Monday, 18 September 2017

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்






                 சின்னக் கைகள்
                 காப்பாற்ற நீளுகின்றன
                 மழைநீர் உள்புகுந்து
                 கவிழத் தொடங்கும் காகிதக் கப்பலை!

                 அம்மா இட்ட
                 ஆடுமயில் கோலத்தைப் பார்த்துத்தான்
                 கருமேகம் திரளுதோ...
                 கனமழை இறங்குதோ...

                 மழை மறைத்த
                 மயில்கோலத் தடம்தேடி
                 அலைகிறது ஒரு பிஞ்சு மனது

                 குடைவிரித்து நிற்கிறது ஒரு குழந்தை
                 கொட்டும் நீரில் நடுநடுங்கும்
                 கோழிக்குஞ்சுக்கு

                 புத்தகப்பை நனையக் கூடாதெனப்
                 பொத்தி வைக்கிறாள் உரச் சாக்கில்
                 குடிசை வீட்டுச் சிறுமி 


                 காசுகளை உண்டியலில் போட்டுக்
                 கடவுளை வேண்டுகின்றன குழந்தைகள்...
                 கப்பலைக் கவிழ்க்காத
                 கோலத்தைக் கலைக்காத
                 குஞ்சுகளை நடுக்கிடாத
                 புத்தகத்தை நனைக்காத 
                 செல்ல மழையை அனுப்ப வேண்டி!

                 
                 -கோ. மன்றவாணன்


2 comments:

  1. "அம்மா இட்ட
    ஆடுமயில் கோலத்தைப் பார்த்துத்தான்
    கருமேகம் திரளுதோ...
    கனமழை இறங்குதோ..." சூப்பர்....

    ReplyDelete
  2. மிகவும் நன்றி

    ReplyDelete