வாடகை ஏதும் கொடுக்காமலே
மாமரத்தில் குடியிருக்கும் அணில் சொன்னது
:
மாங்கனி பழுக்கும் ஒவ்வொரு நாளும்
மனதினிக்கும் திருநாளே!
நட்சத்திரக் கூட்டம் சொன்னது :
மேகம் மறைக்காத இரவு ஒவ்வொன்றும்
மின்னொளி வீசும் திருநாளே!
என்வீட்டு ரோஜா செடி சொன்னது :
எதிர்வீட்டு இளம்பெண் பூப்பறிக்கும் நாள்
ஒவ்வொன்றும்
காதல் தேசத்தை விலைபேசும் திருநாளே!
சுவரில் வரைந்த காந்தி ஓவியம்
சொன்னது :
தவறியும் தீங்கிழைக்காத நாள் ஒவ்வொன்றும்
மனித நேயத்துக்கு உயிரூட்டும் திருநாளே!
அழிவின் விளிம்பில் இருக்கும் மரம் சொன்னது
:
வெட்டக் கோடரி எடுத்து வராத நாள் ஒவ்வொன்றும்
பசுமை தீட்டும் திருநாளே!
நீதிமன்றத்தில் சிறைபட்ட காவிரி சொன்னது
:
என்னை என்போக்கில் விடும் நாள் ஒவ்வொன்றும்
எல்லையற்ற அன்பின் திருநாளே!
ஆதார் இல்லாத தெருவாசி சொன்னது :
ஒருவேளை உணவாவது கிடைக்கும் நாள் ஒவ்வொன்றும்
இந்தியத் தாயின் கண்ணீர் துடைக்கும் திருநாளே!
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment