Tuesday, 8 August 2017

காற்றுக்கு இப்போதாவது ஞானம் வருமா....


      


               சிலநொடிகள் முன்வரை
               தீக்கிரையாக்கியது ஊரை
               வெயில்

               எங்கே பதுங்கியிருந்து
               கொரில்லா தாக்குதல் நடத்தின
               இந்த இருட்டு மேகங்கள்

               கல்கரைத்த மழையும்
               காது கிழித்த இடியும்
               நடுங்க நடுங்க வைத்தன
               நம்மை மட்டுமல்ல
               கான்கிரீட் கட்டடங்களையும் 

               தேநீர்க் கடையின் வாசலில்தான்
               நின்றுகொண்டிருந்தேன்
               தகரக் கூரை பறந்தது தெரிந்தது
               எங்கே தொற்றியது
               எங்கே விழுந்தது தெரியவில்லை

               பஸ்ஓடும் பாதையைப்
               படகுஓடும் நதியாக
               மாற்றிவிட்டது
               மழை

               பெருங்கூச்சலோடு
               பேய்த்தாண்டவம் ஆடிய
               காற்றின் கொடுங்கைகளில்
               மாய அறுவாள்கள் இருந்திருக்குமோ...

               சற்று நேரத்தில்
               போர்க்களத்தில் விழுந்த
               மாவீரர்கள் போலச் சாய்ந்தன
               மரங்கள் யாவும்

               காற்றுக்கு இப்போதாவது ஞானம் வருமா....
               கலிங்கப் போரில் மடிந்த வீரர்களைப் பார்த்துக்
               கண்ணீர்விட்ட அசோகன் போல!

               -கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment