Sunday, 23 September 2018

சொற்கள்






















அனுபவப் பள்ளியில் இருந்து
அறிவொளி பாய்ச்சுகிறது
முதியோர் சொல்

கல்லறைக்குள் நுழைந்து
காதலனை எழுப்புகிறது
காதலியின் சொல்

வா... உயர
வாழ்வுயர அழைக்கிறது
வள்ளுவன் சொல்

கடலில் விழுந்தவரைக்
கரைசேர்க்கிறது
நட்பின் சொல்

உலகம் கைவிட்ட பின்னும்
உன்னை அணைத்து வாழ்விக்கிறது
தாயின் சொல்

தாய்த்தமிழையே
தாலாட்டுகிறது
மழலைச்சொல்

மொழிக்கு
மெல்லெனப் பொட்டு வைக்கிறது
கவிஞரின் சொல்

சொற்கள் ஒன்றுகூடிச்
சொல்லொன்றைச் சூட்டிக்கொண்டன
தமிழென்று


-கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment