குடிசை வீட்டுச் சிறுமியின்
கூந்தலில் மின்ன
இறங்கி வருகின்றனவோ...
இரங்கி வருகின்றனவோ...
மீன்
துள்ளி விளையாடும் தடாகத்தின்
அல்லி மலர்மீது காதல்கொண்டு
நிலம்நோக்கி
குளம்நோக்கிப் பாய்ந்ததில்
இடம்மாறி
தடம்மாறி விழுகின்றனவோ...
நளினச் சொற்களுக்குப் பதிலாக
நட்சத்திரங்களை அடுக்கியொரு கவியெழுத
அழைத்தேன்
அதற்காக வருகின்றனவோ...
நட்சத்திங்களை
நிராகரித்துவிட்டு
நிலவை மட்டுமே பாடும் கவிஞர்களிடம்
நீதி கேட்டு
நெடும்பயணமோ...
நட்சத்திரங்கள்
விழுந்த இடம்தேடி
விஞ்ஞானிகளும் செல்வதில்லை
மெய்ஞானிகளும் சொல்வதில்லை
பாவ பூமியில்விழ அஞ்சிப்
பாதியிலே சாம்பலாகிக் கரைகின்றனவோ...
உச்சி நட்சத்திரங்கள் விழும்
ஒவ்வோர் இரவும்
உணர்த்துகின்றதோ...
ஒவ்வொன்றாய் என் கனவுகள்
உடைந்து நொறுங்குவதை?
-கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment