கள்ள ஆண்தொடர்பில் வெறிகொண்டு
நல்லக் குழந்தைகளைக்
கொல்லத் துணிகிறாள்
ஒருதாய்
சரியாகச் சொன்னால்
ஒருபேய்
அன்பே கடவுள் என்று
அழுத்தமாக மெய்யுரைத்த
மதங்களுக்குள்
யுத்தமும்
ரத்தமும்
பண வெறியில்
பதவி வெறியில்
அடங்காத சொத்து வெறியில்
கொடூர மிருகங்கள்
கூடாரம் போட்டுக்
கொண்டாட்டங்கள் நடத்துகின்றன.
அன்பின் வழியது உயிர்நிலையென
ஆசிரியர் பாடம் நடத்திய போதே
செங்குருதி பீரிட்டது
சிறுவனின் தலையில்!
தடி உடைந்ததே என்று
தவித்துத்தான் போனார் அந்த ஆசிரியர்
அகன்ற மனித வெளியில்
அன்பைத் தேடித் தேடித்
தோற்றோடி இருள்கிறான்
சூரியன்
ஒவ்வொரு மாலையிலும்.
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment