Tuesday, 28 March 2017

அரியாசனம்



            
            அரியாசனம்


           உரியினை இழக்கப் பானை
                ஒப்பாது ; ஆனால் அந்நாள்
           அரியணை துறந்தார் புத்தர்
                ஆரண்யம் சென்றார் ராமர்
           எரியினை மூட்டப் போனார்
                எம்அரிச் சந்தி ரன்தான்
           சரியென இவர்கள் போல
                சமுகத்தில் யார்தான் உள்ளார்?


           அரியினைக் கடத்தி விட்டே
                ஆலயம் தொழுவார் உண்டு
           திரியினை அவித்தே இங்குத்
                தீபத்தைத் திருடு வார்கள்
           பெரியதோர் பதவி என்றால்
                பிழைசெய்து பெறுவார் உண்டு
           அரியதோர் அறத்தைப் பேணி
                ஆளவே யார்தான் உண்டு?


           அறியா சனங்கள் ஏராளம் ;
                அதனால் வளரும் பேரவலம்!
           அரியா சனங்கள் செருக்கோடு ;
                அறமோ கண்ணீர்ப் பெருக்கோடு!
           அறிவு சனங்கள் வருகையில்
                ஆட்சி அறங்கள் மேலோங்கும்
           அரிய மனங்கள் கொண்டவர்கள்
                ஆட்சி செய்ய வரவேண்டும்


                             - கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment