Thursday, 27 April 2017

சூரிய தாகம்


                                       சூரிய தாகம்




            
Image result for sun

       
                தூரத்தில் இருந்தபடியே
                சூரியன் நாவு
                எங்களூர்
                குளத்து நீரைக்
                குடித்துவிட்டது
                மாயக் குழாய்போட்டு.

                இப்படியே போனால்
                கடல்
                திடல் ஆகும்

                நம்
                ஒவ்வொருவருக்குள்ளும்
                சுட்டுக்கொண்டிருக்கிறது
                குட்டிச் சூரியன் ஒன்று

                அதன்தாகம் தணிக்க
                தீரா நதியொன்று தேவை

                வேட்கை தீர்க்காது பூந்தேன் என்று
                சிற்றோடை தேடிச் சோர்கிறது
                பட்டாம்பூச்சிக் கூட்டம்

                சூரியனின் எச்சில் பட்டிருக்குமோ...
                இளநீர்க்குள்ளும்
                சுடுநீரே!


                வெய்யில் போர்த்திய என் பகலில்
                உப்பளங்களும்
                கொப்பளங்களும்

                நெருப்புலை எதற்கு?
                கத்தி செய்ய
                கத்திரி வெய்யில் போதும்

                இந்த
                வெய்யில் பூமிக்கு முகம்காட்ட
                நிலவும் அஞ்சுகிறதாம்
                அதன்
                அழகிய முகத்திலும்
                அம்மைப்புண் வந்துவிடுமோ என்று!

                தாகம் தீர்க்காத
                வியர்வைக் கசிவு மட்டுமே
                சூரியனின் மாற்றீடு

-                                                                                                                            கோ. மன்றவாணன்




Tuesday, 18 April 2017

கைகோர்ப்போம்




        கை கோர்ப்போம்



உதிரிப் பூக்களை
ஒன்று சேர்த்தால்
மாலை 

நட்சத்திரங்களைக்
கூட்டமாகப் பார்த்தால்
ஒளிமாநாடு

வெட்டுக் கத்திகளாக இல்லாமல்
ஒட்டுப் பசையாக மாறட்டும்
குடும்ப நீதிமன்றங்கள்

பிரிந்து வேண்டினால்
திரும்பிக் கொள்வான்
உன் தேவனும்.

கைகோர்த்து நின்றால்
தோற்றுத் திரும்பும்
சுனாமியும்

முகம்பார்க்க வைப்போம்
நவகிரகங்களை

மொழி,இனம்,மதம்,நாடு
தாண்டி வந்து
மனம்கோர்த்து ஆடுவோம்!



-    கோ. மன்றவாணன்

Sunday, 16 April 2017

பச்சை நிலம்



                 பச்சை நிலம்

                         Image result for dead tree painting
          

                  சோறு தண்ணீர் இல்லாமல்
                  சோர்ந்திருக்கும்
                  நூறு வயது கிழவியின்

                  தளருடல் முழுவதும்
                  தோல்வறண்டு
                  ரேகைகள் நெளிவதுபோல்

                  வெடித்து மல்லாந்து கிடக்கிறது
                  வயல்வெளி !

                  பசும்புல் தேடி
                  ஏமாந்து திரும்பும்
                  எங்களூர் மாடுகள்
                  காகிதம் தின்னக்
                  கற்றுக்கொண்டன.

                  பச்சைப் புற்களையும்
                  பசும் மூங்கில்களையும்
                  ஞெகிழியில் செய்து
                  வீட்டுக்குள் தோட்டமிட்டு
                  விழிகளை ஏய்க்கிறார்கள்.

                  இனி
                  ஓவியத்தில் மட்டுமே
                  பார்க்க முடியுமாம்
                  பச்சை நிலத்தை.

                  முன்னறி ஞானம்கொண்ட எங்கள்
                  முன்னோர்கள்
                  காகிதத்தில் செய்த
                  மாவிலைத் தோரணத்தைக்
                  கண்டுபிடித்துவிட்டார்கள்
                  கடந்த நூற்றாண்டில்

                  மெழுகுத் தாளில் தயாரித்த
                  வாழை இலையில்
                  மணவிருந்து பரிமாறுகிறோம் நாம்
                  இந்த
                  நூற்றாண்டில்

                  நாளைய
                  சருகு தேசத்தில்
                  பச்சை நிலம்காண முடியும்
                  என்கிறார் உளமருத்துவர்,
                  மாயக்காட்சி காணும்
                  மனப்பிறழ்வு நோயிருந்தால்


-                                                                                           -கோ. மன்றவாணன்

Friday, 7 April 2017

நிழலைத் தேடி




           நிழலைத் தேடி


 Image result for man cuts tree

           
           சூரியப் பார்வை
           துழாவ முடியாத
           இருள்நிழல் காடுகள் இருந்தன
           என் பாட்டி காலத்திலும்.

           குறிஞ்சி, முல்லை, மருத நிலங்களையும்
           பாலையாக்கியதில்
           சுடுசூரியனுடன் கூட்டணி சேர்ந்து
           கோடரி தூக்கியது நம் சமூகம்

           மனை வணிகத்தின்
           பணத்தொந்தி பெருத்துக்கிடக்கிறது
           நிழலை விழுங்கி ஏப்பம் விட்டதில்

           அரிதாய்ப் பெய்யும்
           மழையைப் படம்பிடித்து வையுங்கள்
           அடுத்த தலைமுறைக்கு
           அடையாளம் காட்ட!

           மரத்தை வெட்டி
           மழையை விரட்டிய நமக்கு
           நியாயம் ஒருபோதும் இல்லை
           நிழலைத் தேட!

           மரக்கன்று நட்டுப் படம்எடுத்துக்கொண்டார்
           மந்திரி
           அடுத்த கிராமத்தில் மரம்நடு நிகழ்வுக்காக
           அதைப்பிடுங்கிப் போனார்
           உடன்வந்த அரசு ஊழியர்

           அரசமரம்
           ஆலமரம் பந்தல்விரித்து இருந்தன
           அந்தக்கால ரயில்நிலையங்களில்

           இன்று
           உருகி வழியத் தயார்நிலையில் உள்ளன
           ரயில்நிலையக் கூரைகள்

           நதியின் சமாதியில் எழுப்பிய
           கான்கிரிட் கட்டடத்துக்குள் பொங்குகிறது
           வியர்வை நதி

           இனி, கனவிலும் வராது
           நீ செல்லும் இடமெல்லாம்
           குடைபிடித்த மரம்



     --கோ. மன்றவாணன்





ஆறோடும் நீரோடும்






    ஆறோடும் நீரோடும்

 Image result for river


     ஒவ்வொரு நூற்றாண்டும்
     ஒருசில ஆறுகளைக்
     காவு வாங்கிக்
     கடந்து போகின்றது

     இதே நூற்றாண்டில் ஓடிய
     எங்களூர் ஓடையைக்
     காணவில்லை
     அது
     எம்எல்ஏ வீட்டுக் கருவூலத்தில்
     பணக்கட்டுகளாக மாறிப்
     பதுங்கிக் கிடக்கிறதாம்.

     அன்று
     நாகரிகங்கள் வளர்ந்ததெல்லாம்
     நதிக்கரையில்தான்

     இன்று
     நாகரிக வளர்ச்சியில்
     நதிகள் கரைந்துபோய்விட்டன

     நம் தாத்தா இறந்தபோது
     நதிக்கரையில் காரியம் செய்தோம்
     நாம் இறக்கும் முன்னமே
     நதிக்கே காரியம் செய்கிறோம்

     தீர்த்தவாரிக்குச்
     சாமிகளை வரவழைத்துத்
     திருப்பி அனுப்புகிறார்கள் ஏமாற்றி

     நதிநடந்த பாதையைத் தேடி
     நாளை அகழ்வாராய்ச்சி
     நடத்திக்
     கான்கிரீட் குப்பைகளை
     அள்ளலாம்

     ஆறோடுவதையும்
     நீரோடுவதையும்
     காணக்
     கரிகாலன் காலத்தை உயிர்ப்பித்துக்கொடு சாமீ...


-                                                               கோ. மன்றவாணன்