Tuesday, 27 February 2018

எங்கும் எதிலும்








                 எங்கும் எதிலும் ஊழலப்பா
                 என்றும் நேர்மை வாழலப்பா
                 பொங்கும் பாலும் திரியுதப்பா
                 புனிதம் கருகி எரியுதப்பா

                 வாய்மை, பேச்சில் ஏதப்பா?
                 வாழ்க்கை முழுதும் சூதப்பா
                 தாய்மை கூடப் போலியப்பா
                 தர்மம் என்பது காலிடப்பா

                 கோவில் சொத்துப் பறிபோச்சு
                 கொலையும் களவும் உறவாச்சு
                 பாவம் செய்தல் நடப்பாச்சு
                 பாசம் கூட நடிப்பாச்சு

                 சட்டை மிடுக்கு வெள்ளையப்பா
                 சகல சொத்தும் கொள்ளையப்பா
                 பட்டை கொட்டை ஜொலிக்குதப்பா
                 பாலியல் சேட்டை கெலிக்குதப்பா

                 முகத்தில் சிரிப்புப் பொங்குதப்பா
                 முதுகில் கத்தி இறங்குதப்பா
                 அகத்தில் கரும்பேய் ஆடுதப்பா
                 அய்யோ... தெய்வம் வாடுதப்பா....

                 கோ. மன்றவாணன்




Friday, 23 February 2018

அந்நாளே திருநாள்






         வாடகை ஏதும் கொடுக்காமலே
         மாமரத்தில் குடியிருக்கும் அணில் சொன்னது :
         மாங்கனி பழுக்கும் ஒவ்வொரு நாளும்
         மனதினிக்கும் திருநாளே!

         நட்சத்திரக் கூட்டம் சொன்னது :
         மேகம் மறைக்காத இரவு ஒவ்வொன்றும்
         மின்னொளி வீசும் திருநாளே!

         என்வீட்டு ரோஜா செடி சொன்னது :
         எதிர்வீட்டு இளம்பெண் பூப்பறிக்கும் நாள் ஒவ்வொன்றும்
         காதல் தேசத்தை விலைபேசும் திருநாளே!

         சுவரில் வரைந்த காந்தி ஓவியம்
         சொன்னது :
         தவறியும் தீங்கிழைக்காத நாள் ஒவ்வொன்றும்
         மனித நேயத்துக்கு உயிரூட்டும் திருநாளே!

         அழிவின் விளிம்பில் இருக்கும் மரம் சொன்னது :
         வெட்டக் கோடரி எடுத்து வராத நாள் ஒவ்வொன்றும்
         பசுமை தீட்டும் திருநாளே!

         நீதிமன்றத்தில் சிறைபட்ட காவிரி சொன்னது :
         என்னை என்போக்கில் விடும் நாள் ஒவ்வொன்றும்
         எல்லையற்ற அன்பின் திருநாளே!

         ஆதார் இல்லாத தெருவாசி சொன்னது :
         ஒருவேளை உணவாவது கிடைக்கும் நாள் ஒவ்வொன்றும்
         இந்தியத் தாயின் கண்ணீர் துடைக்கும் திருநாளே!

         கோ. மன்றவாணன்

தனிமையோடு பேசுங்கள்






             தனிமையோடு பேசுங்கள் என்றார் யோகி
             என்முகம் பார்த்து

             யாருமற்ற பெரும்பரப்பில்
             அமர்ந்திருக்கிறேன்
             அலைமோதும் கற்பாறை மீது

             வெளியேறிச் சென்று
             விசாரிக்கிறது மனது
             இறந்தவர்களையும் தோண்டியெடுத்து

             கற்சிலை முன் பேசப் பேசக்
             காது முளைத்துவிடுகிறது
             கருங்கல் சுவர்களுக்கும்

             நம்பி உள்ளத்தைத் திறக்க முடிவதில்லை
             நான்கு திசைகளிலும் வேடர்கள்

             எனக்குள்தான் அழுகிறேன்
             எட்டிப் பார்க்கிறார்கள் யார்யாரோ...

             தனிமை இதுவென்று உடல் நம்பினாலும்
             கூட்ட நெரிசல் மனம்முழுவதும்
             கூச்சல் இட்டபடி

             சவக்குழிக்குள்  என்னைப் புதைத்துக்கொண்டு
             மவுனமாகப் பேசுகிறேன்
             மண் அதிர்கிறது

             எதுவுமற்ற மனவெளியில் பேச
             எதிர்பட்ட காட்டுச்செடி கொடிகளை வெட்டி
             இவ்வளவு தொலைவு வந்துவிட்டேன்

             கண்டறிகிறேன்
             எல்லாம் உண்டு இந்த உலகில்
             தனிமையைத் தவிர 

             கோ. மன்றவாணன்




கொண்டாடப்படும் தினங்கள்






           விழிபிடித்து அழைத்துச்செல்லும்
           விறுவிறுப்பான புதினத்தின் பக்கங்கள்தாம்
           ஒவ்வொரு நாளும்

           பூமி மாற்றி உடுத்தும்
           புத்தாடைகள்தாம்
           பருவ காலங்கள் யாவும்

           புவி
           புதுப்பித்துக்கொள்கிறது
           நாள்குளியல் செய்து

           வெற்றியாளர்கள்
           மெருகேறி மின்னுகிறார்கள்
           ஒவ்வொரு நாளையும் அலங்காரம் செய்து

           தாயைப் பழித்தவனையும் மன்னித்துவிடு
           தப்பவிடாதே
           நாளைப் பழிக்கும் சோதிடத்தை

           வானவில் அழகெனவே
           வசீகரித்து வண்ணம் பூசுகின்றன
           வார நாட்கள்

           நேற்று என்பது ஒத்திகை
           இன்று என்பது அரங்கேறும் நாடகம்
           நாளை என்பது விருதுபெறும் வைபவம் 

           உன்னை நம்பி உழை
           எல்லா நாட்களும்
           கொண்டாட்ட தினங்கள்தாம்


           கோ. மன்றவாணன்



வஞ்சம் செய்வாரோடு...







             ஆனாலும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்
             வசீகர முகம்
             வஞ்சனைக்கு

             அது
             முகத்தோல் உரிக்கும்போது
             முழுவதும் நீலம் பாய்ந்திருக்கும் நம்வாழ்க்கை

             வஞ்சச் சோறு தின்றே தடித்திருக்கின்றன
             எந்த இதிகாசமும்
             எந்தக் காவியமும்

             உன்கையே வாள்தூக்கும்...
             உன்தலையை வெட்டி வீழ்த்தும்...
             வேடிக்கை பார்த்து
             வெற்றியைக் கொண்டாடும்
             விசை அழுத்திய வஞ்சம்

             அன்பெது வஞ்சமெது
             பிரித்தறிய ஒரு பறவையுமில்லை
             பெருவெளியில்

             யாரறிவார்
             ஆசி வழங்கும் துறவிக்கும்
             அந்தப்புரங்கள் உண்டு

             “வஞ்சனை செய்வாரோடு இணங்க வேண்டாம்”
             வா... புலவனே...
             வந்து அடையாளம் காட்டு!

             கோ. மன்றவாணன்