மற்றவரைத் துன்புறுத்தலில்
வண்ணக் கலவை பூசி
வாண வேடிக்கை நடத்துகிறது
சமூகம்
ஏழைகளுக்கான திட்டங்களைச் சுரண்டுவதால்
வறுமைக்கோடு கொழுத்து நெளிகிறது
மதநல்லிணக்கம்
மாலை போர்த்தப்பட்டுக் கிடக்கிறது
குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில்
முதலாளிகள் சேமிப்பில்
கறுப்பாகவே மாறுகின்றன
வெள்ளை ரோஜாக்களும்
சுதந்திர இந்தியாவில்
முகவரி இன்றிக் கிடப்பவர்களை
ஒருநிமிடம் நின்று பார்த்துப்
பெருமூச்சுவிட்டு நகர்கிறது
ஒவ்வொரு தொடர்வண்டியும்
உன்னை
ரூபாய்த் தாளில் அச்சடிக்கும் நாங்கள்
மறுத்துவிட்டோம்
மனதில் அச்சடிக்க
நேர்மையைப்
பித்தர் கூடத்தில் அடைத்துவைத்துக்
கேலி செய்கிறோம் கைகொட்டி!
உன்னிடம்
மாறவே மாறாத குணம்
மன்னிப்பதுதான்!
மன்னித்துக்கொண்டே இருக்கிறாய் எங்களை....
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment