திருமணம்
§ ஊரார்
திருமணங்களில்
ஓரமாக உட்கார்ந்திருக்கிறார்கள்…
வயது தாண்டியும்
வாலிபம் தாண்டியும் வாழும்
முதிர்கன்னிகள்!
§ வெளியில்
விழும் எச்சிலைகளின்
மிச்சம்
மீதிகளின் சுவையுணர
மண்டபத்தின் பின்புறம்
அழுக்குடை
இந்தியா்கள்.
§ சிலரின்
ஆடம்பர
அழைப்பிதழ்ச் செலவில்…
திருமணங்கள் ஆயிரம்
திருப்தியாய் நடத்தலாம்
என்று
எண்ணுகின்றன
ஏழை மனதுகள்!
§ ஒருநாள்
உடுத்தும் பட்டுச்சேலைக்கு
இலட்சங்கள் செலவாகின்றன.
§ மணமேடையில்
மட்டுமே உடுத்தும்
மேல்நாட்டு
வடநாட்டு உடைகளுக்கு
பல்லாயிரம் ரூபாய்
பற்றவில்லையாம்.
§ நகைக்கடை
நடந்து வருவதுபோல்
புன்னகை மணமகளின்
பொன்னகை அலங்காரம்
§ இப்போதெல்லாம்
மணமகள் அலங்காரத்தைவிட
மண்டப அலங்காரத்துக்குச்
செலவழிக்கும்
செழிப்பைக் காணுகையில்
குபேர கருவூலத்தைக்
கொள்ளை அடித்திருப்பார்களோ…
§ பெற்றோரைக்
கடனில்
கண்ணீரில் மூழ்கடிக்காமல்
எளிய திருமண விழாக்கள்
இனி வேண்டும்!
இனிதாக வேண்டும்!
§ திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச்
சொல்வது பொய்.
திருமணம்
ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுவது
என்பது வணிகம்
திருமணம்
இதயத்தில் நிச்சயிக்கப்படுவது
என்பதே நியாயம்.
§ வெற்று
ஆடம்பரங்களை
வெளி அலங்காரங்களை
விலக்கி-
அன்பால்
பண்பால்
இதயங்களை அலங்கரியுங்கள்!
அப்போது…
உலக அழகெல்லாம்
உங்களை ஆராதிக்கும்!
-கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment