Sunday, 8 April 2018

அலைபாயும் மனதினிலே...







             அலையிருக்காது கடலாழத்தில்
             அறிந்து சொல்கிறது மீன்
             அலை ஓய்வதில்லை மனஆழத்தில்
             அடித்துச் சொல்கிறேன் நான்

             தூக்கத்திலும் கதறுகிறது மனம்
             துக்கக் கனவலைகள் மோதி
             ஏக்கத்திலும் நசுங்குகிறது மனம்
             இன்னொருவர் உயரம் பார்த்து

             அள்ள அள்ளக் குவிகிறது பணம்
             அமைதியை வாங்க முடியவில்லை
             ஆள்அம்பு அதிகாரம் திசைதோறும்
             அச்சத்தைத் தடுக்க முடியவில்லை

             கதவு சன்னல் சாத்திவிட்டேன்
             கள்வர் நினைவு அகலவில்லை
             கடிகாரத்தை நிறுத்தி வைத்தேன்
             கால ஓட்டம் நிற்கவில்லை

             தியானப் பயிற்சியில் சேர்ந்தேன்
             ஐயாயிரம் கட்டணம் செலுத்தி
             பயிற்றுவிக்கும் பெண்ணைப் பார்த்தேன்
             பற்றிக்கொண்டது இன்னொரு தீ 

             மனதைக் கட்டிப்போடக் கயிறில்லை
             மன்றத்தின் முன் முழங்கினேன்
             பாசக் கயிறு வீசி வந்தான் எமன்
             பாதிக் கனவில் அலறினேன்

             -கோ. மன்றவாணன்



No comments:

Post a Comment