இறப்பு
பிரித்துவிடுமா?
பிரிந்தோமா காந்தியின் நினைவை!
இன்றைய
இணைய உலகிலும்
வாழ்கின்றான் வள்ளுவன்
வலம்வருகின்றான் கம்பன்
பிரிக்க முடியுமா
புலவனையும் தமிழையும்?
நேற்று என்பது பிரிந்து போவதில்லை
நேற்றின் வளர்ச்சியே
இன்று
பிரிந்து கிடக்கவில்லை
சேர்ந்தே செல்கின்றன தண்டவாளங்கள்
ஒரே பயணம்தான்
நிழல் பிரிவதில்லை
இருட்டுக்குள்ளும்
வாழப் பழகிக்கொள்கிறது
கண்ணுக்குத் தெரியாவிட்டால் என்ன?
கைக்கோர்த்தபடியே நடக்கின்றன
கிழக்கும் மேற்கும்
ஒட்டியே உறவாடுகின்றன ஒருமுனையில்
வடதுருவமும்
தென்துருவமும்
நெடுஞ்சுவர்கள் பிரிக்குமோ
காதலை?
ஊடுருவும் மனம் இருக்கையில்!
பிரியும் தருணம் என்பதே மாயையானது
சூரியன்
மறைவது போலவே!
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment