Tuesday, 26 September 2017

பறவையின் மனசு







             முதியவர் ஒருவரை மோதித் தள்ளிவிட்டுச்
             சீறிப்பாய்ந்து கூட்டத்தில் மறைந்தது
             திமிர் இளைஞனின் இருசக்கர வாகனம்

             பின்னால் வந்த வாகனம் எதுவும்
             நிற்காமல் போயின
             அவசர அவசரமாய்

             இன்னும்
             துடித்துக் கொண்டிருக்கிறார் முதியவர்


             உண்டிவில் ஏவிய கல்பட்டு விழுந்தது
             காக்கை ஒன்று
             எங்கிருந்தெல்லாம் வந்த காக்கைகள்
             இடைவிடாமல் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன
             நீதிகேட்டோ உதவிகேட்டோ முழக்கங்கள்


             சுற்றுலாப் பயணிகளை இறக்கிவிட்டுக்
             காத்திருந்தது பேருந்து.
             ஆளுக்கொரு திசை சென்றவர்களைத் தேடி
             இழந்தனர்
             நேரத்தையும் அமைதியையும்

             அருகே
             வாத்துக் கூட்டமொன்று கடந்து போனது
             முன்சென்ற வாத்தைத் தொடர்ந்தபடியே...


             தனக்கு எப்போது நல்ல காலம் வருமென
             சாதகம் பார்க்கிறார்
             வேலை தேடாத இளைஞர்

             சீட்டெடுத்துக் கொடுக்கும் வேலையைச்
             செய்துவிட்டே
             நெல்மணியைக் கொரிக்கின்றன உழைக்கும் கிளிகள்


             -கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment