Friday, 10 February 2017

எனை நனைத்த மழை


எனை நனைத்த மழை

தூவும் மழையில்
கருங்குடை பிடித்து நடைபின்னிய
கன்னியிடம் மழை கேட்டது :
“எனக்கேன்
கறுப்புக்கொடி காட்டுகிறாய்?”

மழையுடை தரித்து
வாகனத்தில் சீறிய
காளையிடம் மழை கேட்டது :
“கவச உடை நீங்கள் அணிவதற்கு
நானென்ன
கத்திவீச்சா செய்கிறேன்?”

நனைய மறுத்துக்
கடை ஓரத்தில்
ஒதுங்கி நின்றோர் இடத்தில்
மழை கேட்டது :
“நானென்ன
தீண்டத் தகாத பட்டியலில் அடைக்கப்பட்டேனா?
தீட்டான பெண்ணாகப் படைக்கப்பட்டேனா?”

வெளியில் வராமல்
வீட்டுக்குள் பதுங்கிய
மன்னர்குல திலகங்களைப் பார்த்து
மழை கேட்டது :

“நீங்கள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்க
நான் என்ன
அந்நியப் படையெடுப்பா நடத்துகிறேன்?”

இப்படி
வெறுத்தொதுக்கும் மானிடரைக் கண்டு
தற்கொலைக்கு முயன்ற
மழையைப் பார்த்து
மண் சொன்னது :
“உலகுக்கே படியளக்கும் நான்
உயிர்அமுதம் சேகரிக்கிறேன்
மழையில் நனையும்போதுதான் !”

- கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment