Saturday, 17 September 2016


மனித நேயம்




தேசத்துக்கு
எல்லைக்கோடுகள் உண்டு – 
மனிதநேசத்துக்கு
எல்லைக்கோடுகள் இல்லை!
மனித நேயக் கண்களுக்குப்
மாறுபாடுகள் பாகுபாடுகள் எதுவும்தெரியாது! 

கருணை என்னும்
செடியில் மட்டுமே மலர்கின்றன
மனித நேயப் பூக்கள்

மழைவெள்ளத்தால்
மடியும் மக்களுக்கு உதவ
வெளிமாநிலங்களில் இருந்து
நிவாரண பொருட்களைக்
கொண்டுவந்த
கொடையுள்ளங்களைப் போற்றுதும்…
அதே நேரம்
நிவாரணப் பொருட்களை
நிறைத்துவந்த வாகனங்களை
வழிமறித்து
வழிப்பறி செய்த
கவுன்சிலர்களை-
கட்சிக்காரர்களை….? 

அம்மா வாங்கித்தந்த
அழகான உண்டியலில்
பணம்சேர்த்து வந்த
பத்துவயது சிறுமி


அதை
மொத்தமாக எடுத்துவந்து
நிவாரண உதவிக்குத் தந்த
நெஞ்சத்தைப் போற்றுதும்!

அதே நேரம்
அடுக்கடுக்காய் வந்த
நிவாரணப் பொருட்களை
கடைகளுக்கு மடைமாற்றம் செய்து
காசுபார்த்த அதிகாரிகளை…..?

உதவிகள்
உரிய மக்களைச் சேரவிடாமல்
பதவிகள் உள்ளவர்கள்
பலம் உள்ளவர்கள்
பறித்துப் பதுக்குவதைப் பார்க்கும்போது…

மனித நேயமும்
மயங்கிக் கிடக்கிறது
குற்றுயிரும்
குலையுயிருமாய்…
கொடியவர்களின்
கோரத் தாண்டவத்தால்…!

மனிதனை
மதிப்பதற்கு ஓர் அளவுகோல் உண்டு;
அது
மனித நேயம்தான்!

மனிதன் என்பவன்
மனித நேயம் உள்ளவனே…
மற்றெல்லாரும்
மனிதப் போலிகளே!

- கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment