நீர்நிரப்பிய காலத்தை என்றோ மறந்துபோய்
சூரியத்தீயில்
கரிந்துகொண்டிருக்கிறது தீயணைப்பு வண்டியொன்று
ஏரிகாக்கும் ராமருக்கு வேலை பறிபோய்க்
கரிகாக்கும் ராமர் வேலைக்கு
விண்ணப்பம் எழுதிக்கொண்டிருக்கிறார்
மண்ணில் விழும்முன்னே மழைத்துளியைப் பருகிவிடும்
சக்கரவாகப் பறவைகள்
கூவம் ஓடிய தடம்தேடிக் கொத்துகின்றன
ஆறில்லாத சென்னை மாநகரம் நேற்று
நீரில்லாத சென்னை மாநகரம் இன்று
ஆளில்லாத சென்னை மாநகரம் நாளை
கூட்டமாய் வரும் மேகங்களைக் காணாமல்
கொப்பளித்துக் கிடக்கிறது வானம்
கண்ணீரைக் குடிக்கவும்
தயாராகிவிட்டன வறண்ட நாவுகள்
கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment