Tuesday, 24 October 2017

வான(ண) வேடிக்கை





             சோகத்தை எரிக்கிறது
             வாண வேடிக்கை
             மவுனமாக நகரும் சவஊர்வலத்திலும்

             இருட்டைக் கீறித்
             தங்கப் புதையலைப் படம்பிடிக்கிறது
             சிவகாசி ஏவுகலம்

             ஒளிமழை பொழிகிறது வானம்
             சாமியின்
             ஊர்வலப் பாதையில்

             சிலநேரம் வானம் மயங்குகிறது
             சிவகாசியில்தான்
             நட்சத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று

             விழாக்கொண்டாட்டத்தை
             ஊருக்குச் சொல்கிறது
             வாண(ன) வேடிக்கை

             வானமும்
             வாணமும் சேர்ந்து காட்டும் வேடிக்கையைத்
             தூக்கம் மறந்து எட்டிப் பார்க்கின்றன
             தூக்கணாங்குருவிகளும்

             என்றாலும்
             சோகத்தோடே விடைபெறுகிறது
             ஒவ்வொரு தீபாவளியும்
             வெடிக்காத பட்டாசுகளைப் பொறுக்கி மருந்தெடுத்துப்
             பொட்டலம் கட்டித் திரிசெருகிப்
             புஸ்வாணம் விடும்
             ஏழைச் சிறுவர்களின் ஏக்கங்களைப் பார்த்து...!

            -கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment