Thursday, 29 September 2016



துணையாய்த் தொடரும் நிழல்கள்




பள்ளிக்குச் செல்லும்
பாதையில்
பாதாம் மரத்தில் கல்வீசி
பருப்பு சாப்பிடும் மாணவர்களோடு
உறவு முடிச்சுப் போட்டதில்லை
ஒருபோதும்

அடுத்த மாணவனின்
அழிரப்பரைத் திருடியதில்லை
என்
திறந்த கைகள்

இன்னொரு மாணவனின்
சிலேட்டைச்
சேதப்படுத்திவிட்டு
வேறு பக்கம் திரும்பி
வேடிக்கை பார்த்ததில்லை
என்முகம்

அடி வாங்குவதில் இருந்து தப்பிக்க
ஆசிரியையிடம் சொன்னதில்லை
பொய்

ஆசிரியரே
கண்சாடை காட்டியும்
காப்பி அடித்ததில்லை
செங்கோல் எனச்
செம்மாந்து திகழும்
என் எழுதுகோல்


சுற்றிலும்
புது மேகக் கூட்டத்தை உருவாக்கும்
புகை நண்பர்கள் இருந்தும்
என்
உதடுகள் கற்பிழக்கவில்லை

என் நா சிகரத்தை எட்டித் தொட
எந்தக் கெட்ட வார்த்தைக்கும்
கால்கள் முளைப்பதில்லை

என்
சிந்தைக்குள் நுழைய முடியாமல்
பின்வாங்கிச் சென்றது
மதுவின் வாசனை

என்னை
அடிமைப் படுத்த முடியாமல்
தோற்றுப் போயின
ரூபாய்க் கட்டுகள்

ஊழலையோ பிழைகளையோ
நெருங்க விடுவதில்லை
என்
நேர்மைத்தீ

இப்படி
என்னைக் காத்துத்                     
துணையாய்த் தொடரும் நிழல்கள்எனத்
தொடர்ந்து வருவன….
என்தாய் பாலோடு சேர்த்துப் புகட்டிய
நீதி நெறிகள்!    

- கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment