Friday, 20 October 2017

நிசப்த வெளியில்







             குருதி சிந்தும்
             நெஞ்சப் பறவை அலைகிறது
             நிசப்தத்தின் வெளிதேடி

             போதி மரத்துக் கீழ் அமர்ந்த
             புத்தன் மனதைக் கலைத்துப் போட்டிருக்கும்
             கொடுவண்டுகளின் ரீங்காரம்

             துறவியின் சங்குக்குள்ளும்
             சுழன்று வருகிறது பேரிரைச்சல்

             தொலைதூரக் காட்டுக்குள் சென்றமர்ந்தேன்
             சருகுகளில் பாம்புகள் ஊர்ந்து போகும்
             சப்தங்கள்

             பாலைவனத்தின் நடுப்பகுதியில் அமர்ந்து
             தியானம் செய்தேன்
             மண்வாரி போட்டுச் சண்டைக்கூச்சல் போடுகிறது
             சுடுகாற்று

             மனிதர்களற்ற கோவிலுக்குப் போனேன்
             முகத்தை உரசிச் செல்கின்றன
             வவ்வால்கள்

             மரணம் மட்டுமே
             கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்னை
             நிசப்தத்தின் வெளிக்கு

-                                                           
               கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment