Thursday, 2 February 2017


சட்டம்

சமிஞ்ஞை தூணில்
சிவப்பு விளக்கு ஒளிர்கையில்
மீறியும்
சீறியும் பாய்கின்றன வாகனங்கள்

காவலர்
கள்வரோடு கைகோத்து
மது அருந்துகிறார்

அரசு அலுவலகங்களில்
நெஞ்சம் நிமிர்கிறார்கள்
லஞ்சம் வாங்கி

அரசியல்வாதி வீட்டு மாடும்
தெருக்கடையில் நுழைந்து
தின்று கொழுக்கிறது

ஞெகிழிப் பூக்களில்
செயற்கை மணம்தடவி
நந்தவனப் பூக்களிடமே விற்கிறார்கள்

பல்கலைக் கழகங்கள்
நகலகங்கள் ஆகிவிட்டன
ஆராய்ச்சிப் படிப்புகளைத்
தொடங்கி

கரும்பணத்திலும்
கள்ளப்பணத்திலும்
இருள்கிறது நம்நாடு

சட்டத்தை மீறியே
வெற்றி பெறுவது
அறிவார்ந்த வழக்கறிஞரின் நவீன அறம்

எங்கள் நீதிமன்றங்களில்
இருந்து
எப்போதோ வெளியேறிவிட்டாள் நீதி தேவதை

பழைய பேப்பர் கடையிலும்
வாங்குவதில்லை
சட்டப் புத்ககங்களை

எப்படி நட்டாலும்
பணக்காரர் வீட்டுத் தோட்டத்தில்
சாய்ந்து
காய் உதிர்க்கிறது முடத்தெங்கு சட்டம்

நேர்மை இல்லாத நாட்டில்
சட்டத்தை மதிப்பது
குற்றம்

மதுக்கடையில் யாரேனும்
பால் குடிப்பார்களா?

- கோ. மன்றவாணன்




No comments:

Post a Comment