Thursday, 12 October 2017

காந்திக்கு ஒரு கடிதம்






             மற்றவரைத் துன்புறுத்தலில்
             வண்ணக் கலவை பூசி
             வாண வேடிக்கை நடத்துகிறது
             சமூகம்

             ஏழைகளுக்கான திட்டங்களைச் சுரண்டுவதால்
             வறுமைக்கோடு கொழுத்து நெளிகிறது 

             மதநல்லிணக்கம்
             மாலை போர்த்தப்பட்டுக் கிடக்கிறது
             குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில்

             முதலாளிகள் சேமிப்பில்
             கறுப்பாகவே மாறுகின்றன
             வெள்ளை ரோஜாக்களும்

             சுதந்திர இந்தியாவில்
             முகவரி இன்றிக் கிடப்பவர்களை
             ஒருநிமிடம் நின்று பார்த்துப்
             பெருமூச்சுவிட்டு நகர்கிறது
             ஒவ்வொரு தொடர்வண்டியும்

             உன்னை
             ரூபாய்த் தாளில் அச்சடிக்கும் நாங்கள்
             மறுத்துவிட்டோம்
             மனதில் அச்சடிக்க 

             நேர்மையைப்
             பித்தர் கூடத்தில் அடைத்துவைத்துக்
             கேலி செய்கிறோம் கைகொட்டி!

             உன்னிடம்
             மாறவே மாறாத குணம்
             மன்னிப்பதுதான்!

             மன்னித்துக்கொண்டே இருக்கிறாய் எங்களை....


             -கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment