எனை நனைத்த
மழை
தூவும் மழையில்
கருங்குடை பிடித்து நடைபின்னிய
கன்னியிடம்
மழை கேட்டது :
“எனக்கேன்
கறுப்புக்கொடி காட்டுகிறாய்?”
மழையுடை தரித்து
வாகனத்தில் சீறிய
காளையிடம்
மழை கேட்டது :
“கவச உடை நீங்கள் அணிவதற்கு
நானென்ன
கத்திவீச்சா செய்கிறேன்?”
நனைய மறுத்துக்
கடை ஓரத்தில்
ஒதுங்கி நின்றோர் இடத்தில்
மழை
கேட்டது :
“நானென்ன
தீண்டத் தகாத பட்டியலில் அடைக்கப்பட்டேனா?
தீட்டான பெண்ணாகப் படைக்கப்பட்டேனா?”
வெளியில் வராமல்
வீட்டுக்குள் பதுங்கிய
மன்னர்குல திலகங்களைப் பார்த்து
மழை
கேட்டது :
“நீங்கள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்க
நான் என்ன
அந்நியப் படையெடுப்பா நடத்துகிறேன்?”
இப்படி
வெறுத்தொதுக்கும் மானிடரைக் கண்டு
தற்கொலைக்கு முயன்ற
மழையைப் பார்த்து
மண்
சொன்னது :
“உலகுக்கே படியளக்கும் நான்
உயிர்அமுதம் சேகரிக்கிறேன்
மழையில் நனையும்போதுதான் !”
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment