நீதியைத் தேடி…
அடர்இருளில்
கண்ணைக் கட்டிக்கொண்டு
கறுப்புப்பூனையைத் தேடுகிறோம்
கரைதேடி
நடுக்கடலில்
விழிவலை வீசுகிறோம்
எப்போதோ
எங்கேயோ
கடல்மணலில் விழுந்து புதைந்துவிட்ட
குண்டூசியை
மீன்வலையில் சலித்துத் தேடுகிறோம்
அறம்தவறிய சமுதாயத்தில்
நீதியைத் தேடி
நீண்ட பயணம் செய்கையில்
பாதையே
களவு போய்விடுகிறது
இன்று
வள்ளுவன் வந்தாலும்
‘பொருளில்’ மயங்கி
மாற்றி எழுதிவிடுவான்
திருக்குறளை
அரிச்சந்திரன் வந்தாலும்
கையிருப்பு சாட்சியாக மாறி
நீதிமன்றத்தில்
நித்தமும் பொய்சாட்சி சொல்வான்
நெற்றிக்கண் திறந்து
கடவுளே வந்து
சாட்சிக்கூண்டு ஏறினாலும்
அரசியல்வாதிகளின்
அதிகாரக்கண் திறப்பைத் தாங்காமல்
பிறழ்சாட்சி ஆகிப்
பிழைத்துக்கொள்வார்
நீதியைத் தேடி அலையும்
அப்பாவிகள் யாராவது இருந்தால்….
அவர்கள்
கற்பனையில் மீன்பிடித்து
ஊருக்குப் பந்தி வைப்பவர்கள்
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment