மகளே....
எம் உயிரில் துளிர்த்து
எம் உயிராய் நிலைத்து
எம்மை வாழ வைக்கும் உயிர்சுரபி நீ
உன்னை உயர்த்தி
உயரவே
ஒவ்வொரு நாளும் மனதுக்குள்
தியான சாலை அமைத்துத்
தினம்தினம் வேண்டுகிறோம்
உன் காலில் மலர்குத்திய போது
வாள் இறங்கியது
எமக்குள்
நீ முதல்மதிப்பெண் பெற்றபோது
நிலவு இறங்கிவந்து
பொன்னொளிர் மகுடம் ஆனது
எம் தலையில்
வாழ்க்கைப் பாதையில்
வசீகரம் காட்டி
விஷக்கொடிகள் வளைக்கப் பார்க்கலாம்.
அழகாகவே ஆடம்பரமாகவே வருவார்கள்
மாரீசன்கள்
உன்மனது
சக்கரவாகப் பறவையாய்த்
தூயதையே அருந்தி நிரம்ப வேண்டும்
கல்வியை விடவும் மேலானது
கடவுளை விடவும் உயர்வானது
ஒழுக்கம்
வானைத் தாண்டிப் பயணிக்கலாம்
வாழ்த்த வரும் அறிவுலகம்
ஒழுக்கம் தாண்டி ஓரடி வைத்தாலும்
போய்ச்சேரும் இடம்
புதைகுழி
எம் காதுகளுக்குள் பண்பினள் இவளென
எந்நேரமும் அமுதிசை கேட்கவே
வரம்தர வேண்டும் நீதான்.
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment