Thursday, 31 January 2019

தேநீர்ப் பொழுதுகள்


























தேநீர்ப் பொழுதுகள் இல்லையென்றால்
சுவைப்பதே இல்லை வாழ்க்கை

காலியாக இருக்கும்
கண்ணாடிக் கோப்பையும்
தேநீரால் நிரம்ப வேண்டுமென்றே
தேவனை வேண்டுகிறது

செய்யும் வேலையிலிருந்து
சிறிது விலகித்
தோழமைகளோடு தேநீர்ச்
சுவைக்கவில்லை என்றால்...
மனமடங்க
மாத்திரை கேட்டு
மருத்துவமனைக்கு ஊர்வலம் போயிருப்போம்.

எந்த இலக்கிய நிகழ்வும்
சச்சரவு இல்லாமல் முடிந்ததில்லை
தேநீர் இல்லாமல் நடந்ததில்லை

எங்கள்
எழுத்தாளர்கள் முன்
ஞானபீடத் தகட்டையும்
தேநீர்க் கோப்பையும் வைத்தால்
மொத்தக் கூட்டமும்
மொய்க்கும் தேநீர்க் கோப்பையைச் சுற்றி.

இந்தக் கவிதையைப் பிறகு முடிக்கிறேன்
இப்போது
எனக்குத் தேநீர்ப் பொழுது.

-கோ. மன்றவாணன்

மகளுக்கு ஒரு மடல்


























மகளே....

எம் உயிரில் துளிர்த்து
எம் உயிராய் நிலைத்து
எம்மை வாழ வைக்கும் உயிர்சுரபி நீ

உன்னை உயர்த்தி
உயரவே
ஒவ்வொரு நாளும் மனதுக்குள்
தியான சாலை அமைத்துத்
தினம்தினம்  வேண்டுகிறோம்

உன் காலில் மலர்குத்திய போது
வாள் இறங்கியது
எமக்குள்

நீ முதல்மதிப்பெண் பெற்றபோது
நிலவு இறங்கிவந்து
பொன்னொளிர் மகுடம் ஆனது
எம் தலையில்

வாழ்க்கைப் பாதையில்
வசீகரம் காட்டி
விஷக்கொடிகள் வளைக்கப் பார்க்கலாம்.

அழகாகவே ஆடம்பரமாகவே வருவார்கள்
மாரீசன்கள்

உன்மனது
சக்கரவாகப் பறவையாய்த்
தூயதையே அருந்தி நிரம்ப வேண்டும்

கல்வியை விடவும் மேலானது
கடவுளை விடவும் உயர்வானது
ஒழுக்கம்

வானைத் தாண்டிப் பயணிக்கலாம்
வாழ்த்த வரும் அறிவுலகம்
ஒழுக்கம் தாண்டி ஓரடி வைத்தாலும்
போய்ச்சேரும் இடம்
புதைகுழி

எம் காதுகளுக்குள் பண்பினள் இவளென
எந்நேரமும் அமுதிசை கேட்கவே
வரம்தர வேண்டும் நீதான்.

கோ. மன்றவாணன்

உன் விழிகளில்...



















நிலவு வராத ஒருநாளில்
மின்சாரம் இழந்த இருளில்
பார்க்கையில்

உன் விழியிரண்டும்
ஒட்டிக் கொண்டன
என்
நனவிலும்
கனவிலும்

அன்றுமுதல்
அள்ளி அருந்துகிறேன்
தீராத கவிசுரபி

இரண்டு திரைகளில்
ஒருங்கே அரங்கேறுகின்றன
எழுதாத நாடகங்கள்

சாம்பல் பூக்க வைக்கும் அந்த நெற்றிக்கண்
ஆம்பல் பூக்க வைக்கும் இந்தச் சித்திரக்கண்

உவமைக் கவிஞர்கள் ஊமைகள் ஆவார்கள்
உன் விழிகளைப் பார்த்து

ரசித்து முடியாதபடி
எத்தனை பிரபஞ்சங்கள்
உன் விழிகளில்

-கோ. மன்றவாணன்