தேநீர்ப் பொழுதுகள் இல்லையென்றால்
சுவைப்பதே இல்லை வாழ்க்கை
காலியாக இருக்கும்
கண்ணாடிக் கோப்பையும்
தேநீரால் நிரம்ப வேண்டுமென்றே
தேவனை வேண்டுகிறது
செய்யும் வேலையிலிருந்து
சிறிது விலகித்
தோழமைகளோடு தேநீர்ச்
சுவைக்கவில்லை என்றால்...
மனமடங்க
மாத்திரை கேட்டு
மருத்துவமனைக்கு ஊர்வலம் போயிருப்போம்.
எந்த இலக்கிய நிகழ்வும்
சச்சரவு இல்லாமல் முடிந்ததில்லை
தேநீர் இல்லாமல் நடந்ததில்லை
எங்கள்
எழுத்தாளர்கள் முன்
ஞானபீடத் தகட்டையும்
தேநீர்க் கோப்பையும் வைத்தால்
மொத்தக் கூட்டமும்
மொய்க்கும் தேநீர்க் கோப்பையைச் சுற்றி.
இந்தக் கவிதையைப் பிறகு முடிக்கிறேன்
இப்போது
எனக்குத் தேநீர்ப் பொழுது.
-கோ. மன்றவாணன்