சட்டம்
சமிஞ்ஞை தூணில்
சிவப்பு விளக்கு ஒளிர்கையில்
மீறியும்
சீறியும் பாய்கின்றன வாகனங்கள்
காவலர்
கள்வரோடு கைகோத்து
மது அருந்துகிறார்
அரசு அலுவலகங்களில்
நெஞ்சம் நிமிர்கிறார்கள்
லஞ்சம் வாங்கி
அரசியல்வாதி வீட்டு மாடும்
தெருக்கடையில் நுழைந்து
தின்று கொழுக்கிறது
ஞெகிழிப் பூக்களில்
செயற்கை மணம்தடவி
நந்தவனப் பூக்களிடமே விற்கிறார்கள்
பல்கலைக் கழகங்கள்
நகலகங்கள் ஆகிவிட்டன
ஆராய்ச்சிப் படிப்புகளைத்
தொடங்கி
கரும்பணத்திலும்
கள்ளப்பணத்திலும்
இருள்கிறது நம்நாடு
சட்டத்தை மீறியே
வெற்றி பெறுவது
அறிவார்ந்த வழக்கறிஞரின் நவீன அறம்
எங்கள் நீதிமன்றங்களில்
இருந்து
எப்போதோ வெளியேறிவிட்டாள் நீதி தேவதை
பழைய பேப்பர் கடையிலும்
வாங்குவதில்லை
சட்டப் புத்ககங்களை
எப்படி நட்டாலும்
பணக்காரர் வீட்டுத் தோட்டத்தில்
சாய்ந்து
காய் உதிர்க்கிறது முடத்தெங்கு சட்டம்
நேர்மை இல்லாத நாட்டில்
சட்டத்தை மதிப்பது
குற்றம்
மதுக்கடையில் யாரேனும்
பால் குடிப்பார்களா?
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment