Tuesday, 31 October 2017

தீ தின்ற உயிர்





         கம்பன் எழுதினான்
         கடன்பட்டார் நெஞ்சம்போல் என்று
         கந்துவட்டி இருந்திருக்கும் அன்று

         கந்துவட்டிக் காரர்களுக்கும்
         கார்பரேட் சூரர்களுக்கும்
         ஒரே முகம்
         ஒரே நகம்

         மீட்டர் வட்டிக் கடன் வாங்கியவர்கள்
         மீளவே வழியில்லை
         புதைகுழியில் விழுந்ததுபோல்
         புலிக்குகையில் நுழைந்ததுபோல்

         கந்துவட்டிக் காலடியில்
         கழுத்திறுகிக் கிடக்கிறது சமுதாயம்
         கல்வியும் மருத்துவமும்
         காசாகிப் போனதால்

         நிமிடம்தொறும் ஏறுகிறது வட்டி
         நீள்நாக விஷமென
         தீயே நீயும் சேர்ந்துகொண்டு
         தின்பதுவோ எம் மக்களை

         பற்றி எரிகின்றன
         பச்சிளம் குழந்தைகள்
         அழுதோடி வரவில்லை
         அந்த வருண பகவானும்


         தீயே
         தீபமாய் இருக்கும் போது
         கருணை தெரிகிறது உன் முகத்தில்

         தீயே
         சிறுகுழந்தைகளை எரிக்கின்ற போது
         மண்டையோட்டு மாலை தெரிகிறது உன் கழுத்தில்


         -கோ. மன்றவாணன் 

2 comments:

  1. "கந்துவட்டிக் காரர்களுக்கும்
    கார்பரேட் சூரர்களுக்கும்
    ஒரே முகம்
    ஒரே நகம்" உண்மை sir

    நிதானமாக கோவம் வெளிப்பட்டுள்ளது!!

    அருமை!!! அருமை!!

    "புதைகுழியில் விழுந்ததுபோல்
    புலிக்குகையில் நுழைந்ததுபோல்"

    ReplyDelete
  2. நன்றி மிகவும்

    ReplyDelete