முதியவர் ஒருவரை மோதித் தள்ளிவிட்டுச்
சீறிப்பாய்ந்து கூட்டத்தில் மறைந்தது
திமிர் இளைஞனின் இருசக்கர வாகனம்
பின்னால் வந்த வாகனம் எதுவும்
நிற்காமல் போயின
அவசர அவசரமாய்
இன்னும்
துடித்துக் கொண்டிருக்கிறார் முதியவர்
உண்டிவில் ஏவிய கல்பட்டு விழுந்தது
காக்கை ஒன்று
எங்கிருந்தெல்லாம் வந்த காக்கைகள்
இடைவிடாமல் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன
நீதிகேட்டோ உதவிகேட்டோ முழக்கங்கள்
சுற்றுலாப் பயணிகளை இறக்கிவிட்டுக்
காத்திருந்தது பேருந்து.
ஆளுக்கொரு திசை சென்றவர்களைத் தேடி
இழந்தனர்
நேரத்தையும் அமைதியையும்
அருகே
வாத்துக் கூட்டமொன்று கடந்து போனது
முன்சென்ற வாத்தைத் தொடர்ந்தபடியே...
தனக்கு எப்போது நல்ல காலம் வருமென
சாதகம் பார்க்கிறார்
வேலை தேடாத இளைஞர்
சீட்டெடுத்துக் கொடுக்கும் வேலையைச்
செய்துவிட்டே
நெல்மணியைக் கொரிக்கின்றன உழைக்கும் கிளிகள்
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment