Friday, 7 April 2017

ஆறோடும் நீரோடும்






    ஆறோடும் நீரோடும்

 Image result for river


     ஒவ்வொரு நூற்றாண்டும்
     ஒருசில ஆறுகளைக்
     காவு வாங்கிக்
     கடந்து போகின்றது

     இதே நூற்றாண்டில் ஓடிய
     எங்களூர் ஓடையைக்
     காணவில்லை
     அது
     எம்எல்ஏ வீட்டுக் கருவூலத்தில்
     பணக்கட்டுகளாக மாறிப்
     பதுங்கிக் கிடக்கிறதாம்.

     அன்று
     நாகரிகங்கள் வளர்ந்ததெல்லாம்
     நதிக்கரையில்தான்

     இன்று
     நாகரிக வளர்ச்சியில்
     நதிகள் கரைந்துபோய்விட்டன

     நம் தாத்தா இறந்தபோது
     நதிக்கரையில் காரியம் செய்தோம்
     நாம் இறக்கும் முன்னமே
     நதிக்கே காரியம் செய்கிறோம்

     தீர்த்தவாரிக்குச்
     சாமிகளை வரவழைத்துத்
     திருப்பி அனுப்புகிறார்கள் ஏமாற்றி

     நதிநடந்த பாதையைத் தேடி
     நாளை அகழ்வாராய்ச்சி
     நடத்திக்
     கான்கிரீட் குப்பைகளை
     அள்ளலாம்

     ஆறோடுவதையும்
     நீரோடுவதையும்
     காணக்
     கரிகாலன் காலத்தை உயிர்ப்பித்துக்கொடு சாமீ...


-                                                               கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment