Friday, 27 July 2018

அடுத்த வரி



















அடுத்த வரி தேவை
அழகாய்க் கவிதை
விழிதிறக்க

இரவு வானத்தை
இறவாணத்தை
அண்ணாந்து பார்த்தபடியே இருக்கிறேன்

வெறுங்கையோடு திரும்புகிறேன்
கம்பன்
கடலில் மூழ்கியும்

அடுத்து அடுத்தென
மொட்டு விரித்துக்கொண்டே இருக்கிறது
முற்றத்து மல்லிகை
என்னை
ஏளனமாய்ப் பார்த்து

ஊர்வசியோ மேனகையோ
ஊடுருவ முடியாத வெளியில்
உறக்கம் பசி மறந்து
தவம் கிடக்கிறேன்...
அடுத்த வரிக்காக

-கோ. மன்றவாணன்


Wednesday, 18 July 2018

மழை இரவு





















நள்ளிரவு
இருளில் கோடு வரையும்
வெள்ளைமழை

தூரத்து மலையில் இருந்து
அவசரமாய் இறங்கும்
அருவி

அமைதியாகக் குளிக்கும்
சாலைகள்

புதுசிவன் புதுநக்கீரன் சொற்போர்
பூக்களைத் தழுவிய மழைக்கு
மணமுண்டா?

தாமரைக் குளத்தில்
தவளைகள் நடத்தும்
இசை அரங்கு

மூடிய அறைக்குள் குறட்டைவிடும் உன்னை
நிராகரித்து நடக்கிறது
மழையிரவு

-கோ. மன்றவாணன்

பிரியும் தருணத்தில்...






















இறப்பு
பிரித்துவிடுமா?
பிரிந்தோமா காந்தியின் நினைவை!

இன்றைய
இணைய உலகிலும்
வாழ்கின்றான் வள்ளுவன்
வலம்வருகின்றான் கம்பன்

பிரிக்க முடியுமா
புலவனையும் தமிழையும்?

நேற்று என்பது பிரிந்து போவதில்லை
நேற்றின் வளர்ச்சியே
இன்று

பிரிந்து கிடக்கவில்லை
சேர்ந்தே செல்கின்றன தண்டவாளங்கள்
ஒரே பயணம்தான்

நிழல் பிரிவதில்லை
இருட்டுக்குள்ளும்
வாழப் பழகிக்கொள்கிறது

கண்ணுக்குத் தெரியாவிட்டால் என்ன?
கைக்கோர்த்தபடியே நடக்கின்றன
கிழக்கும் மேற்கும்


ஒட்டியே உறவாடுகின்றன ஒருமுனையில்
வடதுருவமும்
தென்துருவமும்

நெடுஞ்சுவர்கள் பிரிக்குமோ
காதலை?
ஊடுருவும் மனம் இருக்கையில்!

பிரியும் தருணம் என்பதே மாயையானது
சூரியன்
மறைவது போலவே!


-கோ. மன்றவாணன்