தொடங்கி விடுவோம். இவை எழுபதுகளில் நடந்தவை.

      ஒருமுறை ஜெயகாந்தன் அந்த மேடையில் பேசினார். அது ஸ்தாபன காங்கிரஸ் பொதுக்கூட்டம். அதை அப்போது சிண்டிகேட் காங்கிரஸ் என்றும் சொல்வார்கள். ஜெயகாந்தனின் கிருதாவும் மீசையும் என்னை ஈா்த்தனவோ என்னவோ அவரையே நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

      அவர் பேசத் தொடங்கியதில் இருந்து முடிக்கும் வரை ஆா்ப்பாட்டமான பேச்சாக அது இருந்தது. எல்லாக் கூட்டங்களிலும் முன்வரிசையில் அமா்ந்து நீங்க எதுவானாலும் பேசுங்க நாங்களும் தனிக்கச்சேரி நடத்துவோம் என்ற நிலையில் பழக்கப்பட்டுப்போன சின்னப்பசங்களான நாங்களும் ஜெயகாந்தனின் பேச்சை ஆா்வமாகக் கேட்டோம். அதற்குக் காரணம் அவா் பேச்சு எங்களுக்குப் புரியும்படி இருந்தது. ஆா்ப்பாட்டமான பேச்சாகவும் அது இருந்ததால் நாங்கள் ஆா்வமாகக் கேட்டோம்.

      அன்று அவா் பேசிய அந்தக் காட்சி என்றும் பசுமையாகவே என் மனதில் இருக்கிறது. பேசத் தொடங்கும்போது என் பெயர் த. ஜெயகாந்தன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டுதான் பேசினார். ஜெயகாந்தன் பேசுகிறார் என்று விளம்பரப்படுத்தி இருந்த நிலையிலும்- அடுத்து நாம் இதுவரை ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் பேசுவார் என்று அறிவித்த நிலையிலும், அவா் தன்னை ஏன் த. ஜெயகாந்தன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார் என்று அப்போது புரியவில்லை.

      என்னைச் சிறுகதை மன்னன் என்று அழைக்காதீா்கள் என்று சீறினார். மன்னா் காலம் முடிந்துவிட்டது. நாம் யாருக்கும் அடிமை இல்லை. வேண்டுமானால் என்னைச் ‘சிறுகதை உழவன்’ என்று அழையுங்கள் என்றார். அவரைச் சிறுகதை மன்னன் என்று அழைப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அதன்பிறகும் பல ஆண்டுகாலமாக அவரைச் சிறுகதை மன்னன் என்றுதான் அடைமொழியிட்டு அழைத்தார்கள். அவரின் விருப்பப்படி அவரை யாரும் ‘சிறுகதை உழவன்’ என்று அழைக்கவே இல்லை. எனவேதான் இந்தக் கட்டுரைக்கு நான் ‘சிறுகதை உழவன்’ என்று தலைப்பிட்டுப் பெருமைப்படுத்த விரும்புகிறேன்.

      பேச்சினூடே எம்ஜிஆா் கறுப்புப்பணம் வாங்குவதாகச் சாடினார். கூட்டத்தினரின் கைதட்டல் அடங்க கொஞ்ச நேரமானது. அடுத்து, சிவாஜியும் கறுப்புப்பணம் வாங்குகிறார் என்று அதிரடியாகப் பேசினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சிவாஜி ரசிகர்களான காங்கிரஸ்காரா்கள் கலங்கித்தான் போனார்கள்.  மனதில் பட்டதை மறைக்காமல்,  தனக்குச் சரியெனப் பட்டதை நடுநிலையோடு பேசுபவா்தான் ஜெயகாந்தன்.

      நிகழ்ச்சி முடிந்தது. கூட்டம் கலையத் தொடங்கியது. அவருடைய பேச்சு பிரமிப்பில் இருந்து என்னால் விடுபடவே முடியவில்லை. மேடையை விட்டு இறங்கிய அவா், மேடையின் பின்புறம் உள்ள காசி விசுவநாதா் கோவில் வாசல் அருகே நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். நான் வீட்டுக்குப் போகாமலும் பசி தெரியாமலும் அவர் பக்கத்தில் கிழிந்து நைந்த அழுக்குச் சட்டையுடன் நின்று கொண்டிருந்தேன். அந்தச் சிலரிடமிருந்து அவர் விடைபெற்றுக்கொண்டு அருகே இருந்த அவருடைய வீட்டுக்கு நடந்து போனார். அவருடன் ஆறேழுபோ் பேசியபடியே உடன்சென்றார்கள். நானும் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன்போல் அவா் பின்னால் நடந்து சென்றேன். ஏன் சென்றேன் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை. அவா் பெயரில் உள்ள காந்தன் என்ற சொல்லின் பொருளுக்கு ஏற்ப அவா் காந்தமானார். நான் இரும்புத்துகளாய் ஆனேன்.

      கோவில் சுவா் ஓரமாக நடந்து சென்று பிராமணா் தெருவில் திரும்பினோம். அங்குதான் அவா் வீடு இருந்தது. அப்போது ஒரு தோழா் அவரிடத்தில் உங்க கதை புரியவில்லை என்று சொன்னார். உடனே கோபப்பட்டு, புரியல்லனா வாத்தியார் வைச்சுப் படிச்சுக்கோஎன்றார். அந்தத் தோழா் நடுங்கித்தான் போனார். உன்போ் என்ன?என்று கேட்டார். தோழா் சொன்னார். அந்தத் தோழர் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை. இமயத்தையே வியந்து மெய்மறந்து பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு இடையில் தென்படும் சிறுகல் நினைவுக்குள்ளே ஏறாமல் போனது உளவியல் ரீதியாக சரிதான். அந்தத் தோழா் தன்பெயருக்கு முன் தலைப்பெழுத்தைச் சொல்லவில்லை. உடனே அப்பா பேரு என்ன?என்று கேட்டார். தோழா் அஞ்சியபடியே சொன்னார். கூட்டத்துல என்பேச்சைக் கேட்டேல்ல. என் போ் த.ஜெயகாந்தன் என்று சொன்னேனில்ல… பேரு சொன்னா இனிஷியலோட சேத்துச் சொல்லணும். அதுமட்டுமில்ல… யாருகிட்ட பேசினாலும் தன்னை இன்னார்ன்னு அறிமுகப்படுத்திக்கிட்டுப் பேசணும்என்று அறிவுறுத்தினார். அதற்குள் அவா் வீட்டு வாசலுக்கு முன் வந்துவிட்டோம். அவரிடத்தில் பேச வேண்டும் என்று ஆசை எனக்கு இருந்தது. தயக்கம் என்னைத் தடுத்தது. அவராகவே பேச மாட்டாரா என்ற ஏக்கமும் இருந்தது. அதுவரை கோபக்கனலாக பேசிய ஜெயகாந்தன், அந்தத் தோழரிடம் பாசமாகப் பேசி விடைபெற்று வீட்டுக்குள் சென்றார். கோபக்கனலாய்த் தகிக்கும் அவா் கொஞ்ச நேரத்திலேயே குளிர்புனலாய் மாறிவிடுவார் என்று பின்னர் பலர் சொல்லக் கேட்கும் போதெல்லாம் அந்தத் தோழா் நினைப்புத்தான் வரும்.

      மறுநாள் காலை பத்து மணியளவில் எதிர்பாராமல் எனக்கு ஜெயகாந்தன் தரிசனம் மீண்டும் கிடைத்தது. கடலூா் முதுநகரில் காசுக்கடைத் தெரு, குமரக்கோவில் தெரு, கொத்தவால் சாவடித் தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு ஆகியவை இணையும் நான்னுமுனை சந்திப்பில் ஒரு லைட்டுக்கடை இருந்தது. பெட்ரோமாக்ஸ் லைட்டு வாடகைக்குவிடும் கடை அது. அதன் உரிமையாளர் லைட்டுக்கடை பக்கிரிசாமி. குண்டாக- கருப்பாக இருப்பார். அவா் காங்கிரஸ்காரர். அந்த லைட்டுக்கடையில் பக்கிரிசாமியோடும் மற்றும் சிலரோடும் ஜெயகாந்தன் பேசிக்கொண்டிருந்தார். நான் அங்கே போய் நின்றுகொண்டு அவா் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன். ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் தன் பிள்ளைகளுக்குக் காதுகுத்து செய்ய வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

      இதன்பின் பல பத்தாண்டுளாக நான் ஜெயகாந்தனை நேரில் பார்க்கவில்லை. ஆனால் ஜெயகாந்தன் பற்றிய செய்திகளையும் அவருடைய படைப்புகளையும் படித்துக்கொண்டுதான் இருந்தேன்.

      இன்றிலிருந்து எட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் காலை, அப்போதைய ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சௌ. பத்மநாபன் என்னிடம் சில அழைப்பிதழ்களைக் கொடுத்து, தமிழன்பா்களிடத்தில் கொடுக்கச் சொன்னார்.  திருப்பாதிரிப்புலியூா் ஞானியார் மடத்தில் ஞானியார் பற்றிய நூல் வெளியீட்டு விழா நடக்க உள்ளதற்கான அழைப்பிதழ்கள் அவை. அன்று மாலை நடக்கும் நிகழ்ச்சி அது. சென்னையில் உள்ள ஓா் தமிழமைப்பு, கடலூரில் ஞானியார் அடிகளாருக்கு எடுக்கும் விழா அது. ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், திருப்பூா் கிருஷ்ணன் உள்ளிட்ட பல இலக்கிய ஆளுமைகள் கலந்து கொள்வதாக அழைப்பிதழ் விவரம் தெரிவித்தது. ஐந்தாறு நாட்களுக்கு முன்பாகவே சௌ. பத்மநாபன் அவா்களிடத்தில் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டும் அவருடைய முடுக்கடியான வேலை காரணமாக யாருக்கும் கொடுக்க இயலவில்லை என்பது தெரிந்தது. அது மட்டுமின்றி தானும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என்று சொல்லி, எப்படியாவது நிகழ்ச்சிக்குக் கூட்டத்தைச் சேர்த்துவிடு என்று சொல்லி நழுவிக்கொண்டார். வேறு என்ன செய்வது? முடிந்த மட்டில் நேரிலும் அலைபேசி வாயிலாகவும் தமிழன்பர்களுக்குத் தகவல் தெரிவித்தேன்.

      ஓரளவு கூட்டம் சேர்ந்தது. எளிமையாக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முழுவதும் ஜெயகாந்தன் உட்பட எல்லாரும் தரையில்தான் அமா்ந்திருந்தார்கள். அன்று நான் சொல்லி வந்த ஓரு தமிழன்பா் தாமாகவே சென்று ஜெயகாந்தன் பின்னால் அமர்ந்துகொண்டு, அவருக்கே தெரியாமல் போட்டோ எடுத்துக்கொண்டு, அதைக்காட்டித் தான் ஜெயகாந்தனுக்கு நெருக்கமானவர் என்று கதை அளந்து வருகிறார். இப்படி ஊருக்கு ஊா் சிலா் இருக்கத்தான் செய்கிறார்கள்.

      முழுவெண்மை மீசையோடும் தலைமுடியோடும் இருந்த ஜெயகாந்தனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். நான் சின்ன வயதில் பார்த்த அவருடைய கம்பீரத்தை மட்டும் முதுமையால் பறிக்க முடியவில்லை. கூட்டத்தில் அமா்ந்திருந்த போது, பக்கத்தில் இருந்தவரோடுகூட அவா் பேசாமல் அவை நாகரீகம் காத்தார்.

      அன்று அவா் பேசினார். அமைதியான நதியோட்டம்போல் அவா் பேச்சு இருந்தது. கடலூரில் வாழ்ந்த இளமை நினைவுகளை அவா் பேசும்போது, அவருக்குள் ஒருவித மகிழ்ச்சி இருந்ததை உணர முடிந்தது. கோவில் கோபுரத்தில் இருந்த அம்மன் சிலையின் கையில் தேசியக் கொடியைக் கட்டி வைத்திருந்ததையும், மஞ்சைநகர் மைதானத்தின் வரலாற்றுப் பெருமைகளையும், ஞானியார் மடத்தின் அருகில் தான் விளையாடி மகிழ்ந்த பொழுதுகளையும் சுவையோடு விவரித்தார். அவா் பேச்சில் என்னை இழந்தேன்.

      காலம் அவரை வெகுவாக மாற்றி இருந்தது. ஆர்ப்பாட்டமான ஜெயகாந்தனாக அவா் இருக்கவில்லை. பழுத்த ஞானியைப்போல் காட்சி அளித்தார். அவா் பேச்சும் ஒரு முதிர்ந்த ஞானியின் முத்துமொழிபோல் இருந்தது.

      ஞானியார் மடத்தின் அருகில் உள்ள விடுதியில்தான் அவா் தங்கி இருந்தார். மறுநாள் காலையில் சென்று எப்படியாவது அவரைப் பார்த்துப்பேச வேண்டுமென்று நினைத்துக்கொண்டே இருந்ததால் தூக்கத்தைத் துறந்தேன். காலை எட்டு மணிக்கு விடுதிக்குச் சென்றேன்.

      காலை ஆறு மணிக்கே அவா் சென்னைக்குப் புறப்பட்டுப் போய்விட்டார் என்ற தகவல்தான் பெற முடிந்தது.

      பேச முடியவில்லையே…

                                                      திண்ணை, 12-04-2015.




Sunday, 28 August 2016

கட்டுரைகள்

கவிதை விடைபெறும் காலம்…
கோ. மன்றவாணன்
      
       மரபுக் கவிதையாளர்கள், வசன கவிதையாளர்களை எதிர்த்தார்கள். வசன கவிதையாளர்கள், புதுக்கவிதையாளர்களை வெறுத்தார்கள். புதுக்கவிதையாளர்கள், நவகவிதையாளர்களை- நவீன கவிதையாளர்களைப் பழிக்கிறார்கள். மரபுக்கவிதை, வசன கவிதை, புதுக்கவிதை ஆகிய இம்மூன்றிலும் சொல்லின்பம் உள்ளது. அத்தகைய சொல்லின்பம், கவிதை ரசிகர்களைக் கவா்ந்திழுத்தது. என்றாலும் வெறும் சொல்லின்பமே கவிதையாகி விடாது. இருப்பினும் அது கவிதைச்சோலைக்குள் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் தேவதையாக உள்ளது என்பதும் உண்மைதான். ஆனால் நவீன கவிதையாளர்கள் சொல்லின்பத்தை முழக்கம் என்று சொல்லி அதற்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள். எவ்வித அலங்காரமும் இல்லாமல் நிர்வாணமாகவே கவிதை இருக்க வேண்டும் என்று நியாயம் பேசுகிறார்கள். இயல்பாகவே அவர்களின் கவிதைகளில் சொல்லின்பம் வந்துவிட்டால், அய்யோ… என்று அலறி விலக்கி விடுகிறார்கள். கவிதைகளை அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளச் சொல்லின்பம் உதவுவதை மறுக்க முடியுமா என்ன?
       செவிவழி காலத்தில் மரபுக்கவிதைகள் வலம் வந்தன. அதில் உள்ள எதுகை மோனை சீர்வரிசை, யாப்பமைப்புகள் யாவும் கவிதையை நினைவில் நிறுத்திக்கொள்ள வழிசெய்தன. யாப்பை உடைத்துப் புதுக்கவிதை யாக்கியவர்கள், மோனையை மட்டும் புளியங்கொம்பாய்ப் பிடித்துக்கொண்டு ஊஞ்சல் ஆடினார்கள். ஓலைச்சுவடி, காகிதம் தாண்டி கையிலே இணையத்தை வைத்திருக்கும் காலத்துக்கு நாம் வந்துவிட்டோம். மனப்பாடம் அவசியம் இல்லை. ஆனாலும் எந்த விதத்திலாவது மனதுக்குள் ஆட்சி செலுத்துவதே கவிதையின் வலிமையாகும்.
       சொல்லின்பம் என்பது சொல்லில் அதிக அர்த்தத்தை ஏற்றும்போது வருவதல்ல. சொற்களின் சுமையை நீக்கும்போது இனிமை தானாகவே வந்துசேரும். ” என்று ஆசை அவர்கள்  எழுதியுள்ளார். ஆனால் நவீன கவிதைகளில் சொற்களில் மட்டுமல்ல கவிதைப்போக்கிலும் நோக்கிலும்கூட பெருஞ்சுமை ஏற்றப்படுகின்றன. பலவற்றைப் படிக்கும்போது கவிதைகளா எனக் கேட்டுவிடத் தோன்றுகிறது. அப்படிக் கேட்டால் நாம் ஏதோ அறிவில் குறைந்தவர்கள் எனப் பிறர் எண்ணக்கூடும் என்ற அச்சத்தில், ஆகா… சபாஷ்! என்று சொல்லி நம்மை நாமே மேதாவியாகக் காட்டிக்கொள்ள வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். நவீன கவிதை புரியவில்லை என்று சொன்னால், நம்மைப் பழைமைவாதிகள் என்று சொல்லிப் பரணில் தூக்கிப்போட்டு விடுவார்களோ எனப் பயந்துபோய்… புரியாமலேயே பாராட்டி விடுகிறோம். முன்னிலும் மேன்மையானதாக- பிரமிக்க வைப்பதாகப் புதுமை இருந்தால், பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்க யார் தயங்குவார்கள்? அதே நேரத்தில் மரபுக் கவிதைகளோ புதுக்கவிதைகளோ வெறும் சொல்லடுக்குகளாக மட்டுமே இருந்தால் அவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவை வெற்றுச் சுவா்களாக இருக்குமே தவிர வீடாகி விடாது. அதற்காக அவர்களைத் தண்டிக்க வேண்டியதுமில்லை. அவர்கள், கவிதையின் முதல்படியில் ஏறி ஏறித் தடுக்கி விழுகிறார்கள். எப்படியாவது ஏறி விடுவார்கள். ஏறவில்லை என்றால் ஏற்கப்படாமல் போய்விடுவார்கள். அவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
       இன்றைய கவிதைப்போக்கு வெகுவாக மாறிவிட்டது. காட்சியின்பம் நோக்கிக் கவிதை நகர்ந்துவிட்டது. மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். ஆனால் பழைய கவிதைகளில் காட்சியின்பம் இல்லாமல் இல்லை. விதவிதமான உத்திகளுக்கும் குறைவில்லை. எனினும் அவற்றை நவீன கவிதையாளர்கள் பலர் படிக்கவில்லை. படித்தவா்களோ அவற்றை வேண்டுமென்றே திரைமறைப்புச் செய்கிறார்கள். இன்றைய சிலரின் நவீன கவிதைகளில் சொற்களின் பிரயோகம், வாக்கியங்களின் அமைப்புமுறை, இதுவரை அறியப்படாத கருத்துப்பார்வைகள், மிகுநுட்பமான அணுகுமுறைகள் ஆகியவை புதுமையாகத்தான் உள்ளன. இவை வரவேற்கப்பட வேண்டியவையே. ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் ஒருமுறை எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கவிதை அதற்கு விதிவிலக்கல்ல. விதிவிலக்காக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கவிதை மெருகேறிக்கொண்டே வரவேண்டும்.
       இருப்பினும் கவிஞா்களாக இருப்பவர்களுக்கே- கவிதையின் சுவைஞர்களுக்கே கூட இன்றைய கவிதைகள் புரியாமல் போய்விடுகின்றன. சிதறுண்ட கனவுகள் போல அவை உள்ளன. அதனால் அவை மனத்தில் பதியாமல் போய்விடுகின்றன.
       நவீன கவிதையாளர்கள் சிலர், பல பக்கங்களைத் தாண்டும் நெடுங்கவிதைகளை எழுதுகிறார்கள். பத்தியோ இடைவெளியோ இன்றி மூச்சு முட்டமுட்டக் கவிதை எழுதுகிறார்கள். புது மலைபடுகடாம் எனச் சொல்லத்தக்க வகையில் நீண்ட கவிதைகளை நவீன கவிஞர்கள் எழுதுகிறார்கள். நீளமான கவிதைகள் தேவையா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.
       ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகக் காட்சி தரக்கூடிய படிமங்களையே வெகுவாகப் பாராட்டுகிறோம். அதற்காக வெகுநீண்ட கவிதை வரிகளை வாசிக்க வேண்டிய சுமையை வாசகன் தாங்க வேண்டிய நிலை உள்ளது. படிமம் என்று புதுப்பெயரிட்டு நவீன கவிதையாளர்கள் தங்களைப் புதுஉலக பிரம்மாக்கள் எனப் பறைசாற்றிக்கொண்டு உலா வருகிறார்கள். ஆனால் நமக்குத் தெரிந்து சங்ககாலம் தொட்டுக் காலம்தோறும் மலர்ந்துவந்த கவிதைகளில் நிறைய  படிமங்கள் உள்ளன. அவற்றை நடுநிலையோடு அணுகினால் நல்லது. ஆகப் படிமங்கள், நவீன கவிதையாளர்களின் புதுக்கண்டுபிடிப்பும் அல்ல. சொந்தச் சொத்தும் அல்ல. அந்தப் படிமங்களை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ரசித்து, புதுக் கண்டுபிடிப்பாகச் சொல்லும்போதுதான் அவை கவனத்தில் கொள்ளப்படுகின்றன. மற்றபடி சாதாரணமாகக் கவனத்தை ஈா்க்கவில்லை. ஏன் எழுதிய கவிஞனுக்கே தன்கவிதையில் இந்த மாதிரியான படிமம் இருக்கிறது என்று தெரியவில்லை. பிறர் அது இருக்கிறது இது இருக்கிறது என்று சொல்லும்போது ஆம்... அப்படித்தான் என்று தலையசைத்து விடுகிறார்கள்.
       புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தமக்கு வேண்டியவா்களின் கவிதைகளைச் சிலாகித்துப் பரிந்துரைக்கிறார்கள். அவா்களுக்குப் புகழ்வெளிச்சமும் தருகிறார்கள். வேண்டாதவர்களின் கவிதைகள் நல்லனவாக இருந்தாலும் அவைபற்றிப் பேசாமலோ அல்லது எதிர்த்தோ நடுநிலை மீறுகிறார்கள். பரிந்துரை என்பதுகூட நடுவு நிலைமை தாண்டிய நவீன இலக்கிய ஊழலாகவே உள்ளது.
       நவீன கவிதையாளர்கள்- நவீன எழுத்தாளர்கள் சிலரைப் பார்க்கும்போது அவா்களிடத்தில் படிமம் என்றால் என்ன என்று கேட்பது எனக்கும் பழக்கம் ஆகி வழக்கம் ஆகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள். படிமம் என்றால் என்னவென்று தெரியவில்லை என்று சிலர் நாணயமாகத் தெரிவித்தார்கள். உவமை, உருவகம் ஆகியவற்றைப் படிமம் என்றார்கள். சிலர் அவற்றை மறுத்தார்கள்.  ஆக அவா்களும் நவீன கவிதைகளை எழுதித்தான் வருகிறார்கள். அடிக்கடி பேச்சில் படிமம் படிமம் என்று சொல்வதையே நாகரிகத் தகுதியாகக் கருதுகிறார்கள். பலருக்கும் பலவாறு காட்சிதரக் கூடியதாகப் படிமங்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள். இது ஒருவகையில் சரியாகத் தெரியும். மறுவகையில் உண்மைக்குப் புறம்பாகத் தெரியும். யானையைப் பார்த்த பார்வை அற்றவர்களைப் போல ஒவ்வொருவரும் ஓர் அர்த்தம் கொள்ளலாம். உண்மையை யாரே அறிவார்? என்றொரு பார்வையும் உள்ளது.
       நவீன கவிஞா்கள் என அறியப்பட்டவா்களின் கவிதைத்  தொகுப்புகளில் பல நல்ல கவிதைகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்தக் கவிதைகளை சாதாரண வாசகா்களால் எளிதில் நெருங்க முடியாது. ஒரு பிரபல கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டு, அவருடைய ஒரு கவிதையைப் புரிந்துகொள்ள ஆறு மாதம் தேவைப்பட்டது என்பதையே பெருமையாய்ப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அத்தகைய நல்ல கவிதைகளை அடையாளம் காண்பதற்கே ஏதோ அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதுபோல் மிகவும் மெனக்கெட வேண்டியுள்ளது. கதைகளில் சொல்வதுபோல்… ஏழுகடல் தாண்டி, ஏழுமலை தாண்டி, ஏழு சுரங்கங்களைத் தாண்டி, ஏழு நாகங்களைத் தாண்டி ஆங்கோர் பொந்தில் இருக்கும் ராஜ நாகத்தின் வாயில் உள்ள இரத்தினத்தை எடுப்பதுபோல்தான் உள்ளது நவீன கவிதைகளைப் படிக்கின்ற சிரமம். பல நேரங்களில் அந்த இரத்தினமும் வெறும் கூழாங்கல்லாக இருந்துவிடுகிறது. இன்றைய மின்னல் வேக உலகில் இவ்வளவு சிரமப்பட்டுக் கவிதையைப் படிக்கத்தான் வேண்டுமா? எளிமையாக- புரியும்படியாக எழுதினால் நவீனத்துக்குப் பங்கம் ஏற்பட்டுவிடுமா?  சொல்புதிது பொருள்பொதிது சோதிமிக்க நவகவிதை என்று தம் கவிதைகளைப் பாரதியார் குறிப்பிடுகிறார். புதுமைக்கவியாக மிளிர்ந்த பாரதியாரின் எளிமையும் இனிமையும்தாம் அவரை மக்களிடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தன. மக்களை விட்டு அந்நியப்பட்டுக் கிடக்கும் நவீன கவிதைகளால் என்ன மாற்றத்தை நிகழ்த்த முடியும்?
       இன்றைய நவீன இலக்கிய இதழ்களில் வரும் நவீன கவிதைகளை என்னுடைய வழக்கறிஞா் தோழா்களிடத்தில் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். படித்தும் புரியவில்லை என்றார்கள் சிலர். படிக்கவே முடியவில்லை என்றார்கள் பலர். அவற்றையே கவிஞா்களிடத்தில் கொடுத்தேன். அவா்களிடத்திலும் இதே நிலைமைதான். சரி இளைஞா்களிடத்தில் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். தலை சுத்துது ஆளை விடுங்க என்றார்கள். அவர்களிடத்தில் இந்தக் கவிதைகளில் எந்தச் சொல்லாவது புரியவில்லையா? என்று கேட்டேன். எல்லாச் சொற்களும் புரிகின்றன என்றார்கள். அப்படியானால் கவிதைகள் ஏன் புரியவில்லை? தகவல்களை- எண்ணங்களைக் கடத்தும் சக்தி அந்தக் கவிதைகளுக்கு எப்படி இல்லாமல் போய்விட்டது?
       சில நவீன கவிதைகளைப் பற்றிப் பிரபல எழுத்தாளர்கள் விளக்கம் சொல்லும்போதுதான் வியக்க முடிகிறது; ரசிக்க முடிகிறது. நல்ல கவிதைகளுக்கு இடைப்பூசாரிகள் தேவையில்லை. சிறந்த கவிதைக்கு உரையாசிரியர்களோ பாஷ்யக்காரர்களோ தேவையில்லை.  நல்ல கவிதை தானாகவே நம்மோடு பேச வேண்டும். இல்லை எனில் கவிதைப்பண்டிதர்கள் என்றோர் இனம் தோன்றி, இல்லாதததையும் பொல்லாததையும் பேசி, கர்வ தேசத்தில் காலாட்டிக் கொண்டிருப்பார்கள்.
       நவீன கவிதைகளின் நல்ல சுவைஞராகத் திகழும் கடலூர் சீனு அவர்களிடத்தில் கேட்டேன். நவீன கவிதைகள் என்ற அடையாளத்தோடு வரும் கவிதைகளில் பெரும்பாலும் தனக்கும் புரியவில்லை என்று, ஒரு நீதிமானாக ஒப்புக்கொண்டார்.
       அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துக்காட்டுகளைக் காட்டி இவற்றுக்கெல்லாம் மறுப்புகள் வரக்கூடும். நல்ல கவிதைகளை அடையாளம் காட்டக்கூடும். இன்றைய நவீன கவிதையைக் குறித்த ஒட்டுமொத்த பொதுப்பார்வைதான் இது.
       பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
       பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

என்பதுபோல் கவிதைகள் மரபுக்கவிதை என்றும் புதுக்கவிதை என்றும் நவீன கவிதை என்றும் பலவாறு இருக்கட்டும். அதில் தவறில்லை. ஒருசாரார் இன்னொரு சாராரின் கவிதையைக் கவிதை அல்ல என்று ஜீன்ஸ் பேண்ட் கிழியச் சண்டைபோட வேண்டியதில்லை. உணவகத்தில் யாருக்கு என்ன உணவு பிடிக்கிறதோ அதை அவர் உண்டு மகிழட்டும். இட்லி, தோசை, பூரி, பொங்கல் எல்லாம் உணவு வகைதான். மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை எல்லாமும் கவிதை வகைதான். ஒரே மாதிரியான உணவைத் தொடர்ந்து சாப்பிடச் சலிப்புதான் வரும்.  சலிப்பு வராத அளவுக்கு அடுத்தடுத்த உணவைச் சுவைக்கலாம். ஆனால் எல்லா உணவுகளும் சுவைக்கத் தக்கனவாக இருக்க வேண்டும். தொண்டைக்குள் இறங்காத உணவும் சிந்தைக்குள் பதியாத கவிதையும் ஒன்றுதான். ஒரே மாதிரியான சுவைஞர்கள் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.  சுவைஞர்களும் பலவிதம். சுவைகளும் பலவிதம். யாருக்கு எந்தச் சுவை பிடிக்கிறதோ அந்தச் சுவையை அவர்கள் அதிகமாக நுகர உரிமை உள்ளவர்கள். எல்லா உணவு வகைகளையும் அவ்வப்போதான நேரங்களில் சுவைக்கத் தெரிந்தவர்கள்தாம் நளபாகம் அறிவதுபோல் கவிபாகம் அறிந்தவர்கள். ஓர் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். நவீன கவிதைக்கு அறிவார்ந்த வாசகர்கள் உள்ளனர். அவர்கள் வாசிக்கட்டும். நவீன கவிதையைத் தாண்டியும் கவிதை உள்ளது. அடுத்த புதுமைக்கு வழிவிடாமல் தடைபோட இங்கு யாருக்கும் உரிமையில்லை.

       இன்றைய நவீன கவிதையாளர்கள் இதுதான் கவிதை என வரையறை செய்தால் நாளை உருவாகும் அதிநவீன கவிதைக்கு இன்றே அவர்கள் ஆசிட்பால் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காலத்திலும் மேலாதிக்க வாதிகள் தடைபோட்டுச் சர்வாதிகாரம் செய்தார்கள். தடை உடைத்துப் புதுப்புதுச் சிகரங்களில் வெற்றிக்கொடி நாட்டி வந்துள்ளது கவிதை.

       இப்படி எழுதுவதால் நான் நவீன கவிதைக்கு எதிரி அல்ல. அதைத் தாண்டியும் கவிதை வளர வேண்டும் என்று ஆசைப்படுபவன். ஆசையில் ஆசிட் ஊற்றி விடுமோ காலம்? அனைத்து எழுத்து வடிவங்களிலும் கவிதைக்கு மட்டுமே காதலைப்போல் ஒரு காந்த சக்தி உண்டு. அந்தச் சக்தி முடங்கிப்போய் விடுமோ? முடமாகிப்போய் விடுமோ?

       பொதுவாகக் கவிதையைச் செய்கிறார்கள். செய்வது கவிதையல்ல; மலர்வது கவிதை! என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

       வரவர கவிதைக்கு ரசிகர்கள் குறைந்து வருகிறார்களே… ஏன்? கவிதைப் புத்தகங்களைப் பதிப்பகங்கள் பதிப்பிக்க மறுக்கின்றனவே… ஏன்? நூலகங்கள், கவிதை நூல்களை வாங்காமல் தவிர்க்கின்றனவே… ஏன்? இந்த நிலைமைக்கெல்லாம் எது காரணம்? யார் காரணம்?

       இவற்றுக்கெல்லாம் விடைகாண வேண்டிய தருணமிது. இல்லாவிட்டால் கவிதை விடைபெறும் காலம் வந்துவிடும்.

malaranicham@gmail.com


அறிவு


அறிவாளிகளே… கதவைத் திறவுங்கள்
மூடக்கவி வருகிறது
வலக்காலை எடுத்து வைத்து

ஏவுகணை புறப்பாடு
பஞ்சாங்கம் பார்த்தார்
விஞ்ஞானி

இராகு காலம்
தீர்ப்பைத் தள்ளிவைத்தார்
நீதிபதி

கழிவறையைச் சமையலறையாய் மாற்றினார்
வாஸ்து ஜோதிடரைச் சந்தித்த
கட்டடப் பொறியாளர்

குறைந்த வாடகை
குடியிருக்க வரவில்லை
கதவுஎண் 8

பூனை
குறுக்கே போனது
குகைக்கே திரும்பியது புலி

ஜாதகங்களைப் பார்த்து
வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தது
பகுத்தறிவுக் கட்சி

அறிவு
மண்டியிடுகிறது

மடாலயம்

Saturday, 27 August 2016



வானமழை நீ எனக்கு

இலக்கின்றி நான்நடந்தேன்
இருட்டுக்குள் தான்கிடந்தேன்
விளக்கொன்றை ஏற்றிவழி காட்டி வைத்தாய் – என்னுள்
விதவிதமாய் வண்ணங்கள் தீட்டி வைத்தாய்!

வறண்டுவிட்ட நிலமாக
வற்றிவிட்ட குளமாக
புரண்டுவிட்ட என்வாழ்வை மீட்டுத் தந்தாய் – ஒரு
புதுராக மெட்டமைத்துப் பாட்டுத் தந்தாய்!

ஊர்மதிக்க வில்லையடி
உள்ளத்தில் தொல்லையடி
வேர்நசிந்து நான்சாயும் போது வந்தாய் -  உன்
மென்தோளில் எனைத்தாங்கி முத்தம் தந்தாய்!

அழகில்லை பணிஇல்லை
அட,வாழ்வே இனிஇல்லை
இழவுவீட்டுப் பிணமானேன்; என்ன நினைத்தாய்? – ஓர்
இதயமாக உயிராக வந்து அணைத்தாய்!

உனைப்பார்த்து முளைவிட்டேன்
உனைநினைத்து இலைவிட்டேன்
வாழ்வதற்கே கிளைவிட்டேன் பெண்ணே பெண்ணே! – என்றும்
வானமழை நீஎனக்குக் கண்ணே கண்ணே!

 - கோ. மன்றவாணன்