எதிர்காலம்?
எதிர்காலம் சிறக்க வேண்டி
ஏங்குவோர் இங்கே உண்டு;
புதிர்காலம் என்றே ஆகிப்
போகுமோ காலம் யாவும்?
எதிர்காலம் என்று சொன்னால்
எதிர்க்கின்ற காலம் ஆமோ?
கதிர்காலம் உதிக்க வேண்டும்
கவலையாம் இருளை நீக்க!
தும்பிக்கை இல்லை என்றால்
தொடராது யானை வாழ்க்கை
நம்பிக்கை இல்லை என்றால்
நகராது மனித வாழ்க்கை
அம்பினைப் பாய்ச்ச வேண்டாம்
அன்பினைப் பாய்ச்ச வேண்டும்
தெம்பினை மனதில் வைத்துத்
தேடுநீ பொன்னைக் காண்பாய்
நேற்றெல்லாம் மாறிப் போகும்
நேர்மையே உயர்த்தும் உன்னை
காற்றெல்லாம் மலர் கொணர்ந்து
காலடி வைத்துப் போற்றும்
ஊற்றெல்லாம் இளநீர் ஆகும்
ஊரெல்லாம் உன்னைத் தாங்கும்
மாற்றெல்லாம் யார் உனக்கு?
மணிமுடி தேர் உனக்கு!
உனக்கெனக் காலம் உண்டு
உழுதுவை உனது மண்ணை
தனக்கென வாழ்தல் இன்றித்
தலைவனாய் உழைத்து வாழ்வாய்
ஜாதகம் மாற்றிப் போட்டு
சாதகம் ஆக்கி வெல்வாய்
சாதனை உனக்கே சொந்தம்
சத்தியம் செய்கின் றேன்நான்!
-
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment