எங்கும் எதிலும் ஊழலப்பா
என்றும் நேர்மை வாழலப்பா
பொங்கும் பாலும் திரியுதப்பா
புனிதம் கருகி எரியுதப்பா
வாய்மை, பேச்சில் ஏதப்பா?
வாழ்க்கை முழுதும் சூதப்பா
தாய்மை கூடப் போலியப்பா
தர்மம் என்பது காலிடப்பா
கோவில் சொத்துப் பறிபோச்சு
கொலையும் களவும் உறவாச்சு
பாவம் செய்தல் நடப்பாச்சு
பாசம் கூட நடிப்பாச்சு
சட்டை மிடுக்கு வெள்ளையப்பா
சகல சொத்தும் கொள்ளையப்பா
பட்டை கொட்டை ஜொலிக்குதப்பா
பாலியல் சேட்டை கெலிக்குதப்பா
முகத்தில் சிரிப்புப் பொங்குதப்பா
முதுகில் கத்தி இறங்குதப்பா
அகத்தில் கரும்பேய் ஆடுதப்பா
அய்யோ... தெய்வம் வாடுதப்பா....
கோ. மன்றவாணன்