Tuesday, 30 January 2018

நல்லதோர் வீணை



                          




           பூதத்திடம் கொடுத்துவிட்டுப்
           போனவர்
           திரும்பி வந்து பார்த்தார்
           மாறி இருந்தது
           நல்லதோர் வீணை
           நல்லதோர் விறகாய் நெருப்பில்

           நவீன
           நாரதரிடம் வந்து சேர்ந்தது
           நல்லதோர் வீணையொன்று
           கைவிரல் படாமலே ஒலிக்கிறது
           கலக ராகம்

           அடகு வைக்கப்பட்டது வீணை
           மீட்டவோ
           மீட்கவோ
           வரவில்லை ஏழைக் கலைஞன்

           அரசியல்வாதிக்கு
           அன்பளிப்பாகத் தரப்பட்ட
           வீணைக்குக் கோபம்
           தற்கொலை செய்துகொண்டது
           தரையில் விழுந்து

           கல்வி அமைச்சர் நடத்தும்
           கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்ட
           கலைமகள் சிலையின் கையில்
           பொன்முலாம்
           பூசப்பட்ட வீணை
           மாறி மாறி மாயாஜாலம் காட்டியது
           வாய்பிளக்கும் உண்டியலாய்


           குழந்தைகளுக்கான வீணைகளைச் செய்து
           கூடையில் வைத்துக்
           கூவிச் செல்கிறார் கிழவர்
           துப்பாக்கிப் பொம்மைகளை வைத்து
           சுடுகின்றன குழந்தைகள்
           கிழவரை நோக்கியே

             -கோ. மன்றவாணன்



No comments:

Post a Comment